ஓமப்பொடி # 9



    


       உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால், நமது இரத்த அழுத்தம், அளக்கும் கருவியின் பாதரசம் வெடித்து வெளிவரும் அளவுக்கு எகிற வைக்கிறது.

     பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, பெட்ரோலிய நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு பொதுமக்களின் சிரமத்தை வேடிக்கை பார்க்கும் கையாலாகாத மத்திய அரசு, தனக்கான செலவினங்களில் ஒரு பைசா கூட குறைத்துக்கொள்ளாமல், அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள், அரசு அலுவலர்களுக்கான சலுகைகளை மட்டும் சிறிது சிறிதாக ஏற்றி வருகிறது. இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மத்திய நிதி அமைச்சகத்தில், மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
    பெட்ரோல் விலையை அரசு நிர்ணயிக்கும் அதிகாரம் இருக்கும்போதும், எண்ணெய் நிறுவனங்கள் , கச்சா எண்ணெய் விலைவாசியை வைத்து, விலையை மாற்றும்படி அரசை நெருக்கத்தான் செய்திருக்கின்றன. ஆனால், அரசு அவர்களது பெட்ரோலிய வரி வசூலில் இருந்து ஒரு பகுதியை மானியமாக அளித்து, சமாளித்திருக்கிறார்கள். இப்போது, தனது வரி வசூலில் ஒரு பைசா கூட தரமுடியாது என்று அரசு முடிவெடுத்ததால்தான், எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இவையும் முழுமையான தனியார் நிறுவனங்கள் கிடையாது. ஆகவே அரசு சார் நிறுவனங்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டே , இந்த ஆட்டம் ஆடுகிறார்கள். இதில் இரண்டு தரப்புமே கயவர்கள்தான் என்றார்.

இதில், ஹைலைட் என்னவென்றால், கடந்த மாதத்தில், எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு அகவிலைப்படிச் சலுகைகளும் , பயணப் படிகளும் அதிகரித்திருக்கிறார்களாம். அதற்கான நிதியாக சுமார் 12.4 கோடி ரூபாய் ஒதுக்கிக்கொண்டு நிதி அமைச்சகத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் காரணம்..

”பெட்ரோல் ,டீசல் விலை உயர்வினால், பயணப்படி அதிகரிக்கிறோம்!”

அட நாசமத்துப் போவாய்ங்களா!!

 ***************************************************************************

விஸ்வரூபத்தைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை? கமல் படத்தில் வேலைபார்த்தவர் என்ற அடக்கமா? அல்லது பிடிக்கவில்லையா? அதைப்பற்றி எதுவும் குறையாக எழுதிவிடக்கூடாது என்ற பயமா? பாராட்டி எழுதினால், மற்றவர்கள் உங்களை ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்ற ஐயமா? என்று சில நண்பர்கள் மெயிலிலும், நேரிலும் கேட்டுவிட்டார்கள்.

     எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதனை விவரித்து எழுதத் தோன்றவில்லை. தோன்றினால் எழுதுவேன். அவ்வளவுதான்! தசாவதாரத்துக்கும் நான் விமர்சனம் எழுதவில்லை. மேலும், கமலஹாசனையும், அவரது படைப்பையும் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு எனக்கு பக்குவம் இருப்பதாக உணர்கிறேன். அவரது தொழில் அறிவும், அதன்மீது கொண்ட ஈடுபாடும் எனக்கு மிகமிகப் பிடிக்கும். அவருடன் இரண்டு நாட்கள் வேலைபார்த்தால் அது உண்மையில் தெரியவரும். அவரது படைப்பை வைத்து காவடி ஆடுபவர்களுக்கு, அவரது தொழில் பக்தியை, அடுத்தவர்களைப்பற்றி அதிகம் மூக்கைச் சொறிந்துகொள்ளாமல், தன் வேலையில் கவனமாக இருப்பதைக் கற்றுக்கொள்ளச் சொல்லவேண்டும் என்று ஆசை! சினிமாவில், மேன்மையும் , மேலாண்மையும் தெரிந்த மிகச் சொற்பமான மனிதர்களில் கமல் முதன்மையானவர் என்பது என் தாழ்மையான கருத்து!

இந்த விஷயத்துக்காக, ரூம் போட்டு , என் மூளைக்குள் அமர்ந்து , அதற்காக யோசித்த நண்பர்களின் அதீத ஆர்வத்தையும், அக்கறையையும் நினைத்து பெருமிதத்தில் நெஞ்சம் விம்முகிறேன். :)

************************************************************************

இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த நண்பர்கள் சந்திப்பில்,  இன்றைய மருத்துவத்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அதன் அவலங்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அன்று காலை 10 மணிக்கு விஜய் டிவியில், ‘என் தேசம் என் மக்கள்’ என்ற நிகழ்ச்சியில், நண்பர் கோபிநாத் மருத்துவத்துறையின் அவலங்களைப் புட்டுப் புட்டு வைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மருந்தின் தயாரிப்பு, வியாபாரத்துக்குப் பின்னால், எப்படி நோயாளிகளிடம் மருத்துவர்கள் காசு பிடுங்குகிறார்கள் என்று சொன்னார்கள். அமீர்கானின் ‘சத்யமேவ ஜெயதே’ யின் தமிழ் வடிவம்தான் என்றாலும், மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாகப் பட்டது. இதுபோன்று சமூகத்தின் அவலங்களைப் பற்றி அலசி, விழிப்புணர்வு தூண்டும் நிகழ்ச்சிகளைக் கொடுக்கத் தொடங்கினால், தொலைக்காட்சி என்றாலே சினிமாதான் என்ற எண்ணம் இன்றைய குழந்தைகளுக்கு வருவதைத் தவிர்க்கலாம். இன்னும் பேசுவதற்கு நிறைய தலைப்புகள் இருக்கின்றன.

கல்வி அராஜகங்கள், வேலைப் பிரச்னைகள், தொழில் சிரமங்கள், குடும்ப அமைப்பின் தோல்விகள் என்று சொல்லிக்கொண்டே போகமுடியும். அனைத்தையும் நிச்சயம் தொடுவார்கள் என்று நம்புவோம். அதன் தயாரிப்பு நிறுவனமான மெர்குரி நெட்வொர்க்கின் திரு.சாய்ராம் மிகச் சிறந்த சிந்தனையாளர். அவர்போன்ற மனிதர்கள் மீடியாவில் இருப்பதால்தான் ஓரளவுக்கு நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன. என் தேசம் என் மக்கள் குழுவுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் !

*********************************************************************

    ஒரு சாஃப்ட்வேர் நண்பன் சொந்தக் கிராமத்துக்கு ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருக்கிறான்..

ஒரு பெரியவர் ‘என்னடா வேலை பாக்குற?’ என்று கேட்டிருக்கிறார்.

”சாஃப்ட்வேர்” என்றிருக்கிறான்.

“ம்..சரி” என்று சொன்னவர்.. கொஞ்ச நேரம் இவனிடம் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல வந்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் அந்த ஊரில் பல ஆண்டுகளாக சிற்றுண்டி விடுதி வைத்திருக்கிறார் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்!

விழா முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது, அவரது கடையின் முன்னால்தான் பேருந்துக்கு நிற்கவேண்டும்.

அப்போது அவர் அவனிடம் வேகவேகமாக ஓடிவந்து கேட்டிருக்கிறார்..

”தம்பீ! ஏதோ சாப்டுவேரு கடைல வேல பாக்குறேன்னியே!... அங்க ஒரு நாளைக்கு எத்தன சாப்பாடு ஓடும்?”

செத்தான் சிவகிரி!  :)




Comments

  1. சாஃப்ட்வேர இப்படியும் யோசிக்க முடியுமா!!!ஹி...ஹி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. 1) தலை'எழுத்து'... (நம்)

    2) சுருக்... நறுக்...

    3) மின் வெட்டு...

    4) ஹா... ஹா... நன்றி... மிக்க நன்றி...

    ReplyDelete
  3. சுரேகாஜி,

    பெட்ரோல் இல்லாமல் வாழ்வது எப்படினு கற்றுக்கொள்ள வேண்டும்,சும்மா பெட்ரோல் விலை ஏறிப்போச்சுனு சொல்லிக்கிட்டு இருந்தா ,பொருளாதார புலி "பி.சி", 150 ரூவாக்கு சாண்ட் விட்ச் சாப்பிடும் மக்கள்,1000 ரூவாக்கொடுத்து சினிமா பார்க்கும் மக்களால் பெட்ரோலுக்கு ஒரு ரூவா விலை ஏறினால் வாங்க முடியாதானு கேட்பார்,தேவையா இது -))

    #// சினிமாவில், மேன்மையும் , மேலாண்மையும் தெரிந்த மிகச் சொற்பமான மனிதர்களில் கமல் முதன்மையானவர் என்பது என் தாழ்மையான கருத்து!//

    ஹி...ஹி :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வாலு... சொன்ன அடுத்த வாரமே விலையை இன்னும் அதிகமாக்கிட்டானுங்க!

      அந்தச் சிரிப்புக்குப் பின்னால வேற என்னமோ தெரியுதே! :)

      Delete
  4. இந்த முறை என் தேசம் என் மக்கள் டாபிக் நல்லா இருந்தது. நீங்க சொல்றமாதிரி எல்லா டாபிக்குகளையும் ட்ச் செய்வாங்கன்னு நம்பறேன் பாப்போம்.

    சாஃப்டுவே ---- சூப்பர் :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புதுகைத் தென்றல்...

      Delete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !