பண குணம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS5KJiZGgLptsKraK46BxTuLf-9q1PAUauAbSjzljlidnMCNRQJeIqCj7acbK3uOTFa0ttWuYxn_wTyTs-mTJyTy3Q4ZbWCKBuJNIzJrMzCxTHJ7r1VJjfwKKvusgdvdZ6LWb4QUxLNmc6/s320/Money+Mind+Dollar.jpg)
பணம்.. நம் அன்றாடத்தேவைகள் மட்டுமன்றி, நம் வாழ்க்கையையே நிர்ணயிப்பதாக அமைந்துவிட்டது. அதை வைத்து மனிதர்களுக்குள் வரும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல.! ஒருவரது அடிப்படை குணத்தை, அவர் பணத்தைக் கையாளும் தன்மையையும் வைத்துத்தான் நாம் எடைபோடுகிறோம். அதுவும் அவர் எப்படி தனக்கான கொடுக்கல் வாங்கல்களைச் செய்கிறார் என்பதை வைத்து அவரது குணாதிசயத்தை நிர்ணயிக்கிறோம். உண்மையில், பண குணம்தான் எல்லோரையும் பற்றி நமக்கு உலகுக்கு எடுத்துரைக்கிறது. இதில் அடிப்படையாக இரண்டு விதம்.. கொடுப்பவர்,- 50 பைசா பிச்சை கொடுப்பவரிலிருந்து, அரை லட்சம் அவசரத்தேவைக்குக் கொடுப்பவர் வரை அனைவரும் கொடுப்பவரே! வாங்குபவர்..!! -கடையில் சாக்லெட் வாங்குவதிலிருந்து, கால் கோடி கடன் வாங்குவது வரை – அனைவரும் வாங்குபவரே..! இருவருக்குமிடையேயான உறவில்தான் ஒருவருடைய பணகுணம் நிர்ணயிக்கப்படுகிறது. நம்மில் எத்தனையோ நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு காலகட்டங்களில் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும். அது ஒரு உணவகத்தில் சாப்பிடும்போது இருக்கலாம். மொத்தமாக ஐந்தாறு குடும்பங்கள் ஒரு பிரயாணம் செய்யும்போது இருக்கலாம்.