நாஞ்சில் நெஞ்சம் முதல் பாகம்
இங்கே!*************************************************************************************
அது, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். நன்றாகப் படித்து, குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்று நினைத்த எனக்கு பெண்கள் சகவாசம் காதலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது. வகுப்பில் பலர் கல்யாணி, சுமதி, மஹாலெஷ்மி, ஜெயஸ்ரீ, கற்பகம், ராஜவேணி என்று நினைவில் நிற்கக்கூடியவர்களாக இருந்தனர்.
இவர்களில் ஒரு சிலர் நன்கு பேச, பழகக்கூடியவர்களாகவும், பணக்காரர்களாகவும், படிப்பைத்தவிர மற்ற அனைத்து பொழுதுபோக்குச் செயல்பாடுகளிலும் அதீத நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் ராஜவேணி மட்டும் ஒரு தீர்க்கமான பார்வையுடன், என்னுடைய பெண் வெர்ஷனாக இருந்தாள். எல்லோரிடமும் பழகுவாள். ஆனால் அதில் மிகச்சரியான கண்ணியம் இருக்கும்.!
வகுப்பின் முதல் நாளில் ..லட்சியம் என்னவென்று பேராசிரியர் கேட்டதற்கு மிகத்துல்லியமாக பதில் சொன்ன சொற்பமானவர்களில் நாங்கள் இருவரும் இருந்தோம். எனக்கு என் லட்சியத்தைவிட..அவள் சொன்ன கலெக்டர் என்பது சரியோ என்றுகூட சில நாட்கள் தோன்றியிருக்கிறது. அதே போல் அன்றைய செய்திகளை மிகச்சரியாக அலசுவாள். மிகவும் அழகாக உடை அணிவாள். தன் புத்தகங்களை நேர்த்தியாக வைத்துக்கொள்வாள். அவள் மேல் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.
இந்தச்சமயத்தில்தான் ராஜவேணியிடம் என் நண்பன் அருண் தன் காதலை ஒரு கடிதத்தில் சொல்ல, கல்லூரி முடிந்து எல்லோரும் சென்றபின் அவனைத் தனியே அழைத்து, எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முடித்துவிட்டுத்தான் என் திருமணத்தையே யோசிக்கமுடியும். மேலும் நான் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயாராகும்போது பல தோல்விகள் ஏற்படும். கடைசி முயற்சிவரை காத்திருக்க உன்னால் முடியாது. இவற்றையெல்லாம் மீறி உன்னிடம் எனக்கு எந்த் ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்று மிகத் தெளிவாகக்கூறி, எனக்கான எச்சரிக்கை மணியையும் அடித்திருந்தாள்.
திடீரென்று தலையைச்சிலுப்பிக்கொண்டவனாக, இனிமேல் அவளிடம் மிகவும் மரியாதையாகப்பழகவேண்டும். நமக்கு இந்த சிந்தனை வந்ததே தவறு என்று எண்ணிக்கொண்டேன். பாழாய்ப்போனவள் நான் இப்படி நடக்க ஆரம்பித்தபின் தான் என்னிடம் மிக மிகப்பிரியமாக பழக ஆரம்பித்தாள். என்ன செய்வது? எதுவுமே வெளிப்படுத்தாமல், என்றாவது அவள் நல்ல நிலைக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்துடன் ஒதுங்கிவிட்டேன். ஒரு நண்பனாகவே படிப்பை முடித்தேன். பின்னர் ராஜவேணியைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை. எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும்போது அவளது முகம் ஒரு வினாடி வந்துபோனதை மறுப்பதற்கில்லை.
**********************************************************************************
எனக்கான இட்லியையும் வடையையும் எடுத்துக்கொண்டுவந்தது, நான் பார்த்துப்பார்த்து பெருமைப்பட்ட, படிப்பில் வெறியைத்தூண்டிய, இன்றைய என் நல்ல நிலைக்கு அடையாளமாக இருந்த, ராஜவேணி!
எனக்கு உண்மையிலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை!
'என்ன ராஜவேணி! எப்படி இருக்க? நான் குணா! தெரியலையா?'
தெரியலையே! யாரு நீங்க? நான் நீங்க சொல்ற ஆளு இல்லையே! என்று கூறி விருட்டென்று உள்ளே ஓடிவிட்டாள்.
எனக்கு இட்லியை விழுங்குவது, கிரானைட் கல்லை விழுங்குவது போல் இருந்தது. இல்லை..இவள் ராஜவேணிதான்..எதற்காகவோ நம்மிடம் மறைக்கிறாள். என்னவென்று பார்த்துவிடவேண்டும். என்ற எண்ணத்துடன் அந்த சூப்பர்வைசரிடம் இன்னும் ரெண்டு இட்லி என்றேன். மற்ற உணவுகளாக இருந்தால். கொஞ்சம் தாமதமாகும்.
உடனே அடுத்த தட்டு இட்லிக்களுடன் அவளே வந்தாள். முகம் சிவந்திருந்தது. வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு இடம் மாறியிருந்தது.
'இங்க பாருப்பா ! நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன். என்ன ஆச்சு? ஏன் இப்படி? 'என்று மிகத்தாழ்வான குரலில் கேட்டேன்.
'என்ன சார்! நீங்க சொல்ற பொண்ணு நான் இல்லைன்னு சொல்றேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க!' - என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட்டாள்.
'எனக்கு நீ ராஜவேணிதான்னு கண்டிப்பா தெரியும்..எனக்கு இட்லி போடச்சொன்னபோது கூட, வேணின்னு அவர் கூப்பிட்டாரே' !
'ஏன் ஒரே பேரில் , ஒரே மாதிரி வேற ஆள் இருக்கக்கூடாதா?' என்றாள் மிகத்தெளிவுடன்.....சிவில் சர்வீஸஸுக்கு தயார் செயதவள் ஆயிற்றே!
இனிமேல் பேசிப் பயனில்லை என்றபோதும்...கடைசிவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு..பில் எடுத்து வந்த தட்டில் என் விஸிட்டிங் கார்டைப்போட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன்.
இந்த நாஞ்சில் நாட்டில், இயற்கை அழகைப்போலவே அழகான இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. என்ன ? கொஞ்சம் அழுத்தமானதாகவும் இருந்துவிடுகின்றன். அப்போதும் , என்னிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்த அவள் பக்க நியாயங்களே சரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணமே மேலெழுந்தது.
யாராவது அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுச்சொல்லுங்களேன்!