ஒரு கோப்பைத் தண்ணீர்



சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் மதியத்தைத்தாண்டிவிட்டது. உடனே அங்கிருக்கும் கேண்டீனில் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம். எல்லாக்கடைகளிலும் நட்சத்திர ஹோட்டலைவிட ஏகத்துக்கும் விலை வைத்து விற்பனை நடந்துகொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி – 60 ரூபாய் , இரண்டு பரோட்டா – 60 ரூபாய். (அளவும் சிறியதுதான்) நாங்கள் சப்பாத்தியும், பரோட்டாவும் வாங்கினோம். சாப்பிட ஆரம்பித்த பிறகுதான், தண்ணீரின் ஞாபகம் வந்தது. 

பிறகு குடிக்க தண்ணீர் கேட்டால், ’இல்லை சார் ! போய் பாட்டில் வாட்டர் வாங்கிக்குங்க!’  என்று கடைக்காரர் சொல்ல, 

     நான் உங்ககிட்டதான் உணவு வாங்கியிருக்கேன். நீங்கதான் தண்ணி தரணும் என்றேன் நான்.!

     உடனே. இல்லை சார்! இந்த இடத்தை காண்ட்ராக்ட்டுக்கு விட்டவங்க, தண்ணி பாட்டில் விக்கறதுக்குன்னு, தனியா ஒரு ஸ்டாலை வாடகைக்கு விட்டிருக்கோம். நீங்க தண்ணி குடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க! என்றார்.  
          
     இது என்னய்யா அராஜகம். அவுங்க சொல்றபடிதான் நாங்க சாப்பிடணுமா? அது முடியாது. எனக்கு தண்ணி வேணும். மேலும் அப்படிச்சொன்ன ஆளை நான் பாக்கணும் என்று தகராறு செய்ய ஆரம்பித்தேன்.

    இல்லை சார்! எங்களுக்கே நாங்க வாட்டர் பாட்டில்தான் வாங்கிக்குடிக்கிறோம் என்று சொன்னார்.

      அது உங்க பிரச்னை! எனக்கு குடிக்க தண்ணீர் நீங்கதான் தரணும். அதுதான் சட்டமும் கூட! என்று சொல்லி.. இதுக்காக யாரை நான் சந்திக்கவேண்டும்? என்று கேட்டேன்.

      ஆனாலும், அவர் மழுப்பினார். இதற்கிடையில் இவர்கள் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருந்தது. அப்போது நான் கொஞ்சம் குரலை உயர்த்த ஆரம்பித்து, அநியாயமாக 60 ரூபாய்க்கு பரோட்டா வாங்கி அதுக்கு தண்ணியும் காசு கொடுத்து வாங்கணுமா? என்று கேட்டவுடன்.,..ஓரிருவர் , ‘ அவர்தான் கேக்குறாருல்ல..! கொடேன்ப்பா! என்று சொல்லிக்கொண்டே சென்றனர். ஓரிருவர், உணவு வாங்குவதைத்தவிர்த்துச் சென்றனர்.

   இதற்கிடையில் உடன் வந்த நண்பர், தண்ணீர் பாட்டில் வாங்கிவந்துவிட்டார். அவர் எனக்காக தருவதாக இருந்தாலும், அந்தக்கடையிலேயே தண்ணீர் வாங்கிக் குடிக்காமல் போவதில்லை என்று நான் முடிவெடுத்திருந்ததால், அதை வாங்கவில்லை.  

      மீண்டும் என் வாக்குவாதம் தொடர்ந்துகொண்டிருந்தது. நான் அவரிடம் நீங்க இந்தக்கடைக்கு ஓனர் இல்லைன்னா, உங்க ஓனரையாவது கூப்பிடுங்க! பேசணும் என்றேன். அதற்கும்.. அவர் இங்க இல்லை சார்! என்றார். அதாவது, என்னை யாரையும் சந்திக்க வைக்கவோ, என் பிரச்னையை வேறெங்கும் எடுத்துச்செல்லவோ அவர் விரும்பவில்லை. ஆனால், நானும் விடுவதாயில்லை.

கடைசியாக நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘இப்போ உங்களை நான் அடிச்சா, நமக்குள் வரும் சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண யார் வருவாங்களோ அவுங்களை வரச்சொல்லுங்க பாஸு!

உடனே கல்லாவில் இருந்து 50 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று, ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிவந்தார். அவர்களிடம் இருந்த கேன் தண்ணீரிலேயே கை கழுவவும் வைத்தார்.

     இது செலவழித்தல் சம்பந்தமான பிரச்னையே இல்லை. என்னிடம் காசு வாங்கிக்கொண்டு எனக்கு உணவு கொடுக்கும் கடை, தண்ணீரை இன்னொரு கடையில் வாங்கிக்கொள்! அதுதான் இங்கு சட்டம்! என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய அராஜாகம்! இத்தனை களேபரத்தையும், கண்காட்சியின் ஒரு அங்கம் போல வேடிக்கை பார்த்த கூட்டம்தான் அதிகம்.! யாருக்கும் தட்டிக்கேட்க துணிச்சலில்லை. ஏனெனில் எல்லோர் கையிலும் வாட்டர் பாட்டில்கள்!

     இது போன்ற நிகழ்வுகள், இன்னும் எத்தனை விதமான நுகர்வோர் பிரச்னைகளை உருவாக்கப்போகிறது என்று தெரிவதற்கில்லை. நாளை, பரோட்டா இந்தக்கடை, குருமா அடுத்த கடை, தண்ணீர் அதற்கடுத்த கடை என்று வரும். எவ்வளவு பிரம்மாண்டமான கயமைத்தனத்துக்குள் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்று இப்போது புலப்படாது. ஏனெனில் நம் சட்டைப்பையில் இருந்து இன்னொருவன் காசை எடுத்து தன் பொருளை நம் கையில் திணிப்பதை நாமே எற்றுக்கொள்ளப்பழகிவிட்டோம். கொஞ்சம் நேரம் செலவழித்து, நேர்மையான கேள்விகள் மூலம், எனக்கு அது கிட்டியது. இது எல்லோருக்கும் கிட்டவும் வாய்ப்பிருக்கிறது. தவறு என்று சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்டால்..! ஏனெனில் அவர்களுக்கும் தெரியும்.! அவர்கள் செய்வது தவறு என்று!

     இது ஒன்று மட்டுமில்லை. வீட்டை விட்டு தெருவில் இறங்கினால், எங்கு சென்றாலும் நாம் தட்டிக்கேட்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவற்றை ஜஸ்ட் லைக் தட் நாம் புறம் தள்ளிச்செல்கிறோம். ஆனால், எல்லாத் தீவிரவாதங்களுக்கும் இதுதான் தாய் என்பதை மறந்துவிடக்கூடாது. தட்டிக்கேட்க வக்கில்லாத சமூகம், தீவிரவாதத்தை தானே பந்திவைத்து வரவேற்கிறது என்று அர்த்தம்.! பதிவர்கள் சமூகம் என்று மார்தட்டிக்கொள்ளும் நாம் ஏன் சிறுவிஷயங்களிலிருந்து தட்டிக்கேட்க ஆரம்பிக்கக்கூடாது.? இதோ நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்.

இயக்கத்தின் பெயர் : கேட்டால் கிடைக்கும்
பொறுப்பு : கேபிள் சங்கர், சுரேகா.

கேபிள் சங்கர் : 98403 32666 , sankara4@gmail.com,
சுரேகா : 96000 97444, surekaanow@gmail.com

விபரம் வேண்டும் அனைவரும் எங்களைத்தொடர்புகொள்ளலாம். 

     பி.கு : சென்ற வாரம்தான் கேபிள் சங்கர் ஒரு பதிவில், எங்கள் பக்கத்து கட்டிடமான ‘ஃபேம் நேஷனலில்’ கேண்ட்டீனில் தண்ணீர் கேட்டுவாங்கிக்குடித்தது பற்றி போட்டிருந்தார். அதே போன்ற நிகழ்வு எனக்கும் நடந்தது ஆச்சர்யம்.! நாங்கள் எப்போதும் இதேபோல் தட்டிக்கேட்பதை வழக்கமாகவே வைத்திருப்பதால், இதை ஏன் பதிவர்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்று விவாதித்துக்கொண்டதன் விளைவுதான் இது!

Comments

  1. கேட்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு வந்தாலே.. பெரிய மாற்றஙக்ள் தானாய் நிகழும்.

    திரும்ப திரும்ப தியேட்டர் கட்டணங்கள் குறைகக் பட வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தேன். இன்று அதை பற்றி விநியோகச்தர்களும், தியேட்டர் அதிபர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது நான் எழுதியதால் கிடையாது. இது போல பலருக்கு நாம் சொல்வது சரி என்று பட்டதால்தான். எனவே.. நம்மால் முடிந்தததை நிச்சயம் இணைந்து செய்வோம்.

    ReplyDelete
  2. ஆம்..
    இன்னும் நிறைய இருக்கு ஜி!

    ஆட்டோ கட்டணம்

    எம்.ஆர் பியில் பொருட்கள்

    வெளியூர் பேருந்துகள் - நிறுத்தும் உணவகங்கள்

    ஆம்னி பஸ் கொள்ளைகள்

    திரையரங்க அராஜகங்கள்

    பார்க்கிங் கட்டணங்கள்

    ஆர்.டி ஓ. அலுவலக லஞ்சங்கள்

    என....

    ReplyDelete
  3. அன்பின் சுரேகா - நல்லதொரு இயக்கம் - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. எதாவது செய்யனும் பாஸ்ன்னு அடிக்கடி சொல்வோம்

    நீங்க துவங்கிட்டீங்க, சந்தர்ப்பம் வாய்க்கையில் நாங்களும் உங்களோடு இணைகிறோம்.

    இது நல்லபடியாக போக எமது பிரார்த்தனைகள்

    ReplyDelete
  5. வாங்க சீனா சார்! மிக்க நன்றி!

    ReplyDelete
  6. வாங்க நட்புடன் ஜமால்.

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  7. வாங்க அப்துல்லா அண்ணே!

    நீங்களும் இருக்கீங்க! :)

    ReplyDelete
  8. ராஜதானி எக்ஸ்பிரசில் டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த போது எனக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்தது. ரயில் கால தாமதமாக ஓடிக கொண்டிருந்தால் அவர்கள் செலவில் தண்ணீர் பாட்டில் தரமாட்டார்களாம். நாம்தான் காசு கொடுத்து வாங்கி அருந்த வேண்டும் என்று பணியாளர் அடம பிடிக்க, என்னுடன் வந்த எனது சீனியர் காசு கொடுத்து தண்ணீர் வாங்க முற்பட்ட போது நான் தலையிட்டு மேனஜரை வரவழைத்து ரொம்ப நேரம் வாக்கு வாதங்களில் ஈடுபட்ட பின்னர் தண்ணீர் பாட்டிலை காசு வாங்காமல் தந்தார். ரயிலில் தனியார் உணவு ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால் நான் ஒரு ரயில்வேத் துறையை தணிக்கை அதிகாரி என்ற போதிலும் அந்த மேனஜர் என்னிடம் நிறைய விவாதம் செய்தார். இவ்வளவுக்கும் அந்தச் சமயத்தில் நான் இலவச பாசில் பயணிக்கவில்லை. முழுப் பணம் செலுத்தித் தான் பயணம் செய்து கொண்டிருந்தேன்.

    அதன் பின்னர் நிறைய சட்டங்கள், விதிகளைப் பற்றிப் பேசி அவரை கன்வின்ஸ் செய்ய வேண்டியதாயிற்று. இவ்வளவு நடந்தும் அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் ஒருவர் கூட சப்போர்ட் செய்யவில்லை. என்னவோ எனக்கு மட்டும் தான் தண்ணீருக்கு போராடிக் கொண்டிருக்கிறேன் என்ற மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அளவுக்கு உரிமையை மீட்டுத் தந்த பின்னரும் அவர்களும் கொஞ்ச நேரம் கழித்து குடிதண்ணீரைக் காசு கொடுத்து வாங்கித் தான் சாப்பிட்டார்கள் என்பது தான் ஹைலைட்.

    ReplyDelete
  9. வாங்க அஷ்வின் ஜி!

    நீங்கள் செய்த்துதான் சரி!

    ஆம். இதுபோல போராடுபவர்கள் ஒன்றிணைவோம். கேட்டால் கிடைக்கும் என்பதை வலியுறுத்துவோம்.

    ReplyDelete
  10. weldone surekaji you narated verynicely yesterdays incident.keep it up
    ungal 'iyakkathil' sera yenna formalities pls mail me thanks.

    ReplyDelete
  11. வாங்க MK ஜி...! மிக்க நன்றி! விபரம் மெயில் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்!

    ReplyDelete
  12. நான் கடந்த வருடம் இதே கண்காட்ச்சியில் கலந்து கொண்டு மேற்படி அனுபத்தைப் பெற்றேன் ....ஆயிரக் கணக்கான கோடிகளில் வர்த்தகம் செய்பவர்கள் இந்த அளவிற்கு கேவலமாக நடந்துகொள்கிறார்கள் .தங்கள் இயக்கத்திற்கு எனது ஆதரவு உண்டு ...

    ReplyDelete
  13. வாங்க கூடல் பாலா!

    ஆமாம். இதில் .. நம் தவறுதான் அதிகம் என்பேன் நான்! இதுபோல் ஒட்டுமொத்தக்கூட்டமும் கேட்டால் கிடைக்குமல்லவா! அவர்களைச்சுரண்ட வைப்பதே நமது சகிப்புத்தன்மை என்ற பெயரில் ஒளிந்திருக்கும்..(மன்னிக்கவும்)சொரணையின்மைதான்!!

    ReplyDelete
  14. ஆக நீங்க எல்லாரூம் ஆறடி உசரமும், எம்பது கிலோ உடம்பு உள்ளவங்க போல தெரியுது! ..
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    ( ஒண்ணுமில்ல, ச் .சு...ம்.....மா )

    ReplyDelete
  15. inside koyamabedu bus stand right corner there is a mini market.they selling biscuit snacks everything extra 2 rupees with MRP ...........

    ReplyDelete
  16. அலுத்துப் போனாலும் நான் கேட்காமல் விடறதில்லை.

    அரசாங்க பொருட்காட்சியிலேயே ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் 20 ரூ. :((

    இவர்களிடம் பொருள் வாங்குவதைத் தவிர்த்தாலே போதும்.

    நல்ல முயற்சி ஜி! வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. நல்ல முயற்சி எனது ஆதரவு என்றும் உண்டு..

    ReplyDelete
  18. வாங்க வெள்ளி நிலா!

    சரியா சொன்னீங்க! :))

    ஆமா...! கேள்வி கேக்குறவங்க - எதிராளிக்கு அப்படித்தான் தெரிவாங்க.. !! :)

    ReplyDelete
  19. வாங்க சிங்.ஜெய்க்குமார்..

    அங்கு மட்டுமில்லை. தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இதுதான் நிலைமை..!

    ஒன்று...போராடணும்..

    இரண்டு...புறக்கணிக்கணும்.

    ReplyDelete
  20. வாங்க சிங்.ஜெய்க்குமார்..

    அங்கு மட்டுமில்லை. தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இதுதான் நிலைமை..!

    ஒன்று...போராடணும்..

    இரண்டு...புறக்கணிக்கணும்.

    ReplyDelete
  21. வாங்க பாபாஷா..!

    நாம் ஆரம்பிப்போம்..!

    நீங்க சொல்வது சரிதான்!!

    ReplyDelete
  22. வணக்கம் சுரேகா!

    கேபிள் எழுதியபோதே இப்படி ஒன்று ஆரம்பித்தால் நாங்களும் இணைந்து போராட தயார் என்று சொல்லி இருந்தோம் .. இப்போ ரொம்ப மகிழ்வாக இருக்கிறது.. நாங்களும் இருக்கிறோம் உங்களோடு..

    ராஜா அனு

    ReplyDelete
  23. குழந்தை தொழிளாலர்களை வேலைக்கமர்த்தும் வணிக நிறுவனங்களயும் புறக்கணிக்கணும், அதையும் நம் இயக்க அஜெண்டாவில் சேத்துக்கலாமா?
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  24. வாங்க ராஜா அனு!

    மிக்க மகிழ்ச்சி!

    ஆயிரம் மைல் பிரயாணம்தான்..
    முதல் அடி எடுத்துவைப்போமே!

    வாங்க செயல்படுவோம்!

    ReplyDelete
  25. வாங்க ஹெல்ஸ் ப்ளஸ்..!

    நன்றி!

    ReplyDelete
  26. தட்டிக்கேட்டா நடந்திடுமா போங்க தலைவரே காமெடி பண்றீங்க. சென்னை பேக்கர்ஸில் எங்கம்மாவுகு ஒரு திவான் அனுப்பி மாசம் 3 முடிஞ்சிடுச்சு. இந்தோ அந்தோங்கறான. சரியான ரெஸ்பான்ஸ் இல்ல. அதைப்பத்தி தனியா புலம்பிருக்கேன்.

    http://pudugaithendral.blogspot.com/2011/06/blog-post_3003.html

    ReplyDelete
  27. வாங்க புதுகைத்தென்றல்..!

    திவான் மேட்டர் படிச்சேன்..!
    இந்த இடத்தில் நீங்கள் நடந்துகொண்டதுதான் தட்டிக்கேட்டல்.. ஆனா அதுக்கப்புறம் உங்களுக்காக குரல் கொடுக்க இன்னும் நிறைய பேர் வந்தா எப்படி இருக்கும்? அதுதான் நான் சொல்றது!!

    இப்ப சொல்லுங்க சென்னை பேக்கர்ஸ் ..சென்னை ஆபீஸ் எங்க இருக்கு? நாங்க போய் கேக்குறோம்!!

    ReplyDelete
  28. வாங்க முரளி கண்ணன் அண்ணாச்சி!

    நீங்களெல்லாம் கட்டாயம் வேணும்..!

    ReplyDelete
  29. கூட்டமா போய் கேட்டா தீர்வு கிடைக்கும்னு சொல்றீங்களா?? ம்ம்ம் அவங்க கிட்டேயிருந்து எந்த பதிலும் வரலைன்னா கண்டிப்பா உங்களுக்கு மெயில் தட்டுறேன்.

    நன்றி

    ReplyDelete
  30. இந்த ராஜதானி எக்ஸ்பிரஸ்ஸில் சாப்பாடுங்கற பேர்ல கொடுப்பதை தடுத்து நிறுத்தினா பரவாயில்லை. தில்லி டு ஹைதை நொந்துட்டோம். இதுக்கு நம்ம வைகை,பல்லவன் சாப்பாடு எம்புட்டோ நல்லா இருக்கும்.

    ReplyDelete
  31. செய்ங்க தென்றல்..!


    இப்பதானே ஒண்ணு கூடுறோம்.. ஒவ்வொண்ணா செய்ய ஆரம்பிப்போம். சின்னச்சின்ன பிரச்னைகளில் நிரந்தர வெற்றியை அடைவோம். பிறகு...எல்லாமே சரியாகும் நாளை நோக்கிப் போவோம்.

    ReplyDelete
  32. உங்க பேர சொன்னபிறகுதாண்ணே.. செம அடி!

    ;-))

    ReplyDelete
  33. அட.. அதிஷா!
    வாங்க!

    என் பேரைச்சொல்லுவாரு!
    அதிகமா அடிங்கன்னு...சொன்னதே நாந்தேன்..! :)))

    ReplyDelete
  34. பாஸ், தட்டி கேக்க ஆள் வரல வரல ன்னு சொல்லி கவலை படுரோம்ல. இதுவரைக்கும் அவுங்க வந்துருக்கன்களா? கண்டிப்பா இல்ல.
    CABLE ஷங்கர் மற்றும் சுரேகா இஸ் வெரி கரெக்ட்!!! நாம தான் தீவிரவாதி ஆஹானும்.... 'குருதிபுனல்'ல கமல் சொல்லுவாரே, தீவிரவாதம் உருவாக்கபடுகிரதுன்னு இது தான்...

    இந்த 'வீரம்' இல்லாத பொது ஜனங்க நால நம்மளும் கஷ்டபடனும்ம்னு இருந்தா அது நம்மளோட உரிமையல்ல பறிக்குது?? அதை எப்படி accept பண்ணறது???

    நானும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கெளம்பிட்டேன் - நம்ம 'Traffic ராமசாமி' போல... பாப்போம் எவ்ளோ கஷ்டம் கொடுக்க போறாங்கன்னு, நானும் பாக்குறேன் 'வடிவேலு' மாறி எவ்ளோ அடிய தாங்குரேன்னு!!!

    ReplyDelete
  35. பாஸ்....குரல்கள் உயர்ந்தால் நிச்சயம் உரிமை காக்கப்படும்.... நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்.
    இது மாதிரியான ஒரு நிகழ்ச்சி எனக்கும் நடந்தது.. அதை என் ப்லாகில் எழுதிருக்கிறேன். இந்த லிங்கில் படிக்கவும்...http://venpuravi.blogspot.com/2011/07/blog-post.html

    ReplyDelete
  36. A bouquet!
    நல்லதொரு இயக்கம் - வெற்றி பெற நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  37. வாங்க வெண்புரவி , அருணா...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  38. Anne,

    Oru 1 latcham kaimaththa kedaikkuma?!?!?! Oru 19 days 23 hours lla thiruppi tharren....

    ReplyDelete
  39. தட்டிக்கேட்டால் கிடைக்கும்னு சொன்னீங்க. நம்பிக்கையே இல்லாம இருந்தேன். உங்க தொடர் முயற்சியில இன்னைக்கு திவான் வீடு வந்து சேர்ந்திருக்கு. மனமார்ந்த நன்றிகள் பல. பலருக்கும் இந்த விழிப்புணர்வு சென்று சேரணும்.

    பதிவு எழுதறேன். மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  40. http://pudugaithendral.blogspot.com/2011/08/blog-post_30.html
    திவான் போய்ச்சேர்ந்திருக்கு
    பதிவு போட்டிருக்கேன்

    ReplyDelete
  41. //இப்போ உங்களை நான் அடிச்சா, நமக்குள் வரும் சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண யார் வருவாங்களோ அவுங்களை வரச்சொல்லுங்க பாஸு!//

    :) :)

    உங்கள் இடுகையைப் படிக்கும் வரை உணவகத்தில் தண்ணீரைத் தனியாகக் காசு கொடுத்து வாங்குவது கொள்ளை என்பது உறைக்கவில்லை ;(

    ReplyDelete
  42. நீங்கள் குறிப்பிடும் கேபிள் சங்கரின் இடுகைக்கு இணைப்பு கிடைக்குமா?

    ReplyDelete
  43. http://www.cablesankaronline.com/2012/08/blog-post_22.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !