குமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .


     



     சூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன்.

     டிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட! என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார்.

     நான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன்,

’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல,

’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு! மொத்த இந்தியாவுக்கும் ஒரே சட்டம்தான் . நீங்க அதிகபட்ச சில்லறை விலைக்குத்தான் கொடுக்கணும்’ என்றேன்.

’இல்லை சார்! அதெல்லாம் தர முடியாது… கொஞ்சம் நகருங்க!’ என்று வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். அதுவும் பல புரட்சியாளர்கள் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

எனக்கு தண்ணீர் தாகம் வேறு.. ஆனால், அ.சி.வி (அதிகபட்ச சில்லறை விலை) விட ஒரு ரூபாய்கூட அதிகம் கொடுத்து வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். மீண்டும் அவரை சத்தமாகக் கேட்டேன். என்னைக் கண்டுகொள்வதாகவே இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்தால், மேலாளர் அறை அருகிலேயே இருந்தது. அங்கு சென்றேன். அது கண்ணாடிக்கதவு. நான்கைந்து பேர் உள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நான் வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டு, கதவைத்திறந்துகொண்டு வந்தார்.

மேனேஜரைப் பார்க்கணும் என்றேன்.

உள்ள ஓனர் உக்காந்திருக்காரு! என்ன விஷயம்?  என்றார்.

“சார்! நான் வாட்டர் பாட்டில் வாங்க வந்தேன். 20 ரூபாய் பாட்டிலை 25 ரூபாய்க்கு விக்கிறாங்க! அது சட்டப்படி குற்றம். அ.சி.வி க்கு மேல் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் என்னால் பறிமுதல் செய்ய வைக்க முடியும். நீங்கள் சொந்தமாக பாக்கெட் போட்டு விற்கும் பொருளுக்கு என்ன விலை வைத்தாலும் அது உங்கள் பொறுப்பு. ஆனால், விலை அச்சிடப்பட்டுள்ள பொருளில் அதைவிட அதிகமாக விற்கக்கூடாது.” என்றேன்.

ஒரு நிமிஷம் இருங்க! என்றுவிட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் வெளியில் வந்தார். நேராகக் கேண்ட்டீன் சென்றார். விற்பனையாளரிடம் ஏதோ பேசினார். ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். என்னிடம் வந்தார். கொடுத்தார்.

நான்  20 ரூபாய் பணம் கொடுத்தேன். 

அதெல்லாம் வேண்டாம் சார்! என்றார்.

நான் உங்களிடம் சும்மா கேக்கலை. அதிக விலை வைத்து விக்காதீங்கன்னேன். இதுக்கான விலையை வாங்கிக்குங்க என்று பணத்தை நீட்டினேன். வாங்கி கடைக்காரரிடம் கொடுத்தார். கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதை எவ்வளவுக்கு விக்கிறீங்க என்றார்…

25 என்றான் இன்னொரு விற்பனையாள இளைஞன்.

ஏண்டா இவ்ளோ ஜாஸ்தியாக்கிட்டீங்க… என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டார்.


     எல்லாப் பொருட்களுமே திரையரங்க கேண்ட்டீன்களில் விலை அதிகமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் கேட்பதும் இல்லை. வாடிக்கையாளர் குறைவு..! முழுநேரக் கடை இல்லை.. என்ற பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், உங்கள் திரையரங்கில் நுழைந்த ஒரு காரணத்துக்காகவே வந்தவனின் டவுசரை உருவுவது எந்தவிதமான வியாபார நோக்கம் என்று புரியவில்லை.

       ஆனால், இதில் நான் முழுமையாகக் குற்றம் சாட்ட விரும்புவது பொதுமக்களைத்தான். நான் அவ்வளவு நேரம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.  யாரும் கண்டுகொள்ளக்கூட இல்லை. குறைந்தபட்சம்  15 பாட்டில்கள் விற்பனை ஆகியிருந்தன.  ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல், தனக்கான தீனியில் மையம் கொண்டிருந்தார்கள். இவர்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது. 

    தனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூட்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..?





Comments

  1. என்னைப் பார்ப்பது போல் இருக்கிறது உமது செயல். எனது வயது: அம்பதை மீறி.. இது போல் ஏகப்பட்ட நிகழ்வுகள். நிறைய தனிமைகளில். நான் அங்கில்லையே உம்மோடு சேர்ந்து கொள்ள என்றிருக்கிறது உம் பதிவு. வாழ்க . சளைத்து விடாதீர்கள். முன் ஏர் செல்வதற்கு தடை அதிகமே. நல்லபதிவை பங்கெடுத்துக் கொள்ள வைக்காமல் பார்த்து இரசிக்க வைத்தாலும் நீர் உண்மையில் எம் நண்பர்.

    ReplyDelete
  2. கேட்டால் கிடைக்கும்.... உத்வேகம் கொடுக்கும் பதிவு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்!

      Delete
  3. சுரேஹாஜி,

    //தனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூட்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..?
    //

    ஹி...ஹி :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்... !! என்ன பண்றது..? :)

      Delete
  4. நானும் சென்னை சென்ட்ரலில் ஒரு முறை பிஸ்கட் பாக்கெட்டுக்கு அ.சி.வி க்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு அப்போதும் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேறு கடையில் போய் வாங்கினேன். டிரெயின் க்கு நேரம் ஆகி விட்டதால் புகாரை பதிவு செய்யவில்லை. -மோகன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல செயல் செய்திருக்கிறீர்கள்...!!

      Delete
  5. நானும் சென்னை சென்ட்ரலில் ஒரு முறை பிஸ்கட் பாக்கெட்டுக்கு அ.சி.வி க்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு அப்போதும் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேறு கடையில் போய் அ.சி.வி க்கு வாங்கினேன். டிரெயின் க்கு நேரம் ஆகி விட்டதால் புகாரை பதிவு செய்யவில்லை. -மோகன்

    ReplyDelete
  6. அந்நியன் படம் ஞாபகம் வந்தது...!

    ReplyDelete
    Replies
    1. Sollittaaru namma DD..!!! Seidhoo kaattungal

      Delete
  7. How and where need to give complaints? Anybody can explain?

    ReplyDelete
  8. Bravo Mr. Sureka Sundar. I really appreciate your attitude. மக்கள் எல்லாரும் எனக்கென்ன mentality- யில் இருந்து கொண்டு, கேள்வி கேட்பவர்களுக்கு ஆதரவும் தர மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்து நாம் கேட்பதில்லை

    If we are not the part of the solution, we are part of the problem. If hundred customers raise the same question,
    the shop keeper will definitely reduce the price. People don't have the guts to ask even simple questions. Such
    people criticize the persons who dare to question the erring shop keepers.

    Each one has to take responsibility. Eternal vigilance is the price for democracy. Majority of the public enjoy all
    facilities because some fought for it.

    I have been writing to many authorities for various issues for many years. 40 to 50 % queries/complaints were
    replied. For some, actions were taken. I write everything with full home address only. Nobody came to house to beat me. But everybody fears that people will come and attack. Of course, there is a way to question. Decent approach will get decent results.

    I avoid any shopping in Theatre.

    ReplyDelete
    Replies
    1. நன்றி value Plus. நீங்களும் சிறந்த செயல்களைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

      Delete
  9. உண்மையான 1லி பாட்டில் தண்ணீரின் மொத்த கொள்முதல் விலை 12 மட்டுமே, அதற்கே 8 ரூபாய் லாபம், 80% சதவீத லாபம்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணே... அதுதான் நான் சொல்கிறேன். ஏற்கனவே நல்ல லாபம் ...பிறகு ஏன் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

      Delete
  10. எனக்கும் அப்படிதான் ஆகுது. ஒரு நேரத்துக்கு மேல போராட முடியல. எப்படி சொல்றேன்னா உங்களுக்கு ஒரு மேனேஜர் கிடைச்சார் பல இடங்கள்ள அப்படி இல்லை. தொலைதூர பேருந்து சேவை வழியில் உள்ள கடைகளில் பல முறை சண்டை போட்டு தோற்று போய் இருக்கிறேன். சவுதியிலிருந்து இந்தியா வந்த பிறகு (ஏர்போர்ட் கழிப்பறையில் துடைக்க ஒரு பேப்பர் கூட இருக்காது அவற்றை ப்லைட்டுலேயே வாங்கிக்கொண்டுதான் இறங்குவேன்)இந்த கடைகள் பண்ணும அட்டோழியத்தால் சென்னையிலிருந்து எட்டு மணி நேரம் ஒன்றும் சாப்பிடாமல் வீட்டுக்கு சென்று தான் சாப்பிடுவேன். புதிதாக திருமணமான சமயம் என் பொண்டாட்டி கேட்கும்போது கூட என்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு மற்ற மனிதர்களை போல இருக்க முடியவில்லை பெண்டாட்டியிடம் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டு பாண்டிச்சேரியில் தான் உண்மை விலைக்கு தண்ணீர் வாங்கி கொடுத்தேன். சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் எவ்வளவு வேதனைகளை சுமக்க வேண்டியிருக்கிறது என்பதை கொள்ளை அடிப்பவர்கள் ஏன் உணர மறுக்கின்றனர். அதே போல் டில்லி ஆக்ரா பயணத்தில் இரவு ஏழு மணிக்கு பஸ்ஸை எடுத்தவன் பயணிகள் எவ்வளவோ கூறியும் இரவு பதினோரு மணிக்கு அவன் ஒப்பந்தம் செய்த தாபாவில் இறக்கும்போது நான் வேறு தாபாவில் நிறுத்த சொன்னேன். ஆட்டு மந்தை போல் பயணிகள் சென்று சாப்பிட்டனர். (வைராக்கியத்தில் எனது சாப்பாடு கொய்யா பழம் மற்றும் பழசாரோடு முடிந்தது) சாப்பிட்டு வந்தவர்கள் பல பேர் பில்லே கொடுக்காமல் வந்து கடைக்காரன் பேருந்தில் வந்து சண்டை போட்டு பிறகு கெஞ்சி 680ரூபாய்க்கு 300 மட்டும் வாங்கி சென்றான். (காரணம் ஒரு சாப்பாடு 80 அசைவம் 130 ரூபாய்ன்னு வச்சா எவன் பில்லு கொடுப்பான்) பஞ்சாப் லூதியானா ரயில்வே ஸ்டேசன் அருகில் உள்ள கடையில் வெறும் 20ரூபாய்க்கு அருமையாகவும் சாப்பிட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  11. நன்றி,அது தனியார் நடத்தும் நிறுவனம் ,ஆனால் அரசு நடத்தும் மதுபான கடையில் ..................பெரும் கொள்ளை .மக்களைத்தான் குறை சொல்லவேண்டும்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. இதே அனுபவம் என்னை பாதித்ததன் விளைவாய் 2006ல் நான் எழுதிய கவிதை இது... லிங்க் கிளிக் பண்ணி உங்கள் கருத்தை சொல்லுங்கள்...

    Page 1

    https://www.facebook.com/photo.php?fbid=1844687055788&set=pb.1799003105.-2207520000.1369806038.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-e-a.akamaihd.net%2Fhphotos-ak-frc1%2F298610_1844687055788_41528436_n.jpg&size=565%2C800

    Page 2

    https://www.facebook.com/photo.php?fbid=1844689615852&set=pb.1799003105.-2207520000.1369806038.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-h-a.akamaihd.net%2Fhphotos-ak-ash4%2F312645_1844689615852_1973941206_n.jpg&size=565%2C800

    Page 3

    https://www.facebook.com/photo.php?fbid=1844690215867&set=pb.1799003105.-2207520000.1369806038.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-b-a.akamaihd.net%2Fhphotos-ak-frc1%2F316899_1844690215867_1574511899_n.jpg&size=565%2C800

    Thanks & regards,

    Murugan

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன்....ரசித்தேன்..!

      Delete
  14. இவ்விழிப்புணர்வு அனைவருக்கும் வந்தால் நல்லது;ஆனால் வராது என்பதுதான் உறுத்தும் உண்மை!

    ReplyDelete
  15. We are urgently in need of KlDNEY donors for the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !