குதிரை(க்கொம்பு) யாவாரம் -2






என் மகளுக்கு தன் பள்ளியில் இடம் இல்லையென்று அந்த முதல்வர் சொன்ன பின், தங்கமணி அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத முதல்வி அவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து, ‘பட்டாக்’ என்று இருகரம் கூப்பி வணங்கி….தயவுசெஞ்சு போய்ட்டு வாங்க என்றார். ‘Get out’ என்று நாகரீகமாகச் சொன்னதை மனம் ஏற்க மறுத்தது. மேலும் நான் பேச ஆரம்பிக்க..

ஒரு பிரின்ஸிபால்…நானே இறங்கி வந்து உங்ககிட்ட கைகூப்புறேன். அதுக்கப்புறமும் என்ன இது ….திரும்பத்திரும்ப கேக்குறீங்க? என்று குரலை உயர்த்த… அந்த ‘நானே’ வில் இருந்த அகந்தை, என்னை அசைத்துப்போட்டது. குரலை உயர்த்தலாம் என்று நினைக்கும்போது, காலைக்கட்டிக்கொண்டு தான் படித்த அத்தனையையும் உளறிக்கொண்டிருந்தாள் என் வீட்டு தேவதை..!!

எப்போதும் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் ருத்ர தாண்டவமாடும் சுரேகா என்ற மானஸ்தன், ’பவ்’ என்றுகூடக் கத்தமுடியாமல் நொந்துகொண்டே வெளியில் வந்தான் .

நடந்தவை எவற்றையும் விளங்கிக்கொள்ளமுடியாமல்,
நாளைலேருந்து ’அண்ணன் ஷூல்லதான் நானும் பதிக்கப் போதேனா?’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் மாணவியாக வேண்டிய மகள்!

தங்கமணியின் கண்ணீரை வைத்து ஆறு டம்ளர் உப்புக்கரைசல் தயார் செய்யலாம்போல் இருந்தது. அதைப்பார்த்து எனக்கே உலகம் அவுட் ஆஃப் போகஸில் தெரிய ஆரம்பிக்க.. கர்ச்சீப்பை எடுத்து லென்ஸைத் துடைத்து ஃபோகஸை சரி செய்துகொண்டேன். # ஆம்பளை அழக்கூடாது சுரேகா! மனசாட்சி வேறு மல்லுக்கட்டியது…

‘என்ன இப்படி பண்ணிட்டாங்க… என்று இருவரும் கறுவிக்கொண்டே வர..

இன்னா சார்! பாப்பாக்கு சீட் வோணுமா என்று ‘ஆட்டோ வோணுமா! என்பது போல் ஒரு குரல் இரகசியமாய்க் கேட்டது.

திரும்பிப் பார்த்தால்..அந்தப் பள்ளியின் கடை..கடை..கடை…நிலை ஊழியர்..!!
உன் நம்பர் குடு சார்… வெளில வந்து மிஸ்டு கால் தரேன்.. வெவரம் பேசுவோம்..!!

என்ன வெவரம் பேசணும்?

ம்மா..சொல்லும்மா சாராண்ட !  சீட் வேணுமா..வேணாவா?

நான் நம்பர் சொல்றேன் என்று என் எண்ணை ஒளிவேகத்தில் சொல்லிமுடித்தார் தங்கமணி..!! பதிலுக்கு அவர் எண்ணையும் வாங்கிக்கொண்டு அந்த தொடர்பை பூர்த்தி செய்தார். Completion of Communication Theory நினைவில் வந்து தொலைத்தது… # இவர் பெரிய மேனேஜ்மெண்ட் குருவாம்..!!

அவரை வெளியில் வந்ததும் தொடர்புகொண்டோம். ட்விட்டரை மிஞ்சும் வகையில் 100 எழுத்துக்களுக்குள் பேசினார்…

குழந்தைக்குக் கட்டவேண்டிய முழுக் கட்டணத்தொகையை… அப்படியே தனது கட்டிங்காகக் கேட்டார். அதற்குப் பிறகு நாம் பள்ளிக்கட்டணம் தனியாகக் கட்டவேண்டும். இது சேவைக்கட்டணம் மட்டுமே! (இங்கு லஞ்சம் என்பது கடமையை மீற எனக் கொள்க!) அந்த சமூக சேவகர். ! (அந்தப்பள்ளியில்தான் சீட் வேண்டும் என்று கல்விக்குத் தத்தளிக்கும் சமூகத்துக்கு சீட் வாங்கிக்கொடுக்கும் சேவகர் சமூக சேவகர்தானே…? )

‘சீட் கெட்சப்புறம் பணம் குடு சார்.. எல்லாம் மேல உள்ளவங்க பண்றது..நம்ப கைய்ல எதுவ்மே கெடியாது.!  .என்று நியாயம் வேறு சொன்னார்.

நான் முதலில் கட்டாயமாக மறுத்தேன்..!! அரிச்சந்திரன் ஆக யத்தனித்தேன். ஆனால்..
அதற்குப்பிறகு காட்சிகள் மாறின..

பல்வேறு மறுத்தல்கள், ஒப்புதல்கள், சண்டைகள்,
படிப்பைத்தவிர வேற என்ன செய்யப்போறோம்..

நமக்குத்தான் நேர்வழில சீட் வாங்க துப்பு இல்ல!

அவனவன் லட்சக்கணக்குல பணம் கட்டி பிள்ளைங்களைப்படிக்க வைக்கிறான்..!

வேற எந்த ஸ்கூல்லயும் இனிமே சேக்க முடியாது.. ரெண்டு ஸ்கூல்..ரெண்டு வேன்னு நான் திண்டாட முடியாது..!

‘ஒங்களுக்கு பிள்ளைங்க எதிர்காலத்துல அக்கறையே இல்லையா?

என்ற பிரம்மாஸ்திரம் உட்பட அத்தனை அம்புகளையும் வாங்கிக்கொண்டு…கர்ணன் தேருக்கடியில் அமர்ந்திருந்த கோலம் நினைவில் வந்தது. தான தர்மத்தைக் கொடுப்பதுபோல்….சீட் வாங்கிக்கொடுக்கும் கண்ணனுக்கு… பணம் தருகிறேன் என்று சொன்னதுதான் தாமதம்..!! படாரென்று குழந்தையின் அப்ளிகேஷன் எண் மற்றும் பெயர் வாங்கிக்கொண்டார்..அன்று இரவு தூக்கமே வரவில்லை..! #உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாட்டு வேறு…!! இவர் கர்ணனாமாமாம்..!!

அடுத்த நிகழ்வுகள் சட சட வென சடுதியில் நடந்தேறியது.

   அதேபோல் இரண்டே நாட்களில் நேர்முகத்தேர்வு அழைப்பு… அது கண் துடைப்பு என்று தெரிந்தே சென்றதால்..எங்கள் அலைப்பறைக்கு அளவே இல்லை..

  குட்டிக்கு இது டகால்ட்டி இண்டர்வ்யூ என்று எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. அவளும்.. ஆ வைக்காட்டி எ என்றாள். P ஐக் காட்டி D என்றாள். கருப்பை , வெள்ளை என்றாள். அனைத்துக்கும்.. அந்த டீச்சர் ஓ.. அப்படியா என்று மிகச்சரியாக பதில் சொன்னதுபோல், அன்பாக ஆமோதித்து,..அப்படியே ரைட் சைட் போனீங்கன்னா பிரின்ஸிபால் ரூம்…அங்கபோய் அவங்களைப் பாத்துருங்க! என்றார்.


பிரின்ஸிபால் ரூமுக்குச் செல்லும் தூரம் அதிகமாவதுபோல் இருந்தது. லேசாக தடுமாற்றம் வேறு..ஆனால்..பணம் கொடுத்து சேர்த்திருக்கோம். ஏன் பயப்படணும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, லந்தாக உள்ளே நுழைந்தோம்.

எங்களைக் கண்டதும், அவர் கண்ணில் மிக மிக மைக்ரோவாக ஒரு ஜெர்க்..

பின்னர் சுதாரித்துக்கொண்டு..

சந்தோஷம்..பாப்பாவை சேத்தாச்சா!

இதான் இந்தப்பள்ளிக்கூடத்தோட சட்டதிட்டங்கள். இத்தனாந்தேதி ஓப்பன் பண்றோம். இங்க போய் யூனிபார்ம் வாங்கிக்குங்க என்று இதுவரை பார்த்தேயிராத இருவரிடம் பேசுவதுபோல் சிறப்பாக நடித்தார்..#ஊரில் நடிக்க ஆள் கிடைக்காம தடுமாறுது எங்க சினிமா இண்டஸ்ட்ரி..!!

நான் செய்த அளும்பு அதற்கு மேல்.!.அவர் முன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு,.. அவர் ரூமையே சுற்றிப்பார்த்துக்கொண்டு.. அவரை உற்றுப் பார்த்துக்கொண்டு… என வஞ்சம் அனைத்தையும் தீர்த்துக்கொண்டேன்.

அறையைவிட்டுக்கிளம்பும்போது…இரு கைகளையும் பட்டார் என்று கூப்பி வணக்கம் வைத்து.. ’ போய்ட்டு வரோம் மேடம்’ என்றேன். என்னால் செய்யமுடிந்த ஒரே பழிவாங்கல்! ஆனால்..விலைதான் மிக அதிகம்..!! ஆனால், தங்கமணியின் சிரிப்பின் வெளுப்பில்… ஒரு டே நைட் ஐபிஎல் மேட்சுக்கு ஒளி கொடுக்கலாம் போலிருந்தது.

வாசலில், நம்ப புண்ணியவான் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை சொன்ன மாதிரி கொடுத்துவிட்டு பிரின்ஸிபாலுக்கு வைத்திருந்த வணக்கத்தை அவருக்கு வழங்கினேன். ஏனெனில் சீட் வாங்கிக் கொடுத்தவர்தான் என்னைப் பொறுத்தவரை அந்தப் பள்ளியின் முதல்வர்!

மொத்தத்தில்..குட்டிப்பாப்பா LKGயில் சேர்ந்துவிட்டாள்.

இப்படியாக முதல் வாரம் சீட் இல்லையென்று துரத்திவிடப்பட்டு அழுதுகொண்டே வெளியேறிய நாங்கள்…அடுத்த வாரத்துக்குள் ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை அதிகப்படியாக அழுதுவிட்டு சீட் கிடைத்த பெருமிதத்துடன் அதே பள்ளியிலிருந்து சிரித்துக்கொண்டே வெளியில் வந்தோம்..

சொந்தங்களுக்கு ஃபோன் பறந்தது.

‘ பாப்பாவை ஸ்கூல்ல சேத்தாச்சு! ஒரு பிரச்னையுமில்லை…ஸ்வீட் எடு கொண்டாடு! …!!

ஆனால்…இதன் பின்னணிப் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு பூதாகரமாகத்தெரியவந்துள்ளது. எவ்வளவு பெரிய குதிரை வியாபாரம்.. அதன் கொம்பாக மாற்றப்பட்டு, வியாபாரத்தின் விலை இன்னும் அதிகமாக்கப்படுகிறது என்பதும் புரிந்திருக்கிறது. 

சிரித்துக்கொண்டே இதைக் கடந்து போகிறவனில்லை நான்..!! என்ன செய்யப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்..! இந்தப் பிரச்னையை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டியிருப்பதால்.. இது ஒரு இடைவேளைதான்..!! பல மாதங்கள் கழித்து, வெடிக்கும்போது அனேகமாக ஒரு செய்தித்தாளில் என் சிரிக்கும் புகைப்படத்தை நீங்கள் கண்டாலும் ஆச்சரியமில்லை.





Comments

  1. எதிர்பார்க்காத ட்விஸ்ட் இந்த இரண்டாம் பாகத்தில்! வழக்கமாக, அரசு அலுவலகங்களில் தான் கட்டிங்கை வாங்கி சேர்க்கவேண்டியவர்களுக்கு சேர்ப்பதற்கேன்றே கடைநிலை ஊழியரோ அல்லது ஆளும் கட்சி ப்ரோக்கர்களோ இருப்பார்கள்! இந்த மாதிரி விவகாரங்களை சாதித்துக் கொடுத்தே பிழைப்பை ஓட்டும் சில தரகர்களும் இருப்பார்கள் என்றால் இங்கே தனியார் பள்ளிகளிலுமா?

    இனி பொறுப்பதில்லை-எரிதழல் கொண்டுவா என்ற பாஞ்சாலி சபதத்தின் ஆவேசமான வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார்! ஆனால்..இங்கு கடைநிலை ஊழியர் குற்றவாளி இல்லை... அங்கு இன்னொரு பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. விரைவில் வெளிவரும்.

      ஆனால்..மிகவும் மோசமான நிலையில் , நம் கல்வி உள்ளது என்பது மட்டும் நிச்சயம்!

      Delete
  2. சுரேகாஜி,

    இப்படி சேர்த்தது பிடிக்கவில்லை,பின்னர் நடவடிக்கை எடுக்க உத்தேசித்து இருந்தாலும். ஆனால் யதார்த்தத்தில் இப்படி தான் நடந்துக்கொண்டாக வேண்டியது இருக்கிறது என்பதும் மறுக்க முடியாது.

    உங்கள் மகனை சேர்க்கும் போது யாரும் சிபாரிசு செய்தார்களா, ஏஎன் எனில் பள்ளியின் நடைமுறை அறிந்திருப்பீர்களே, பின் இந்தளவுக்கு சுற்றாமல் காரியம் ஆகும் வழியை பார்த்திருக்கலாம் என்பதால் கேட்டேன்.

    பெரும்பாலான பள்ளிகளில் வரிசையில் நிக்க வைத்து விற்கும் விண்ணப்பங்கள் வருமானத்திற்காக மட்டுமே. அட்மிஷன் கொடுக்கும் விண்ணப்பங்கள் தனியாக விற்பார்கள், கடை நிலை ஊழியர் வந்தாரே அது போல. பெரும்பாலோர் ஆரம்பத்திலேயே அப்படி விண்ணப்பம் வாங்கிவிடுவார்கள். வரிசையில் நிற்பவர்கள் எல்லாம் விவரம் தெரியாதவர்கள்.

    இது போன்ற பள்ளிகள் கொள்ளையடிக்க காரணமே பெற்றோர்களின் மனோபாவம் தான்.

    நீங்கள் எடுக்கும் நடவடிக்கை வெற்றிப்யடைய வாழ்த்துகள்.

    இதனையும் கவனத்தில் வைத்து முயற்சி செய்யுங்கள், தனியார் கல்வி நிலையங்கள் எல்லாமே டிரஸ்ட் பெயரில் நடப்பவை அவர்கள் பணம் வாங்கினார்கள் என்று ஆதாரம் காட்டினாலும் அது விருப்பப்பட்டு கொடுத்த நன்கொடை என்று தப்பிவிடுவார்கள்.கணக்கு கூட வைத்திருப்பார்கள். வரி விலக்கும் உண்டு. என்ன ஒரு லட்சம் வாங்கினால் 10000 என்பது போல எழுதி இருப்பார்கள்.

    கட்டணம் அதிகம் வாங்கியதாக மட்டுமே புகார் செல்லுபடியாகும் அதிலும் பெரிய நடவடிக்கையில்லை சும்மா கல்வியதிகாரிகள் அன்று மட்டும் அதிரடிக்காட்டிவிட்டு அடங்கிவிடுவார்கள். நம்ம புகாரை வைத்து அவர்கள் மிரட்டி பணம் வாங்க தான் செய்வார்கள்.

    பலவீனமான பள்ளியாக இருந்தால் ஏதேனும் நடவடிக்கை இருக்கும்,அதுவும் சும்மா கண் துடைப்புக்கு தான்.

    உண்மையான தண்டனை மக்கள் புறக்கணிப்பு மற்றும் அப்படிப்பட்ட கல்வி வியாபாரிகளை பொதுமக்கள் சமூக அந்தஸ்து கொடுத்து மரியாதை செய்யாமல் புறக்கணிக்க, கேவலப்படுத்தவும் செய்யனும்.

    எஸ்.ஆர்.எம் கல்வி வியாபாரி தொ.கா நடத்தி சமுகத்துக்கு செய்தி சொல்லுகிறார். நாமும் அந்த சேனலை பார்க்கிறோமே ? இதுல மின் கட்டணம் உயர்வு, பஸ் கட்டண உயர்வுனு மக்களுக்கு பாடம் நடத்துவார்கள் :-))

    இது போன்றவர்களை எல்லாம் சமுக விரோத சக்திகளாக தான் கருத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு வவ்வால்..

      மிகச்சரி..!! நான் நடந்துகொண்டது எனக்கே பிடிக்கவில்லை...!! நானும் சராசரியாகிப்போன அவலம் நடந்ததை ஒப்புக்கொள்கிறேன். அதன் பின்னணியில் எனது பெற்றோரின் வாதம் ஒன்று இருந்தது.

      “ உனக்கு பிரச்னைன்னா சண்டை போடு வேணாம்கலை. ! என் பேத்தி படிப்புல உன் வீராப்பைக் காட்டாத... ! ஒரு பள்ளிக்கூடத்துல சண்டை போட்டுட்டு...இன்னொரு மோசமான ஸ்கூல்ல சேத்தா...அந்தப்பிள்ளை எதிர்காலத்தை நினைச்சுப்பாரு! உனக்காக வேண்டாம்..அடுத்தவுங்களுக்காக எறங்கிப் போ!”

      இதுதான்..!

      நீங்கள் சொன்னது மிகச்சரி!

      மக்கள் அவர்களைப் புறக்கணிக்கவேண்டும்.
      அதற்கு அரசுப் பள்ளிகளின் தரம் மேலோங்க வேண்டும்.

      எந்தக்கட்சியும் சாராத மக்கள் வீதிக்கு வரவேண்டும்..!!

      அன்றில்..

      இந்த நாடும்..நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போவோம்.!

      Delete
  3. \\அனேகமாக ஒரு செய்தித்தாளில் என் சிரிக்கும் புகைப்படத்தை நீங்கள் கண்டாலும் ஆச்சரியமில்லை// செய்தியை படிக்க ஆவலாக இருக்கிறோம் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க... ஆசையப்பாரு..!!

      எனக்கு சில நண்பர்களின் மறைமுக உதவி தேவை !!

      இந்தத் திட்டத்தில் நீங்களும் இணைந்து செயல்படணும்.. தயாரா?

      உங்க போட்டோவும் சேந்து வர்றமாதிரி ஏற்பாடு பண்றேன்.

      Delete
  4. நான் செய்த அளும்பு அதற்கு மேல்.!.அவர் முன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு,.. அவர் ரூமையே சுற்றிப்பார்த்துக்கொண்டு.. அவரை உற்றுப் பார்த்துக்கொண்டு… என வஞ்சம் அனைத்தையும் தீர்த்துக்கொண்டேன். #சூப்பர்.. அண்ணா.. :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரகாஷ்... மிக்க நன்றி! :))

      Delete
  5. விட்டுப்போச்சு...

    பிரபல பள்ளிகளில் ஆளுங்கட்சி, முக்கியமான கல்வி துறை அதிகாரிகள் ,உயர் அதிகாரிகள் பரிந்துரைக்குனு இலவசமாக ஒதுக்கி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனால் எல்லாம் நம்ம கையில்னு இருக்கிறார்கள் கல்வி வியாபாரிகள்.மேலும் பல கல்வி கூடங்களும் அரசியல்வாதிகளால் தான் இப்போ நடத்தப்படுகிறது. எனவே கேட்கவா வேண்டும் அவங்க அட்டகாசத்த!

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. போனவாட்டி என் பையனைச் சேத்த கதை இன்னும் பெரிசு..!!

      அதை ஆரம்பிக்கணும்னா டங்கு டணாராயிடும்.!!

      இந்த சீசனில்...முதல்வரே லெட்டர் கொடுத்தாலும் ..பள்ளிகள் மதிப்பதில்லை என்பதும் உண்மை!

      Delete
    2. சுரேகாஜி,

      இது உங்கள் தவறு என்று சொல்ல முடியாது சமூகமே அப்படியானது, அந்த நேரத்தில் உங்கள் மன நிலை என்னவென நன்றாக புரிகிறது. ஒவ்வொரு பெற்றோரும் இப்படியான சூழலில் தான் சிக்கிக்கொள்கிறார்கள். வசதியானவர்கள் கூட மனக்கஷ்டம் பட்டுக்கொண்டு சமாளித்து விடுகிறார்கள். மிடில் கிளாஸ் மக்கள் தம் குழந்தைக்கு எதிர் காலம் கல்வியில் மட்டுமே இருக்குனு அவங்க கடைசி கையிருப்பையும் செலவு செய்வதைப்பார்க்கும் போது ,இந்தியா வல்லரசா ஆகும்னு ஜோசியம் சொல்றவங்க மேல கொலவெறியே வருது :-((

      மழலையர் பள்ளியில் இருந்து பட்டம் வரைக்கும் ரேட் கார்ட் போட்டே கல்வி வியாபாரம் நடக்கும் ஒரே நாடு நம்ம நாடு தான்.கல்யாண் ஜீவல்லர்ஸ்லாம் இப்போ தான் ரேட் கார்டுக்கு வராங்க :-))

      நிர்வாண தேசத்தில் கோவணத்திற்கு ஆசைப்படும் அப்பாவிகளாகவே நாம் வாழ்ந்து மடிகிறோம்.

      என் புகைப்படம் எல்லாம் வர வேண்டாம் நீங்க முயற்சி எடுங்க கூட ஓடிவரேன்.

      ****

      *அரசுப்பள்ளீகளின் தரம் உயர கண்டிப்பாக அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் போட வேண்டும்.

      *தனியாருக்கு கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் பெற்றோர்கள் ஒன்றாக இணைந்து அவர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து தானே முன்வந்து பண உதவி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம்.
      உ.ம்:மின் விசிறி, பெஞ்ச், கழிப்பறை போன்றவை.

      இப்போதும் அரசுப்பள்ளீகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என ஒன்று செயல்படுகிறது அவர்களாக நிதி திரட்டி பள்ளிக்கு சில வசதிகள் செய்கிறார்கள்.அம்முறை இன்னும் வலுவாக்கலாம்.

      *அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்நுட்ப கல்லூரிகளில் இடம் என சட்டம் போட வேண்டும். மக்களுக்கு தனியார் மோகம் குறையும். பெரும்பாலும் ஏழைகள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் போராடுவதில்லை. கல்விக்கொடுப்பதே பெருசு என்று விட்டு விடுகிறார்கள்.எல்லா தரப்பும் அரசுப்பள்ளிக்கு வந்து விட்டால் பலமாக குரல் கொடுப்பார்கள் அவர்கள் சுய நலத்துக்காகவாவது.

      Delete
    3. //தனியாருக்கு கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் பெற்றோர்கள் ஒன்றாக இணைந்து அவர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து தானே முன்வந்து பண உதவி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம்.
      உ.ம்:மின் விசிறி, பெஞ்ச், கழிப்பறை போன்றவை.
      //


      இது லிஸ்ட்லயே இல்லாத சூப்பர் பாய்ண்ட்.!!

      Delete
  6. :(

    கல்வியும் மருத்துவமும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறுவது சரி என்றே ஒவ்வொரு நிகழ்வுகளும் தெரியப்படுத்துகின்றன

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியான விஷயம் டாக்டர்..

      அதற்கான காரியங்களில் நான் இறங்கத்தயார்..!

      உங்கள் உதவி கட்டாயம் தேவை!

      Delete
    2. தேசீயமயமாக்கப்பட்டவை எல்லாம் மிக நன்றாக நடந்து கொண்டிருப்பதாக ஒரு தவறான பிம்பம் வருகிறதே! ஆமை புகுந்த வீடும் அரசு புகுந்த துறையும் உருப்பட்ட சரித்திரம் இந்தியாவில் இருந்ததே இல்லையே! பிரச்சினைக்குத் தீர்வு, ஒரு முறையான கல்விக் கொள்கை, அதைக் கறாராக அமல்படுத்தத் தெரிந்த நிர்வாகம்,ஜனங்களுடைய விழிப்புணர்வு எல்லாவற்றையும் விட, ஒரு நல்ல தலைமை! எல்லா மட்டங்களிலும்!

      Delete
    3. முன்ன ஒரு மருத்துவ மானஸ்தர் இருந்தார் ,மருத்துவம் மேம்படனும்னா தனியாரால தான் முடியும், ஸ்டார் ஹெல்த் இன்சுரான்ஸ் ரொம்ப முக்கியம், கிராமத்துக்கு எல்லாம் டாக்டர் போக மாட்டாங்க அப்படிலாம் பேசுவார் , அந்த மானஸ்தர பார்த்தா சொல்லுங்க டொக்டர் :-))

      Delete
    4. வவ்வாலு...!! எதுக்கு தனிப்பட்ட முறைல அவரை வம்பிழுக்கிறீங்க?

      வேணாம் தலைவரே! அவர் நம்ப நண்பர்! கருத்து மட்டும் மோதட்டும்..மனிதர்களுடன் அல்ல..!!

      Delete
    5. சுரேகாஜி,

      மன்னிக்கவும், அவர இங்கே கலாய்ச்சு இருக்க கூடாது தான். ஆனாலும் மனுஷன் நேரத்துக்கு ஏற்ப நிறத்தை மாத்திக்கும் போது ஏதோ சொல்லனும்னு தோன்றி சொல்லிட்டேன்.

      அவர் நம்ம பழைய அடிமை தான் ,வேற எங்காவது சிக்காமலா போகப்போறார். அப்போ கவனிச்சுக்கிறேன். மற்றபடி கருத்துடன் மட்டுமே , தனிநபர் மோதல் எல்லாம் செய்ய எனக்கு பொறுமையும் இல்லை நேரமும் இல்லை.

      Delete
  7. காத்திருக்கேன். ”அந்தப் பதிவு”க்காக

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளா!!

      காத்திருங்க...காத்திருங்க!! :))

      Delete
  8. அண்ணே, நீங்க அடுத்த ‘ஆண்ட்ரூ’ வாகணும்..!
    :-)

    ReplyDelete
    Replies
    1. தனியாரில் லஞ்சத்தை ஒழிக்கணும்னா .... ஆண்ட்ரூவா ஆக முடியாது.. ஆண்டவனாத்தான் ஆகணும்..!! :))

      Delete
  9. Dear Surekaa

    This is the pity condition, where we live. Eventhough our consciousness did not allow, we have to survive in this world. (Oorodu Othu Vaazh). But we are unable to tolerate such attitude. Hence we are being targetted and started getting advices "GO AND LIVE IN FOREST". You are not fit to live in this socalled civilized (the other name of civilized is Corrupted) society.

    In case any help required from my side, do not hesitate to seek.

    ReplyDelete
  10. Dear Boss Ann...

    Yeah... It is true.!

    Sure.. You are my Lawyer.! :))

    ReplyDelete
  11. I was very eagerly waiting for this second part. But, much disappointed. (If I were in your place, I too would have acted like this. That's why I am delaying my idea of moving to India until my son completes school)

    There is an ongoing dispute between me and my sons' (CBSE) school thro the Education Council here. So I am interested to see how you are handling this.

    One more thing I noticed is that, the capitation fee and admission problems arise mostly in CBSE (private) schools. Are there any government-run CBSE schools in Tamilnadu?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டில் மும்மொழி எதிர்ப்பு கொள்கையால் ஜவஹர் நவயோதயா பள்ளிகள் (சி.பி.எஸ்.ஈ) துவங்கப்படவில்லை. புதுவையில் இருக்கு.

      மற்றபடி மத்திய அரசு ஊழியர்களுக்காக கேந்ரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கு, சென்னையில் திருமங்கலம், அஷோக் நகர்,கிண்டி சி.எல்.ஆர்.ஐ., ஐ.ஐ.டி கேம்பஸ் , மற்றும் சென்ரல் அருகே எல்லாம் இருக்கு. அப்ப்புறம் சைனிக் பள்ளிகள். இப்பள்ளிகளில் எல்லாரும் சேர முடியாது.

      நிறைய தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இருக்கு.

      Delete
    2. ஆமாங்க..!! வவ்வால் சொல்றதுதான் சரியான தகவல்..!!

      தனியார் CBSE பள்ளிதான் இப்ப நான் சொன்னது!! :(

      Delete
    3. ///கேந்ரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கு///
      அட... இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தானே ரெண்டு நாளைக்கு முன்னால ரயிலில் பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்...?

      Delete
  12. படத்துக்கு கீழ பாதிக்கப்பட்டவர்னு இருக்குமா அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இருக்காதா பின்னே? :))

      Delete
  13. படத்துக்கு கீழ பாதிக்கப்பட்டவர்னு இருக்குமா அண்ணா

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா.... இப்போது பாதிக்கப்பட்டவரால் முன்னால் பாதிக்கப்பட்டவர்ன்னு இருக்கும்! :))

      Delete
  14. கோவை மாட்டம் காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. இதை அரசு பள்ளி என்று சொன்னால் யாரும் நம்ம மாட்டார்கள். அந்த பள்ளியில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால் தனியார் பள்ளிகளே அந்த பள்ளியிடம் பிச்சைதான் எடுக்கணும்... அந்த அளவுக்கு பள்ளிக்கூடத்தை சிறப்பாக மெயின்டைன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

    சென்ற வருடம் 4 பள்ளி மாணவிகள் மெட்ரிக் பள்ளியில் இருந்து கழன்று இந்த பள்ளியில் வந்து சேர்ந்து கொண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

    இந்த பள்ளிக்கு ஏராளமான நன்கொடைகளை பொதுமக்களும் ஏராளமான வசதி படைத்தவர்களும் வாரி வழங்குகிறார்கள். அதை வைத்து பள்ளிக் கூடத்தை சிறைச்சாலையாக இல்லாமல் பள்ளிக்கூடமாக வைத்திருக்கிறார்கள்.

    தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கும் பணத்தில் பாதியையாவது இது போன்ற அரசு பள்ளிகளுக்கு கொடுத்து அந்த பள்ளிகளில் கவனம் செலுத்தினோமால் அரசு பள்ளி தனியார் பள்ளியை விட பல மடங்கு மேம்பட்டதாக விளங்கும்... நம்மில் யாருககு அந்த எண்ணம் இருக்கிறது... கடமைக்கு பணத்தைக் கட்டி பிள்ளைகளை படிக்க வைக்கிறோம் நாம்... ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடமே இந்த அளவுக்கு வளர்ச்சியில் இருக்கும் போது... நகரத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள்... பாவம்... நகரத்து சகோதர சகோதரிகள்...

    ReplyDelete
  15. இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்…
    http://tamildigitalcinema.com/?p=36449

    ReplyDelete
  16. Never ever let this go. You have to get this into light before that Principal becomes a multi millionaire!!!

    ReplyDelete
  17. Recognize education as a business.Transparency will benefit the consumers. competition will weed out sub par players.
    Get the tax from these private schools to fund govt schools.

    Food,clothing,shelter, transportation are all businesses.
    We should get the value for money, receipt for the money we pay them.

    Even with the current laws, we can subsidize govt. schools.
    But officials are ready to bend, just like us. who lost our morality.

    ReplyDelete
  18. It is true to be a sorry state, but the blind reasoning comes from us. So the reforms should start from us. From the pure economic point of view this is demand/supply gap. when the demand falls all these private cbse schools will get closed by themselves. So, we should focus on how to bring it down.
    all the best

    ReplyDelete
  19. இதை படிக்கும்போது "என்னடா இது" அப்படீங்கற ஒரு ஆதாங்கம் வ்ருதே தவிர துணிச்சலா எதும் பண்ண முடியல. உங்க பேரண்ட்ஸ் சொன்னமாதிரி குழ்ந்தைங்க படிப்பு என்ன ஆகிடுமோ அப்படினு பயமா இருக்கு. யாராவது எதாவது பண்ண மாட்டாங்களா அப்படினு ஒரு ஏக்கம் தான் வரும்....... :(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !