ஓட்டுச்சாவடி வாசலில்..!





நம் தமிழகத்தின் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளப்போகிறவர்களாக அரசியல்வாதிகளை நாம் பார்க்கிறோம். ஆனால், அத்தனையையும் எதிர்கொள்ளப்போவது நாம்தான்.

     நம்மிடம் ஒரு நிறுவனம் இருக்கிறது. அதனை நிர்வகிக்க, ஒரு ஆளை நேர்முகத்தேர்வு செய்து நியமிக்கிறோம். அவனுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஒப்பந்தம் அளிக்கிறோம்.ஆனால் அவன் தவறே செய்தாலும், தட்டிக்கேட்கமுடியாத அளவுக்கு அவனுக்கு அதிகாரம் தரப்படுகிறது. அவனும் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை நன்றாக அனுபவித்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் ஓய்கிறான். பின்னர் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அவன் மீண்டும் நம்மை தாஜா செய்து, வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவனைப்போலவே இன்னொருவனும் விண்ணப்பிக்கிறான். அந்த இன்னொருவனுக்கும் எந்தத் தகுதியும் இல்லாதபோதும், முன்னவனை பழிதீர்க்க இரண்டாமவனை வேலைக்கு அமர்த்துகிறோம். அவனும் ஆட ஆரம்பிக்கிறான். இதுதான் தொடர்கதையாக இருந்தால், நஷ்டம் யாருக்கு? கண்டிப்பாக நிறுவனத்தை வைத்திருக்கும் நமக்குத்தான்.!

     இதே கதைதான் இப்போது தேர்தல் என்ற பெயரிலும் நடந்துகொண்டிருக்கிறது. களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யாராவது உண்மையிலேயே அரசியலில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய தகுதி இருக்கிறதா என்று கேட்டுப்பார்த்துக்கொண்டால் – ஆளவந்தானில் கமல் சொல்வதைப்போல் , கண்ணாடி பிம்பத்தில் முகம் சுளித்துக்கொண்டு – தெரியும். உண்மையிலேயே வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த நபர்களோ, நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களோ இப்போது அறவே இல்லை.

சைக்கிள் கடை வைத்து நடத்தும் பிழைப்பில் வருமானம் இல்லை. அரசியலில் சேர்,
ஆளைக்கவிழ்,
வெற்றிபெறு,
அமைச்சராகு
ஊழல்செய்,
சொத்து சேர்!
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கு!
அடுத்த ஆறு தலைமுறையை வாழ வை!
மக்கள் என்னவானால் நமக்கென்ன? என்று இருக்கும் ஆட்கள்தான் இன்று வேட்பாளர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் , இவற்றையெல்லாம் மீறி நாம் அவர்களுக்கான ஓட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு, அவர்களைக்கண்டு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் அவர்கள் நமக்கு இப்படி விரல் காட்டுகிறார்கள்.

(எங்கு தவறு நடந்ததென்று தெரியவில்லை. பாவம் இவர்கள் நடுவிரலில் மை வைத்திருக்கிறார்கள்)


     ஒரு சிறு புள்ளிவிபரம். இந்திய அளவில் இன்றைய மக்கள் தொகை 121 கோடி  ,  தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்குப்படி 6.24 கோடி இப்போது குறைந்தபட்சம் 7 கோடி ஆகியிருக்கும்.


நமது மொத்த அரசியல்வாதிகள்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் – 234
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் – 40
மொத்தம் = 234 + 40 = 274
அல்லக்கைகள் – 274 x 100 = 27,400
வட்டம், ஒன்றியம், மாவட்டம், மாநில கட்சிப்பொறுப்பாளர்கள்  = 10000
ஆக., ஒரு வெற்றிபெறும் கட்சியில் மொத்த அரசியல்வாதிகள் = 37,400 என்று வைத்துக்கொள்வோம் . (தோராயமாக)
மற்ற பெரிய கட்சிகள் எல்லாம் சேர்த்து அரசியல்வாதிகள் 
(வட்டத்துணைச்செயலாளர் உட்பட)  = 37400 x 2 = 74800
உதிரிக்கட்சிகள், துண்டு துக்கடா அரசியல்வாதிகள் (கார்த்திக் போன்றவர்கள் எல்லாம் சேர்த்து) = 20000
மொத்தம் 274 + 37400 + 74800 + 20000 = 169600 + உதிரிகள் 400 வைத்துக்கொண்டாலும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர்தான் வருவார்கள்.



     ஆக, 7 கோடி பேர் 1.7 லட்சம் பேரைக்கண்டு அஞ்சுகிறோம். அதாவது 411 பேர் ஒரு ஆளுக்கு பயப்படுகிறோம். அவர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்பதில்லை. அவர்களைக்கண்டு பம்முகிறோம். அவர்களை வணங்கி மகிழ்கிறோம். அதுவும், இப்போது நாம் தேர்ந்தெடுக்கப்போவது அவர்களில் 234 பேரை! (2,99,145 பேருக்கு ஒருவர்) இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்!

    நமக்கான ஆட்களைத் தேர்வுசெய்வதில், நாம் என்றாவது நிதானமாகச் சிந்தித்திருக்கிறோமா என்றால், இல்லை என்று அடித்துச்சொல்லலம். ஆட்சியமைக்கப்போவதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் கட்சிக்கு நம் வாக்குகளைப்பதிவு செய்யத் துடிக்கும் வேளையில், நம் தொகுதிக்கு தகுதியான ஆளைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்றும் சிந்திக்கவேண்டும்.
ஒரு அரசியல் கட்சியோ, அதன் கூட்டணித்தலைமையோ தேர்ந்தெடுக்கும் ஆள், நம் பகுதிக்குச் சம்பந்தமே இல்லையென்றாலும் வாக்களித்து,  அவரைப் பிரதிநிதி என்று அழைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் தெரியவில்லை.

       இவையெல்லாம் மீறி , பெரிய கட்சிக்காரர்களில் சுத்தமானவர்களை எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. எனக்கு பிரதிநிதியாகப்போகிற மனிதன்,  ஒழுக்கமுள்ளவனாக, கை சுத்தமானவனாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை. அப்படி ஒரு ஆள் சுயேச்சையாக நின்றாலும், அவனை ஆதரிக்க ஆரம்பிப்போம். காலம் மாறும். காட்சிகள் மாறும். நம் எண்ணம் என்றாவது நாடு முழுதும் பரவும். நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள்.

ஓட்டுச்சாவடி வாசலிலாவது சிந்திப்போம்.

Comments

  1. எழுத்து அழகு.. ஆனால் எல்லாம் நடக்க நடக்க பாக்கலாம்..!

    ReplyDelete
  2. ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கு போனாத்தானே பாஸ் யோசிப்பாங்க!!!

    (போகாதவங்களைப்பத்திதான் இந்தக் கமெண்ட்)

    ReplyDelete
  3. நேத்து எனக்கு ஒரு நப்பாசை வந்துச்சு... 274 தொகுதிகளிலும் மக்கள் கடுப்பாகி சுயோச்சைகளுக்கா ஓட்டு போட்டு தேர்வு செஞ்சிட்டா எப்படி இருக்குமின்னு :)

    ஆமா, ஏன் அமிதாப் குடும்பம் இப்படி நடு விரலை உயர்த்திக் காட்டுராய்ங்க... யாருக்கு அந்த விரல் ?

    ReplyDelete
  4. தங்களின் வெளிப்படையான, நேர்மையான கருத்துக்களுக்கு நன்றி சுரேகா..!

    ReplyDelete
  5. வாங்க ப்ரணவம் ரவிக்குமார்!
    நன்றிங்க!

    ReplyDelete
  6. புதுகைத்தென்றல் வாங்க வாங்க!

    அதைச்சொல்லுங்க!
    ஆமா...நமக்கு ஆந்திரா ஓட்டுத்தானே!! :)

    ReplyDelete
  7. வாங்க தெகா அண்ணா!

    அதுகூட நல்லாத்தான் இருக்கும்..!
    நம்ம ஆளுங்க பெரிய அளவில் ஆட்டம் காட்டுவாய்ங்க!

    சுயேட்சைகள் முன்னேற்றக் கழகம்னு ஒரு கட்சி உதயமாகும்.

    உள்ளதிலேயே பெருத்த, கொழுத்த ரௌடி சுயேச்சை தலைவராவார்.

    மறுபடியும் என்ன...?

    ஸ்டார்ட் மீஜிக் தான்!!

    ReplyDelete
  8. படிக்க நன்றாக தான் இருக்கின்றது. செய்தியை பகிர்ந்துகொண்டதிற்க்கு மிக்க நன்றி.
    தங்களது சார்பாக பத்து பேரையாவது வாக்களிக்க செய்ய வேண்டும். இதுவே தாங்கள்
    செய்யும் சமுதாய கடமை ௦ ஆகும்.

    ReplyDelete
  9. வாங்க உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

    நன்றிகள் பல!

    ReplyDelete
  10. வாங்க காதர்!

    கண்டிப்பாக அதைச்செய்வோம்!
    கவலையே வேண்டாம்.
    அடுத்த பதிவு அதைப்பற்றியதுதான்!!

    ReplyDelete
  11. அன்பின் சுரேகா - ஆதங்கம் புரிகிறது - வேறு வழிதான் என்ன ? ஒன்றும் புரியாமல் கோடி வீட்டில் கொள்ளி வைக்கும் நல்ல பிள்ளையை வாழ்த்தி வரவேற்கிறோம். ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  12. நமக்கு ஆந்திரா ஓட்டுத்தானே!!//

    yessu.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !