அன்று எனக்கு அப்படி ஒரு நீராதாரம் கிடைத்தது. பொங்கி ஓட ஆரம்பித்தேன். இருமருங்கிலும் மக்கள் தங்கள் அழுக்குகளை என்னுடன் ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள்.படித்துறைகளின் பக்கம் மட்டும் கொஞ்சம் வேகத்தைக்குறைத்துக்கொண்டேன். என்னுள் இறங்கி விளையாடும் அத்தனை குழந்தைகளும் சிரமமின்றி கரையேறுமாறு பார்த்துக்கொண்டேன். நான் அக்காள் கங்கையைப்போல் கோபக்காரி அல்ல! சரயு நல்லவள்! ஆவேசம் அடையாதவள் என்று பெயர் எடுத்திருக்கிறேன். அதைக்காப்பாற்றவே தவறுதலாக விழுபவர்களைக்கூட சிறிது தூரம் இழுத்துச்சென்று பின்னர் கரையேற்றிவிடுவேன்.
மன்னன் ராமன் ஆளும் பகுதியில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகப்பெருமை! எவ்வளவு நல்லவன்! காதல் ஒருத்தியைக்கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளையும், அதர்மத்தையும் சேர்த்து வீழ்த்தி..நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறான்.
என்ன ஒரு வருத்தம்! ..சீதையை சந்தேகப்பட்டு, அவளை விலகச்செய்து, இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்திருக்கவேண்டாம்.
படித்துறைகளில் பேசும் பேச்சை பல ஆண்டுகளாய்க்கேட்டுவருகிறேன். ராமனின் ஆட்சிபற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! இப்போது ராமனுக்கு வயதாகிவிட்டதாம்.! சீதையின் நினைவில் மிகவும் வாடுகிறானாம்.!
இரவாகிவிட்டது. எல்லாப்படித்துறைகளிலும் ஆள் நடமாட்டமே இல்லை! வேடிக்கை பார்த்துக்கொண்டே நானும் பயணித்தேன். அழகான ஒரு மனிதன் படித்துறையில் இறங்கினான். அருகில் வந்ததும் பார்த்தேன். முதுமை அடைந்திருந்தான். ஆனாலும் பேரழகு! ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தான்!
இந்த வாழ்வு போதுமெனக்கு! முடித்துக்கொள்கிறேன் ! சீதா என்னை மன்னித்துவிடு!
ஓ..ராமனாக இருக்குமோ? என்று நான் அதிர்ந்துகொண்டே...
'அன்பரே! நீர் இராமபிரான் தானே? என்றேன்.
யார் பேசுவது? என்றான்!
நான் சரயு! ஓடிக்கொண்டிருக்கும் நதி!
சொல் சரயு! என்ன விஷயம்?
என்ன ராமா? வாழ்வை முடித்துக்கொள்ள வந்துவிட்டு சாதாரணமாகக்கேட்கிறீர்?
ஆம்! சரயு! ஏகபத்தினி விரதன் ராமன் தற்கொலை செய்து இறக்கப்போகிறேன்!
எனக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்துவந்தது.
என்ன ராமா இப்படிச்சொல்கிறீர்?
ஆம் சரயு! மனித ஜென்மம் எடுத்துவிட்டேன். கட்டிவந்த காதல் மனைவியை - என் நேர்மையை நிரூபிக்க - இழந்துவிட்டேன். எத்தனை ஆண்டுகள்தான் மனைவி இல்லாமல் மறுகுவது? சீதா திரும்புவாள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அவள் வரவே இல்லை! வேறு ஒரு பெண்ணை மணந்தாலும் தவறில்லை. ! ஆனால் உலகமே போற்றும் ஏகபத்தினி விரதனென்ற பெயரைக்காப்பாற்ற உணர்வுகளைப் பலியிட்டேன்! இதற்கு மேல் முடியவில்லை! என்னை சாகவாவது விட்டுவிடு!
மன்னிக்கவேண்டும் ராமா! நீங்கள் இறந்து என்னை கெட்டவளாக்காதீர்கள். சரயு நல்லவள் , ஆவேசப்படாதவள் என்று நற்பெயர் எடுத்துவைத்துள்ளேன். மேலும்...
மேலும்..?
உங்கள் அறியாமையை எண்ணி சிரிப்புதான் வருகிறது !
என்ன அறியாமை?
சீதையைத்தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத நீங்கள், என்னை மட்டும் தழுவலாமா?
பரவாயில்லை சரயு! ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைத்த உணர்ச்சிகள் அழிந்து போக வேண்டிதான் தற்கொலைக்கு முடிவெடுத்தேன். அதே உணர்ச்சிகளுக்கு நீயொரு வடிகாலாகவும் அமைந்தால், மகிழ்ந்துகொண்டே மரணிப்பேன்.
அடப்பாவி ராமா! தவறே செய்யாதவளை தண்டித்துவிட்டு, அவள் கோபம் கொண்டதற்காக, இன்னொருத்தியைத் தேடி வந்திருக்கிறாயே? உன்னை மனிதரிலேயே சேர்க்க முடியாது! தெய்வமென்று யார் சொன்னது? உன் பராக்கிரமங்கள் கேள்விப்பட்டு பிரமித்தவள் நான்..ஆனால் என் அனுமதி இல்லாமல் என்னை நீ தீண்டுவதை நான் விரும்பவில்லை!
நான் உன்னைத்தீண்டுவது , உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் சரயு!
உலகமே உன்னை தெய்வமெனக்கொண்டாடுகிறது ராமா! நீ இவ்வாறு முடிவெடுத்தால், நாளை என்ன சொல்லும்?
நான் இருக்கும் வரை என்ன சொன்னது? அதையே சொல்லட்டும்! ராமன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்று சொல்லும்!
உனக்கும், உலகுக்கும்தான் அது தற்கொலை ! ஆனால் என்னை நீ தீண்டிவிட்டாலே அது நீ என்னை செய்யும் கொலை!
உன்னிடம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை சரயு! உன் அனுமதியும் தேவை இல்லை! இதோ உனக்குள் இறங்குகிறேன்.
வேண்டாம் ராமா! வேண்..........
உள்ளே இறங்கிய ராமனை நான் கரைப்பக்கம் தள்ளப்பார்க்க... என்னை ஆரத்தழுவி ஏகாந்தமாய் அமிழத்தொடங்கினான். சீதையை ஏந்திக்கொடுத்த அக்னிதேவனாக இருக்கமுடியாது என்னால்!
கடைசிவரை, தன் நற்பெயருக்காக எவர் வாழ்வையும் நாசம் பண்ணத் துணிந்த ராமா! இனி உன்னை யாராலும் காக்க முடியாது.
ஆவேசமாய்ச் சுழன்றடித்தேன் நான்!