கை கொடுக்கும் கை!

இலுப்பூர் பள்ளியில் என்னால் முடிந்தவரை படித்து இரண்டாவது அல்லது முதல் ரேங்க் எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கும்போது, ( ஆமாம்ப்பா ரொம்ப நல்லவன்ன்! னு ஓட்டப்புடாது! எனக்கு முதல் ரேங்க் குடுக்குறாங்கன்னா, கூட இருந்த பயபுள்ளைக எந்த லட்சணத்துல படிச்சிருக்குனு பாருங்க! ) எனக்கு அறிமுகமான நண்பன் சந்திரன். கெச்சலாக என்னைப்போலவே கொஞ்சம் டகால்ட்டி பேர்வழியாக இருந்ததால் ஒட்டிக்கொண்டோம்.

இருவரும், சேர்ந்தே திரிவோம். பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவேன். அவன் வீடு அருகில் இருந்தாலும், எனக்காக அவனும் சோறு கட்டிக்கொண்டு வருவான். நல்ல பேச்சாளன். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இருவரும் ஊர்க்கடைசியில் உள்ள ஊரணிக்கு சென்று சரி ஆட்டம் போட்டுவிட்டுபள்ளிக்குத் திரும்புவோம். சட்டையை மட்டும் கழட்டிவிட்டு குளிப்பதால்,டவுசர் ஈரம் நடந்து வரும்போதே காய்ந்துவிடும்.
அவர்களுக்கு பெரிய கல்லுப்பட்டறை இருந்தது. அங்கு சென்று அவன் முதலாளியாக நடந்துகொள்வதிலும், சின்ன முதலாளியின் நண்பனாக நான் நடந்துகொள்வதிலும் அல்ப சந்தோஷம் இருந்தது. அவனிடம்தான் செயற்கை வைரம் பட்டைதீட்டும் ரவை, உருட்டு, அரக்கு, குச்சி, போன்றவற்றின் மகத்துவத்தை அறிந்துகொண்டேன்.
அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் எங்களைவிட இரண்டு வகுப்பு பெரியவன். பெயர் சூரியன். அவன் ஒருநாள் பள்ளிக்கு வந்துவிட்டு, பையை வைத்துவிட்டு எங்கோ ஊர் சுற்றப்போய்விட்டான். அதை ஒரு வீட்டுத்தகராறில் சந்திரன் அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டான். அண்ணனுக்கு சரியான மாத்து!

அன்று சுதந்திர தினம். காலையில் கொடியேற்றி , சிறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்துவிட்டு, நேரம் பார்த்தால் மணி 10. அப்போது சூரியன் அண்ணன், எங்களைப்பார்த்து,

' டேய்! 'கை கொடுக்கும் கை 'காலைக்காட்சி போவோமா?

"இல்லை! நாங்க வரலை!" - இது சந்திரன்

ஏண்டா இப்படிச்சொல்ற? அண்ணனே கூப்புடுது! - நான்!

சும்மா இரு! ஏதாவது வெவகாரம் இருக்கும்!

நீயா பயந்துக்காதடா! அண்ணன் ரொம்ப நல்லவரு!

போடா போ! அவன் எப்பேர்ப்பட்டவன்னு எனக்குத்தான் தெரியும்!

என்னடா! நீ பாட்டுக்கும் பேசிக்கிட்டே போற? நான் எந்த பிரச்னையும் பண்ணலை! ரஜினி படமாச்சே ! வரீங்களான்னு கேட்டேன். - இது சூரியன்.

ரஜினி என்ற தீனியை மாட்டிய தூண்டிலில், (என் தூண்டுதலில்) மீன்கள் வசமாகச் சிக்கிக்கொண்டது.

சரி வரோம் என்றேன் நான்!

கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி, மூவரும் அருகருகே அமர்ந்தோம். ஓரத்து கருப்புத்திரைகளெல்லாம் இழுத்துவிட்டவுடன்... சூரியன்,

' டேய் வயிறு வலிக்குது! இருங்க போய்ட்டு வந்துர்றேன்''

படம் பார்க்கும் ஆர்வத்தில் ...ம்...ம்.. போய்ட்டு வாங்க என்றோம்.

படம் போட ஆரம்பித்து, ரஜினியைப்பார்த்து நாங்கள் லயித்திருந்த நேர்த்தில், ஓரத்து திரை விலக்க,
தியேட்டருக்குள் வெளிச்சம் பரவ,
வாசலில் சூரியன் அண்ணனுடன் அவர்கள் அம்மா! ..கையில் விளக்குமாறுடன்.!

அவர்களால் இழுத்து வரப்பட்டு,
சந்திரன் அடிவாங்க,
நான் அறிவுரை வாங்க....
சூரியன் அண்ணன் ஒரு நக்கல் சிரிப்புடன், சந்தோஷம் வாங்க....

'அப்பவே சொன்னேன்ல! இவன் வில்லத்தனம் பண்றான்னு! ஏமாந்துட்டியேடா!' என்று சொல்லிக்கொண்டே அழாமல் இருந்தான் சந்திரன். எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. படத்தை பாதியில் விட்டுவிட்டுப்போகிறோமே என்று! :)

இப்போது சூரியன் ஒரு பிரபல தொழிலதிபர்!
சந்திரன் ஒரு பிரபல அரசியல்வாதி!

Comments

  1. அண்ணன் தம்பி பிரச்சனைல நீங்க அகப்படுகிடின்களே அண்ணே ..

    ReplyDelete
  2. அண்ணன் தம்பி செய்யற தொழிலும்
    குணாதிசியங்களும் மாறின மாதிரில்ல இருக்கு

    ReplyDelete
  3. @ரோமியோ..

    ஆமாம்ப்பா...சூதுன்னு தெரியாமலே சிக்கிக்கிட்டேன்.

    ReplyDelete
  4. வாங்க ஜோதி!

    அட..ஆமா..! அப்படித்தான் விதி விளையாடியிருக்கு! :)

    ReplyDelete
  5. ஆனா சரியாத்தான் இருக்கோ...!

    திட்டமிட்டு காய் நகர்த்துதல் தொழிலதிபருக்கு நல்லது!

    முன்கூட்டியே சதியைக் கணித்தல் அரசியல்வாதிக்கு நல்லது!

    ReplyDelete
  6. நல்லா இருக்கு. பால்ய தினங்கள்....

    அனுஜன்யா

    ReplyDelete
  7. அழகான நினைவலைகள்..

    ReplyDelete
  8. வாங்க கேபிள் ஜி! கொசுத்தொல்லை தாங்கமுடியலை! அதனாலதான்..! :))

    ReplyDelete
  9. வாங்க அனுஜன்யா அண்ணே!

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  10. வாங்க வெங்கடேசன் ஜி!

    பின்ன தப்பு பண்ணிட்டோமேன்னா தோணும்..? :)

    ReplyDelete
  11. நன்றி அன்புடன் மணிகண்டன்..!

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா எழுதறீங்க!

    ReplyDelete
  13. சுரேகா

    கொசுவத்தி சுத்தீட்டீங்க

    அருமை அருமை

    சூரிய சந்திரரோடு கை கொடுக்கும் கையா

    வாழ்க வாழ்த்துகள்

    ReplyDelete
  14. தியேட்டர்க்குள்ள அவங்க அம்மா எப்படி வந்தாங்க பாஸ்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!