தயவுசெய்து பாத்துப் போங்க!

பழனி..

என்ன சார்..

ஏன்ப்பா இந்தப்பெரிய வண்டிய வச்சிக்கிட்டு
ரொம்பதூரம் வந்துட்டு போற..அதுவும் ரொம்ப பெட்ரோல் சாப்டுதுன்னு சொல்ற!
அதுனால பஸ்ஸுல வந்துட்டுப்போயேன்...பிரச்னையே இல்லை!

பரவாயில்ல சார்..நான் பாத்துக்குறேன்.

அடுத்தநாள்

சார்...
என்னப்பா பழனி..
இன்னிக்கு லீவு போடலாம்னு நினைச்சேன் ..நீங்க ப்ரான்ச்சுக்கு வரேன்னு சொன்னீங்களாம். அதுனால இன்னிக்கு வந்துடுறேன் சார்..ஆனா நாளைக்கு ஒரு நாள் லீவு வேணும் சார்!

சரிப்பா..ஆனா நான் கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். அதுக்கு முன்னாடி பெண்டிங் வேலையெல்லாம் பாத்துடு !

சரி சார்..!

அன்று நண்பகல் வரை பழனியிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை.!
ஆனால் அவன் அலுவலகத்துக்கு வரவும் இல்லை!
என்ன ஆயிற்று என்று கேட்கலாமென்று செல்லுக்கு தொடர்புகொண்டால், அது அணைந்திருந்தது.
சில நிமிடங்களில் பழனியிடமிருந்து போன்..!

சார்..

என்னப்பா ! ஏன் இன்னும் ஆபீஸ் வரலை போல?

நான் ஆபீசுக்கு வந்துக்கிட்டிருந்தேன்.

சரி..

அப்ப ஒரு அம்மா குழந்தைகளோட ரோட்டை க்ராஸ் பண்ண வந்தாங்க
வண்டியப்பாத்ததும் அவங்க நின்னுக்கிட்டாங்க..ஆனா குழந்தையைப்பிடிக்காம விட்டுட்டாங்க
திடீர்ன்னு நாலுவயது பெண் குழந்தை குறுக்க வந்துடுச்சு..!
ஆஹா மோதிரப்போறோமேன்னு நினைச்சு ப்ரேக் போட்டேன். பைக்கோட கீழ விழுந்துட்டேன்.

அய்யய்யோ எதாவது அடிபட்டுருச்சா?

இல்ல சார்! ஒரு கீறல்கூட இல்லை சார்..! ஆனா அதைவிட பெரிசா நடந்துருச்சு சார்!

என்னப்பா..

அந்தக்குழந்தை மேல பைக் விழுந்துருச்சு !

அய்யய்யோ அப்புறம்..

குழந்தை பேச்சு மூச்சில்லாம கிடந்துச்சு!

ஆஹா..

உடனே எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.

என்ன ஆச்சு!?

ஆனா ஆஸ்பத்திரியில் , குழந்தை இறந்து போச்சுன்னு சொல்லிட்டாங்க சார்!

அய்யய்யோ....என்னப்பா சொல்ற..? குழந்தை இறந்து போச்சா?

ஆமா சார்..நான் இப்ப ஜி ஹெச் சுக்கு வந்திருக்கேன். குழந்தையை போஸ்ட்மார்ட்டத்துக்காக கொண்டுபோயிருக்காங்க!
இப்ப என்ன சார் செய்யிறது?

எனக்கு கிடுகிடுவென்று ஆடிவிட்டது.
நம்மிடம் வேலைபார்க்கும் ஒரு ஊழியர், விபத்து நடந்துவிட்டது என்று சொன்னால் , பாத்துப்போகவேண்டியதுதானே என்று கூறிவிட்டு, முடிந்தால்
அவரைச்சேர்த்திருக்கும் மருத்துவமனையில் போய்ப் பார்த்துவிட்டு வரும் மனநிலையில் உள்ள நான், விபத்தில் இன்னொரு உயிர் போய்விட்டது எனும்போது ஸ்தம்பித்துப்போய்விட்டேன். அதுவும் ஒரு குழந்தை எனும்போது என்னால் சில நிமிடங்கள் அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிக்கவே முடியவில்லை.

உடனே போலீஸ் ஸ்டேஷனில் அவரைச் சரணடையச்சொல்லிவிட்டு,
அதற்குப்பிறகு, உள்ளூர் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களிடம் பேசி அவர்கள் மூலமாக அந்த ஊர் போலீஸ் அதிகாரிகளிடம்
பேசி, பழனி மேல் உண்மையிலேயே தவறில்லை என்பது விசாரிக்கப்பட்டு, அவர் அனேகமாக இன்று அல்லது நாளை பிணையில் வெளிவருவார்.

இந்தச்சம்பவம் சில கேள்விகளையும் பதில்களையும் தந்திருக்கிறது.

1. எப்போது வாகனத்தை வெளியில் எடுத்தாலும், விபத்து நடந்து நமக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்றுதான் நாமும் , நம் உறவினமும் எண்ணுவோம். நம்மால் இன்னொரு உயிரும் போய்விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
2. நம்மால் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு உயிர் போய்விட்டால், அது சட்டப்படி மிகப்பெரிய தவறு அல்ல! கவனக்குறைவாக வண்டி ஓட்டியதற்காக அபராதம் ரூபாய் 250 கட்டினால் போதும். குற்றவாளிக்கு பெயிலும் உடனே கிடைத்துவிடும்.
3. போலீஸாரைப்பொறுத்தவரை விபத்தில் யார் இறந்தாலும், ஒன்றும் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கு சிபாரிசு இருந்தால், அவனுக்கு கொஞ்சம் சலுகைகள் அதிகம்தான்.

4. வண்டி ஓட்டிச்சென்றவன் இவன், குழந்தையை பிடித்துக்கொள்ளாதவர் அந்தத்தாய்... ஆனால் மரண தண்டனை ஏன் அந்தக்குழந்தைக்கு அளிக்கப்பட்டது ?
இது எதுமாதிரியான வாழ்வமைப்பு?

5. விபத்துகளை எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் நடந்துவிடாமல் தவிர்ப்பதற்கு கடைசிவரை முயற்சிக்கவேண்டும்.


தயவு செய்து...வாகனங்களை ஓட்டும்போது...யாருக்கும் எதுவும் நடந்துவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக செல்லுங்கள் நண்பர்களே! எத்தனையோ குழந்தைகள் கனவுகளுடன் சாலையின் இருபுறமும் காத்திருக்கின்றன.

Comments

  1. எனக்கு என்ன என்னவோ நியாபகம் வருது சுரேகா!


    அண்ணே கார் கீ குடுங்க


    அப்பா நானும் காயத்ரி ஆண்டிய சுரேகா அங்கிள் கூட போய் கூட்டிகிட்டு வரேன்

    ------------------------


    பார்த்து போங்கப்பா சுரேகா!

    ReplyDelete
  2. வீட்டைவிட்டு வெளியே போரவங்க பத்திரமா வீடு திரும்புவது அவுங்கவுங்க விதி நல்லா இருந்தாத்தான்னு சொல்லிக்கிட்டு இருப்பேன். அப்படி ஒரு ட்ராஃபிக் நம்மூர்களில். ஒழுங்கு, வரிசை, லேன்லே போறதுன்னு ஒன்னுமே இல்லை. மக்களும் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமா கண்ட இடத்தில் க்ராஸ் பண்ணறாங்க.

    பெடஸ்ட்ரியன் க்ராஸிங்லே ஒருத்தரும் வண்டியை நிறுத்ததே இல்லை.

    திக் திக் ன்னு இருக்கும் எனக்கு அங்கே பயணம் செய்யும்போது(-:

    ReplyDelete
  3. mmmm - நமது ஊரில் டிராபிக் சென்ஸ் என்பதே இல்லை- இது பிரச்னை தான் -நாம் அனைவருமே பல்வேறு அழுத்தங்களுக்கு இடையே தான் வண்டு ஓட்டுகிறோம். விதி வலியது எனைல் ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கிறோம்

    ReplyDelete
  4. ச்ச.. என்ன ஒரு கொடுமை? 1 நொடி கவனக் குறைவுக்கு ஒரு பிஞ்சு உயிர் பலியா? :(

    ReplyDelete
  5. //எத்தனையோ குழந்தைகள் கனவுகளுடன் சாலையின் இருபுறமும்//

    enna solrathunne theriyala

    ReplyDelete
  6. //1. எப்போது வாகனத்தை வெளியில் எடுத்தாலும், விபத்து நடந்து நமக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்றுதான் நாமும் , நம் உறவினமும் எண்ணுவோம். நம்மால் இன்னொரு உயிரும் போய்விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.//

    கேட்க மிக சங்கடமா இருக்கு. கார் ஓட்ட கற்றுக் கொள்ளும்போது மிகவும் பயந்தேன். அதற்கு முன் பல வருடங்கள் பைக் ஓட்டி, ரோடு சென்ஸ் எல்லாம் இருந்தாலும், நம்மால் மற்றவருக்கு அபாயம் கார் ஓட்டுவதில் (பைக் ஓட்டுவதைக் காட்டிலும்) என்று நிறைய பயந்தேன். அந்த எச்சரிக்கை உணர்வு இப்போதும் இருக்கு.

    குழந்தை மரிப்பது எந்தத் தருணத்திலும் ...கொடுமை.

    ஏப்ரல் 1 பதிவு என்பதால், 'இது நிஜம் இல்லை; சும்மா' என்று இருந்துவிடக் கூடாதான்னு இருக்கு.

    அனுஜன்யா

    ReplyDelete
  7. 4வது கேள்வி முகத்தில் அறைகிறது.


    :-(

    ReplyDelete
  8. பாவ‌ம் அந்த‌ குழ‌ந்தை

    :(

    ReplyDelete
  9. //துளசி கோபால் said...

    வீட்டைவிட்டு வெளியே போரவங்க பத்திரமா வீடு திரும்புவது அவுங்கவுங்க விதி நல்லா இருந்தாத்தான்னு சொல்லிக்கிட்டு இருப்பேன். அப்படி ஒரு ட்ராஃபிக் நம்மூர்களில். ஒழுங்கு, வரிசை, லேன்லே போறதுன்னு ஒன்னுமே இல்லை. மக்களும் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமா கண்ட இடத்தில் க்ராஸ் பண்ணறாங்க.

    பெடஸ்ட்ரியன் க்ராஸிங்லே ஒருத்தரும் வண்டியை நிறுத்ததே இல்லை.

    திக் திக் ன்னு இருக்கும் எனக்கு அங்கே பயணம் செய்யும்போது(-://

    உண்மை... பெரும்பாலும் நம் ஊர்களில் நிலைமை இப்படித் தான்

    ReplyDelete
  10. மனம் கனக்கச்செய்யும் நிகழ்வு :-(

    ReplyDelete
  11. Very saddening, Although we can complain on many factors, the loss of a life - that too a kids is very disturbing. I am thinkin from the view of the guy
    How guilty and depressing it would be for him?
    How the mother would have felt for the loss! - she might even see him as villain.
    For police its just another case, they may even make money out of it.

    Nama dhaan polambittu erukkom :(

    p.s: Came to ur post through thulsi dhalam.

    ReplyDelete
  12. வாங்க அபி அப்பா!

    உங்கள் ஞாபகசக்திக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க!

    எல்லாரும் நல்லா இருக்கணும்..!

    ReplyDelete
  13. வாங்க துளசி அம்மா!
    எத்தனை மாசமாச்சு இந்தப்பக்கம் பாத்து!

    அடிக்கடி வந்துபோங்க! (நீ ஒழுங்கா பதிவு போடு - இது..நீங்க)

    ஆமா..திக் திக் குன்னுதான் இருக்கு!

    ReplyDelete
  14. வாங்க யாத்ரீகன்..

    மிகவும் கஷ்டப்ப்டுத்திவிட்டது...

    ReplyDelete
  15. ஆமா சீனா சார்..!

    இப்ப நான் வாகனம் ஓட்டும்போது செல்போனைத்தொடுவதில்லைன்னு முடிவெடுத்திருக்கேன்.

    அதுபோல் வேகமும்..!

    ReplyDelete
  16. வாங்க சஞ்சய்

    ஆமாங்க..நான் இப்பவரைக்கும் அந்தக்குழந்தைக்காகவும்...அதன் கடைசி நிமிட வலிக்காகவும்தான் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  17. வாங்க அனுஜன்யா

    //ஏப்ரல் 1 பதிவு என்பதால், 'இது நிஜம் இல்லை; சும்மா' என்று இருந்துவிடக் கூடாதான்னு இருக்கு.//

    எனக்கும் அப்படித்தாங்க...இந்த வாரமே என் காலண்டரில் காணாமல் போயிருக்கக்கூடாதான்னு இருக்கு!
    :(

    ReplyDelete
  18. வாங்க பாபு...

    பெருஞ்சோகமாப்போச்சுங்க!

    ReplyDelete
  19. வாங்க பரிசல் அண்ணாச்சி!

    மனசு முழுக்க நிறைஞ்ச கேள்விங்க அது!

    ReplyDelete
  20. வாங்க மின்னல்...
    ஆமாங்க அது என்ன பாவம் பண்ணிச்சுன்னு தெரியலை!

    ReplyDelete
  21. வாங்க எட்வின்...

    குறைந்த பட்சம் நாமளாவது இனிமே நல்லபடியா வண்டி ஓட்டி யாரும் இடறில்லாமல் இருக்கணும்..!

    ReplyDelete
  22. வாங்க சென்ஷி சார்..

    இங்க பகிர்ந்துக்கிட்டதுக்கப்புறம்தான் நிறைய பாரம் இறங்கியிருக்கு!

    ReplyDelete
  23. வாங்க ஸ்ரீவத்ஸ்..

    ஆமாங்க அதைச்சொல்லவிட்டுட்டேன். அநதப்பையனை குற்ற உணர்ச்சி கொன்றுகொண்டிருக்கிறது. நாங்கள் அவனை தேற்றிக்கொண்டிருக்கிறோம்.

    - துளசி அம்மாவுக்கு நன்றி-

    ReplyDelete
  24. //நம்மூர்களில். ஒழுங்கு, வரிசை, லேன்லே போறதுன்னு ஒன்னுமே இல்லை. மக்களும் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமா கண்ட இடத்தில் க்ராஸ் பண்ணறாங்க.//

    ஆமாங்க டீச்சர் ! ரொம்ப மோசம் . நம்ம ஆளுங்க எப்பதான் திருந்துவங்களோ தெரியலை .
    நம்ம ஊரில் வண்டி ஓட்ட பழகு பவர்கள் அனைவருக்கும் ரோல் மாடல் தனியார் பஸ் ஓட்டும் டிரைவர்கள் தான் .
    அந்த குழந்தையை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது !

    ReplyDelete
  25. இன்னொரு சிறு கதையோன்னு நினைச்சா நீ பாட்டுக்கு இத வும்மைங்கிறே... அடப் போங்கப்பா, நானே நடை வண்டி ஓட்டுறவன் இதில "நானோ" வேற இறக்கப் போறாய்ங்க, என்னவெல்லாம் கேள்விப் பட போறோமோன்னு நெஞ்சு கொல நடுங்குது.

    ReplyDelete
  26. என் கணவரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் மணி 10 ஆகியும் வேலைக்கு வரவில்லையே என போன் செய்து பார்க்க 108 ஆம்புலன்ஸ் அசிஸ்டெண்ட் போனில் ”சார் நீங்க கேக்கற ஆள் ஆக்சிடெண்ட் ஆகி மூளை வெளியில வந்திருச்சு, ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்கிட்டு இருக்கோம்னு” சொல்ல பதறி அடிச்சு போய் பார்த்தார்.

    2 மாதங்களாகிவிட்டன கோமாவில் தான் இருக்கிறார்.

    இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete
  27. :(((((((((

    ;;;;;;;;;;;;


    ரோடை அகலப்படுத்தறேன்னு அகலப்படுத்தீட்டானுங்க இப்ப பைக் ஓட்டவே ரொம்ப பயமா இருக்குப்பா இந்த பஸ்காரனுங்க சல்லை தாங்க முடியலை 100 கிமி வேகத்துலதான் போகறானுங்க டூ வீலரை எல்லாம் பொருட்படுத்தறதே இல்லை :(((

    ReplyDelete
  28. //4. வண்டி ஓட்டிச்சென்றவன் இவன், குழந்தையை பிடித்துக்கொள்ளாதவர் அந்தத்தாய்... ஆனால் மரண தண்டனை ஏன் அந்தக்குழந்தைக்கு அளிக்கப்பட்டது ?
    இது எதுமாதிரியான வாழ்வமைப்பு

    //

    யா அல்லா

    :((

    ReplyDelete
  29. நெம்ப கஷ்ட்டமாதேன் இருக்குதுங்கோ ...... !! இருந்தாலும் இந்த பதிவு ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவா இருக்குது......!!!!!

    ReplyDelete
  30. //ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !


    http://rddr786.blogspot.com/h // என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
    என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..

    என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்
    நன்றி!
    இவன்
    http://rddr786.blogspot.com/h
    '' ரெட்டியூர் Express ''

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !