புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..!


ஒருத்தர் , நமக்கு நேரா நம்மளை உயர்வா பேசிட்டு, அடுத்தவுங்ககிட்ட நம்மளைப்பத்தி இழிவா பேசுறது நமக்கு என்னிக்குமே பிடிக்காது. ஆனா அதை நம்ம பண்ணினா ரசிச்சு பண்ணுவோம். ஏன்னா புறம் சொல்றதுங்கறது நமக்குள்ள ஊறிப்போச்சு!

திருக்குர்ரான் சொல்லுது ! ஒருவனைப்பற்றி புறம் கூறுதல் தன்னுடைய சகோதரனுடைய மாமிசத்தை சாப்பிடுவதற்குச்சமம். !

அந்த அளவுக்கு அதில் என்ன கெடுதல் இருக்கமுடியும்?
இது சாதாரண விஷயமில்லை. நம்மை படுகுழில தள்ளிடும். புறம் கூறும் மனப்பான்மை உள்ளவுங்க வெற்றிக்கோட்டை தொடவே முடியாது.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

முகத்திற்கு முகம், இரக்கமே இல்லாமல், நாம் கடுஞ் சொற்களைக் கூறினாலும், கூறலாம். ஆனால், கண் எதிரே, ஆள் இல்லாத பொழுது, ஒருவரைப் பற்றி மட்டும், இழிவாகப் பேசுதல் கூடாதுன்னு வள்ளுவரே சொல்றார்.

மொக்கச்சாமி ஒரு விமானத்துல போய்க்கிட்டிருந்தார். அப்ப அவர் சீட்டுக்குப்பக்கத்துல, ஒருத்தர் சாதாரணமா உக்காந்திருந்தார். அவர்க்கிட்ட மொக்கச்சாமி மெதுவா பேச்சுக்குடுத்தார். இவரு தன்னைப்பத்தி ரொம்ப பெருமையா பீத்திக்கிட்டார். போகப்போக பக்கத்தில் உள்ளவர் வியக்கற மாதிரி நான் அப்படியாக்கும், இப்படியாக்கும்ன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சார். அவரும் பேசாம கேட்டுக்கிட்டிருந்தார். இந்த ப்ளைட்ட ஓட்டுற கேப்டன் கூட நம்ம பயதான்.! ரொம்ப நாளா என்னை கெஞ்சி கேட்டுக்கிட்டதால ஏறினேன். பஸ்ட் கிளாஸ்லதான் உக்காரணும்னு ஒரே அடம்.! நாந்தான் அதெல்லாம் வேணாம்ப்பா உனக்கு வேலை போயிடும்னு சொல்லி அடக்கிவச்சேன். பள்ளிக்கூடம் படிக்கிறப்ப 10 மார்க் கூட வாங்காத பயலெல்லாம் இன்னிக்கு கேப்டன்! அவனுக்கு சைக்கிளே சரியா ஓட்டத்தெரியாது! இப்ப ப்ளைட் ஓட்டுறான்னு அந்த விமானத்தோட கேப்டனை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசிக்கிட்டிருந்தாரு..அப்பன்னு பாத்து ஒரு ஏர் ஹோஸ்டஸ் வந்து, சார்..! ன்னாங்க! தன்னைத்தான் கூப்புடறார்ன்னு நினைச்சு, எஸ் ன்னாரு மொக்கச்சாமி! அவுங்க அவருக்கு பக்கத்துல இருக்குறவரைக்கூப்பிட்டு...சார் ! உங்க கேப்டன் ரூம் க்ளீன் பண்ணியாச்சு ! உங்க கேபினுக்கு போலாம் ன்னாங்க! அப்பதான் தெரிஞ்சுது! அவர்தான் அந்த விமானத்தோட கேப்டன்னு! கேப்டனும் மொக்கச்சாமிய மொறச்சு பாத்தாரு ! உடனே மொக்கச்சாமி அலட்டிக்காம அவர்க்கிட்ட சொன்னாரு! அடடா..! நான் ப்ளேன் மாறி ஏறிட்டேன் போல!
என்ன ஒரு சமாளிபிகேஷன்

இந்த மாதிரி ஆட்களை நீங்க எல்லாருமே சந்திச்சிருப்பீங்க! இதுக்கான அடிப்படைக்காரணம், தன்னைப்பத்தி புகழ்ந்துக்க விஷயமில்லாதபோது, அடுத்தவங்களைப்பத்தி இகழ்ந்தா சந்தோஷமா இருக்குறதுதான் காரணம்! அது மூலமா.. நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி அடுத்தவரைக் கவரும் முயற்சி! ஆனா அதோட முடிவு தோல்விதான்கிறதுதான் சோகமான விஷயம்!

ஒருவர் இருக்கும்போது அவரைப்பத்தி என்ன பேசுவோமோ அதையே அவர் இல்லாதபோதும் பேசிட்டா பிரச்னையே இல்லை! ஏன்னா இல்லாதபோது பேசின குறை, அவருக்கு தெரியவரும் புள்ளியில்தான் நாம் சக மனிதனின் நம்பிக்கையை நமக்கே தெரியாமல் இழக்க ஆரம்பிக்கிறோம்
பெரிய பெரிய நிறுவனங்கள்ல எல்லாம், எவ்வளவு பெரிய திறமைசாலியா இருந்தாலும், இந்த மாதிரி புறம் சொல்லும் குணமுள்ளவுங்களை வெளில அனுப்பிடுவாங்க..! ஏன்னா புறம் கூறும் நபர்களாலத்தான் ஒரு நல்ல நிறுவனம் அழிஞ்சு போகும்ன்னு அவுங்களுக்கு தெரியும்.

பாட்சா படத்துல தேவன் நக்மாவோட அப்பாவா வருவாரு! அவர்தான் பாட்சாவான ரஜினிக்கிட்ட நல்லவர் மாதிரி நடிச்சு, அவரைப்பத்தி ரகுவரன்கிட்ட புறம் சொல்லி ஏமாத்தப்பாப்பாரு! அதைக்கண்டுபிடிச்சு ரஜினி தப்பிச்சுடுவாரு...அதே சமயம் கூட இருந்தே ஏமாத்தின தேவன் தான் தன் குடும்பத்தை கொன்னதுன்னு தெரிய வ்ந்ததும் ரகுவரனே , தேடிவந்து தேவனை கொன்னுடுவாரு! இதுதான் புறம் கூறுபவர்களோட நிலமை!

இந்த குணத்தை விரட்ட , முடிஞ்சவரைக்கும் ,அடுத்தவுங்களை குறை சொல்லாம இருக்கலாம். அப்படி சொல்றதா இருந்தா அவுங்க முன்னாடியே சொல்லிடலாம். அதை விட்டுட்டு, கோழைத்தனமா பின்னாடி போய் அவுங்களைப்பத்தி சொன்னா, அதை ரகசியமாவே சொன்னாலும் அது ஒரு நாள் வெளில வந்து நமக்கு அவமானமா போயிடும்.

வெளிவராமல் போன ஜக்குபாய் பட போஸ்டரில் ஒரு வாசகம் இருக்கும்...இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்! இதைவிட அழகா புறம் கூறும் நண்பர்கள் பத்தி எப்படி சொல்லமுடியும்?

ஏன்னா நமக்காக பிறரைப்பத்தி குறை சொல்பவர்கள் ! பிறருக்காக நம்மைப்பற்றியும் கட்டாயம் குறை கூறுவார்கள். இந்த நினைப்பு எப்பவும் இருந்தா போதும். நாமும் அடுத்தவுங்களைப்பத்தி பின்னால் பேசமாட்டோம். அடுத்தவுங்களும் நம்மகிட்ட பிறரைப்பத்தி சொல்ல பயப்படுவாங்க!
அதையும் மீறி சொன்னா ஒரே ஒரு தடவை இப்படி சொல்லிப்பாருங்க! " இப்படித்தானே மத்தவுங்ககிட்ட என்னப்பத்தி சொல்லுவீங்க"? அதுக்கப்புறம் புறம்கூறும் வாசனையே உங்க பக்கம் அடிக்காது.

எல்லாரையும் அகம் மகிழ பாராட்டி பழகிட்டா புறத்துக்கு வேலையே இருக்காது.

இப்ப புறம் மட்டுமில்ல..அகம் மகிழ்ந்தும் கூறுகிறேன். வாழ்த்துக்கள்!


நீங்கதான் சாவி - புத்தகத்திலிருந்து...!!





Comments

  1. நல்லதொரு பகிர்வு. எல்லோரும் இதை படிப்பார்கள் & ரசிப்பார்கள் ஆனால் அதை கடைபிடிக்க மட்டும் செய்யமாட்டார்கள். அப்படி கடைபிடித்தால் மற்றவர்களை குறை சொல்ல முடியாதே அப்படி குறை சொல்ல முடியாவிட்டால் அவர்களால் உயிர்வாழ முடியாதே

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு.இதை படித்தபிறகு நேற்று பதிவர் திருவிழாவில் உங்கள் புத்தகத்தை பார்த்தும் வாங்காமல் வந்ததை நினைத்து வருந்துகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் வங்கி வாசிக்கிறேன்.

    ReplyDelete
  3. சிந்திக்க வைக்கும் பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.. தங்களது புத்தகம் படிக்க ஆசை. என்ன செய்தால், எங்கு சென்றால் எனக்கு புத்தகம் கிடைக்கும்? வழிகாட்டுங்கள் நண்பரே. நன்றி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !