இறைவி - எண்ணங்கள் எனது !











 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று!

இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது.


கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார்.


ஆண் – நெடில்..  பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

”அன்னிக்கு மழை சார்..! பொண்டாட்டி ஃபோன் பண்ணி, சூடா இட்லி செஞ்சுருக்கேன். பிள்ளைங்க காத்திருக்கு! சீக்கிரம் வந்துருங்கன்னா! சரின்னு சொல்லிட்டு, வண்டியை எடுத்தேன். எனக்கு 40ஆயிரம் தரவேண்டியவன் வேகமா முன்னாடி போனான். ரொம்ப நாளா டபாய்ச்சிக்கிட்டிருந்தான். உடனே அவன் பின்னாடியே போனேன். வீட்டுக்குள் போய் கதவைச் சாத்தினான். உடனே போய் கதவைத் தட்டுறேன். அவன் பொண்டாட்டி வந்து, “அவர் வீட்டில் இல்லைங்கிறா!” மரியாதையா இப்போ வெளிய வரச்சொல்லுங்கிறேன். ஆம்பிளை இல்லாத வீட்டில் தகராறு பண்றியான்னு கேட்டுட்டு பட்டுன்னு கதவைச் சாத்திட்டா! எனக்கு “சுர்”ருன்னு ஏறிடுச்சு! பக்கத்தில் கிடந்த கடப்பாரையை எடுத்து கதவைக் கொத்தினேன். ரெண்டாவது கொத்துக்கு கொஞ்சம் பின்னாடி போய்ட்டு வேகமா வந்தேன்.. அந்த கிறுக்கன் கதவைத் திறந்துட்டான். கடப்பாரை நேரா நெஞ்சுல ஏறிடிச்சு! அவன் போய்ட்டான். நான் வந்துட்டேன்! ஆனா.. என் பொண்டாட்டி ”யாரைப்பத்தியுமே யோசிக்காம அப்படி என்னய்யா கோபத்தைக்கண்ட?”ன்னு கேட்டுட்டுப் போய்ட்டா! அதுக்கப்புறம் என்னைப் பாக்கவே வரலை! 4 வருஷம் ஆச்சு என்றார்.

இப்படி ஒருவர் இல்லை… ஆத்திரத்தில் ஒரு விநாடியில் குற்றம் செய்துவிட்டு, அதனால், குடும்பம் பாதிக்கப்பட்டவர்கள், மனைவியை இழந்தவர்கள், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட மனைவிகள், வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் பெண்கள், கொலை செய்தவர்கள் வீட்டிலேயே வேலை பார்க்கும் சகோதரிகள் என்று பல்வேறு கதைகள்! அன்று அவர்களுக்கு மன அழுத்தம் போக்கச் சென்ற நான், மன அழுத்தத்துடன் வெளிவந்தேன் என்பதுதான் உண்மை. ! திரும்ப வரும்போது, காரில் தெரியாமல் இடித்த ஆட்டோக்காரரிடம் சினேகமாகப் புன்னகைத்ததுதான் என்னுள் ஏற்பட்ட மாற்றம்!

அப்படி ஒரு மாற்றத்தை,  ஆ- நெடில்களிடம் ஒரு மைக்ரோ மீட்டர் அளவுக்காவது இறைவி ஏற்படுத்தியிருக்கும்.

கனியிருப்பக் காய் கவராததால்..படத்தில் சிலாகிக்க நிறைய இருப்பதாகவே உணர்கிறேன். அடிப்படையில் பெண்களைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்கும். ஆனால், அவர்களை மதித்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கும். அதைச் செய்யச்சொல்லி ஆண்கள் வழியே வெளிவந்திருக்கிறாள் இறைவி!

     வடிவுக்கரசி ! அவர் , தன் சொந்தங்கள் முன் அவமானப்படுத்தியதைச் சொல்லி வருந்திவிட்டு, கடைசியில் அவர் கண்ணாடியை எடுத்துவைக்கச் சொல்லும் அக்கறை கலந்த நிதானம்தான் – இறைத்தன்மை!

    யாழினி ! சொல்லச் சொல்ல குடிக்கிறான் என்று தெரிந்தும், ஏதோ ஒரு நப்பாசையில், அவனது அப்பா, அம்மாவுக்கும் சேவைகள் செய்துவிட்டு, தன் நேரத்தை குழந்தைக்காகச் செலவழித்து, சொந்தக் கனவுகளைப்புதைத்த நிதானம்தான் – இறைத்தன்மை

    மலர் !  காமம் தேவைப்பட்டது – காதலும் உண்டு! ஆனால், இவனுடன் வாழத்துவங்கினால், சராசரியாக முன் வாழ்க்கைபற்றி கேட்டு ஏதாவது பிரச்னை வந்துவிட்டால்? அவன் புதிய வாழ்க்கை துவங்கட்டும்! நம் பேர் கெட்டதாகவே இருக்கட்டும்! – நம் ஆசைக்கு முடிவெடுத்தால், பின்னர் அவன் குடும்பம் அவனை ஒதுக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒதுங்கும் நிதானம்தான் – இறைத்தன்மை!

    பொன்னி ! – நிறையக் கனவுகளுடன் ஆரம்பித்தோம். சொதப்புகிறது. ஆனால், அதற்காக விட்டுவிடக்கூடாது. அவனுக்கு பிரச்னை வரும் இடத்திலிருந்து விலகச் சொல்வோம். காதலிக்கிறேன் என்று இன்னொருவன் சொல்கிறான். அது நம் விருப்பமாக இருக்கலாம். ஆனால், இதை நம்பிச்சென்றால், நம்மை நம்புபவன், குழந்தை என்னாவது? விலகிச்செல்வோம். விருப்பம் புதைப்போம்! கணவனாக வந்த ஆணை, சரிப்படுத்தி, கனவு வாழ்க்கையை முயல்வோம் என்று நம்பி நம்பி நொந்து போனாலும், அதற்காக யாரையும் குறைசொல்லிச் சீறாத நிதானம்தான் – இறைத்தன்மை!

    ஆணுடன் சேர்ந்து வாழ்ந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்துவதை விட… இதோ பார்! அவளால் தனியாக இன்னும் சிறப்பாக வாழமுடியும். மலர் மாதிரி வாழ்ந்தா, எவ்வளவு வேகமா மழைல நனைஞ்சுகிட்டே பைக்கை எடுத்துக்கிட்டு போற,.. அப்படித்தான் போவ! உன்னை ஒரு இடத்தில் சரியாகப் பயணிக்க வைக்க, அவள் அறுத்துக்கொண்டு போகாமல் இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது இறைவி!

    ராதாரவியின் குற்ற உணர்ச்சி, - வித்தையில் சிறந்தவர், ஆனால் வீட்டில் சரியில்லாமல்தான் இருந்திருக்கிறார். அது அவள் நோயில் படுத்தபின் உணர்ந்து பயனில்லை.

    எஸ் ஜே சூர்யாவின் திசைமாற்றம் – நல்ல படம் எடுத்து, வெளிவராததால், குடிப்பேன். குடும்பம் பற்றிக் கவலை இல்லை!

    விஜய் சேதுபதியின் ஆவேசம் – நல்லவந்தான்.. ஆனா கோவக்காரன்! அதுதான் மூன்று குடும்பங்களைச் சிதைக்கும் ஆயுதம்!

    ஜெகன் – தேவைக்காக சட்டத்தையும், ஒழுக்கத்தையும் மீறலாம் என்ற தைரியம்! இது பெண்ணிடம் இல்லை என்பதை, அவர் வாயாலேயே சொல்லவைத்த அழுத்தம்!


        சித்தப்பா -( சீனு)  அனைவரது தவறுகளையும் ஏற்றுத் தாண்டிச் சென்று, நிதானமாக அனைத்தையும் அணுகும் ஒரே ஆண்! எல்லா ஆணும் மோசமில்லை என்பதற்கான ஒரு சோறு!
    மற்றபடி நிறையக் குறியீடுகள் !!

மைக்கேல், அருள் இருவருக்குமே பெண் குழந்தைகள்தான் ! – பொம்பளப்புள்ள இருந்தும் இப்படி பொறுப்பில்லாம இருக்கானே? என்று சொல்லவைக்கும் யதார்த்தம்!

மழையில் நனைவதைப்பற்றி கவலைப்படாமல், ஆண்கள் நனைவதும்…   நனைந்தால் நனைந்துவிடுவோமே என்று பெண்கள் ஒதுங்குவதும்!  இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஆண் – ஆசைப்பட்டு நனையவில்லை..!! பெண் ஆசைப்பட்டும் நனைய இயலவில்லை!

கோபம் – அவளுக்கு வந்தால், குடும்பத்துக்குக்கேடு ! அவனுக்கு வந்தால் வீரம் ! இதுதான் பிரச்னை! (அவன் சொல்லாமல் கொள்ளாமல் கொலை செய்யலாம். அவள் வீட்டை விட்டுப் போகக்கூடாது) அதனை சித்தி கதாபாத்திரம் மூலம் ஒற்றை வரியில் சொல்லியிருப்பது.!

யாழினி, மலர், பொன்னி என்று தமிழ்ப்பெயர்கள் வைத்து, இது தமிழ்ச் சமூகத்தில் இந்தப்பெயர் மூலமாகவே நாம் அவர்கள் நடத்தையை நிர்ணயிப்பதைக் கடந்திருப்பது!

அற்புதமாக, கோடிக்கணக்கில் விலைபோகும் பெண் தெய்வச் சிலையை வடிக்கத்தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, தன் வீட்டில் இருக்கும் பெண்களின் மதிப்புத் தெரியவில்லை. இன்னொருவன் களவாடும்போது ஆத்திரம் வருகிறது. சீண்டுவாரற்றுக் கிடக்கும்போது சோகம் வருகிறது. திருவிழாச் சமயத்தில் ஞானம் வருகிறது.

கொலை செய்யப்பட்ட தயாரிப்பாளரின் மனைவி, அவர் என்ன வாங்கியிருக்கார், எவ்வளவு கடன் இருக்குன்னே தெரியாது. இப்போதான் சொத்தெல்லாம் வித்தோம் , படம்தான் மிச்சம் என்று சொல்லி, படத்தை விற்கும் நிதானம்! இதை அந்த ஆள் செய்திருந்தால் ?

மருத்துவமனையில், நர்ஸ் மூன்று முறை அமைதியாக இருக்கச்சொல்லி கெஞ்சிவிட்டு, நான்காவதுமுறை கொஞ்சம் குரல் உயர்த்தியதும், நோயாளியின் கணவரான பெரியவர் (ராதாரவி) இன்னும் அதிகமாகச் சத்தம்போட, ஒன்றுமே சொல்லாமல் திரும்பச் செல்லும் நடையில் தெரியும் இயலாமையைச் சொல்லியிருப்பது! ( இந்த இடத்தில் ஆண் இருந்தால் என்ன செய்திருப்பான் என்று கொஞ்சம் ஓட்டிப்பார்த்தால்.. அந்த இயலாமை இன்னும் ஆழமாகத் தெரியும்)

இதில்.. கடைசியில் எஸ் ஜே சூர்யாவின் கடைசி நிதானம் மூலம், யாழினிக்கு ஏதாவது நன்மை நடந்துவிடும் என்ற நம்பிக்கையை விதைத்து, அவனிடம் கடைசியாக இறைத்தன்மை புகுந்ததை சொல்லியிருப்பதுதான் நிறைவு!

தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக அவள் நம்மை நிதானிக்கச் செய்கிறாள். நாம்தான் அவளை நிதானமிழக்க வைக்கிறோம் என்று கதைச் சூழல் மூலம் வெளிப்படுத்தியிருப்பதுதான் கார்த்திக் சுப்புராஜ் படைப்பின் அழுத்தம்!

மற்றபடி… ஒரு திரைப்படத்துக்கான அம்சங்களான, திரைக்கதை, இசை , ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இவற்றைப்பற்றிப் பேச அறிவைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப்படத்தை நான் உணர்வைப் பயன்படுத்திப் பார்த்ததால், அதனை லூசில் விட்டுவிட்டேன்.


எனக்கு பாகற்காய் பொறியல் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான் !

Comments

  1. என் பழைய பதிவில் உங்கள் பெயர் பார்த்து இங்கு வந்தேன். மூன்றாண்டு வறட்சி .....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..