அருகாமை!

தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது.

அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.

            அந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் நடத்தும் பத்திரிக்கை பற்றியும் சொன்னார். பேசிவிட்டுக் கிளம்பும்போது, தெற்கு வீதியில் ஒரு கடை மாடியைச் சொல்லி, அங்குதான் இலக்கியக் கூட்டம் நடக்கும். வாங்களேன். அங்கேயே வந்து பணம் வாங்கிக்குங்க என்று சொன்னார்.

      அதேபோல் அங்கு போய்ப் பார்த்தால், நிறையப் பேர் வந்திருந்தார்கள். காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். தாடியைத் தடவி விட்டுக்கொண்டே சட்டைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ரசீது போட்டுக் கொடுத்தேன். உடனே, என்னை அந்தக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஒரு சிற்றிதழ் நடத்துறார்” என்று சொல்லி ஆரம்பித்தார்.

      நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் விடைபெறும்போது, நான்கைந்து புத்தகங்களை எடுத்து கையில் கொடுத்து, நிதானமா படிச்சுட்டு சொல்லுங்க! ஒருநாள் இந்தப் புத்தகத்தைப்பத்தின உங்க கருத்துக்களைப் பாத்துரலாம் என்று உற்சாகமாகச் சொல்லி வழியனுப்பினார்.

அதற்குப்பிறகு பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் பெயர் தெரிந்து, அவரும் ஒரு எழுத்தாளர் என்று அறிந்து, அவரது நூல்களையே ஆழமாகப் படித்து, புரிந்துகொள்ளமுடியாமல் சில இடங்களில் தடுமாறி , “தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்குப் புரியலை” என்று நான் சொல்லி, அவரே அதற்கு விளக்கமும் அளித்து , ஆதுரமாகப் பேசி அனுப்புவார். இசை , கலை, இலக்கியம், வரலாறு, மராட்டிய மன்னர்கள், தஞ்சையின் பாரம்பரியம் என்று அவர் தொடாத விஷயங்களே இருக்காது. அனைத்தையும் ஆழமாக அலசுவார். துவக்க காலங்களில் நான் படித்த பின் நவீனத்துவ இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.!

அவர் வீட்டில் ஒரு பெரிய நாய் வளர்த்துவந்தார். விபரம் தெரிந்து நான் பார்த்த முதல் மிகப்பெரிய நாய் அதுதான்.

நான் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றேன்.

பிறகு தொடர்பே இல்லை. சில ஆண்டுகள் கழித்து திரும்ப தஞ்சை செல்லும்போது விசாரித்தேன்.

இறந்துவிட்டார் என்றார்கள்.

அவரது நிறுவனத்தின் பெயர் GML Screen Pirinting என்று தெரியும்.

பழகத் தொடங்கி அவரை பல காலம் “GML பிரகாஷ்’ என்றுதான் நினைவு வைத்திருந்தேன்.

அவர்தான் எழுத்தாளர் “தஞ்சை பிரகாஷ்” என்று பின்னர்தான் தெரியும்.







Comments

  1. என்னை பார்க்க வரச் சொல்லியிருக்கிறார். தவற விட்ட பாவியே நான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !