தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100!




உலக நாடுகளின் தீவிரவாத வேட்கை போக, நமது தேசத்துக்குள் பார்ப்போம்.



வேற்றுமையில் ஒற்றுமை -என்ற உளுத்துப்போன உற்சாக வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே இந்திய வரைபடத்தை எந்த 
மாநிலத்துக்காரர் பார்த்தாலும், அண்டை மாநிலத்தின் மீது சின்ன சினமாவது ஏற்படுவது தவிர்க்கமுடியாத கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆளவந்தானில் கமல் சொல்லுவார். ' அவ ரொம்ப நல்லவ' - அதை, உன் மனசாட்சிய விட்டு சொல்லச்சொல்லிப்பாருன்னு அவலட்சணமும்,அவ நம்பிக்கையும் நிறைந்த முகத்தை வைத்துக்கொண்டு! அதே மனநிலைதான் நம் தேசத்தைப்பற்றி  நினைக்கும்போதும் வரும் இயல்புக்கு இன்றைய சூழலில், நாம் வந்துவிட்டோம்.

வெள்ளையர்களை எதிர்த்தவரை தெரியாத மாநில நிறங்கள், இப்போது தெரிய ஆரம்பித்ததற்கு அடிப்படைக்காரணம் நமது இனவாத, மொழிவாத, பிரிவினைவாத அரசியல் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

பக்கத்து மாநிலக்காரன் வந்தால் , இங்கு இடம் கிடையாது என்று அடித்து விரட்டும் ஆட்களை வளர்த்துவிடும் வரைக்கும் எதுவும் தெரியாததுபோல் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசின் செயலில் இருக்கும் அஹிம்சை எத்தனை சதவீதம் ?

அணையின் உயரத்தை கொஞ்சம் கூட உயர்த்திக்கொள்ளக்கூடாது என்றும் அதனால் பயன்பெறும் மாநிலத்தை , எக்கேடாவது கெடட்டும் ஆனால் இதை வைத்துதான் எங்கள் அரசியலை நடத்தமுடியும் என்ற கேவலமான நோக்கத்தினுள் இருப்பது தீவிரவாதம்தானே ?

பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று தலைமுறைகளாக போராடியது போக, அந்த மாநில ஊடகங்கள், திரைப்படம், திருவள்ளுவர் என அனைத்தையும் பகிஷ்கரிக்கும் மனோபாவத்தினுள் இருப்பது எத்தனை பெரிய மிதவாதம்?

மாநிலத்துக்குள் மாநிலங்களை உடைத்து, மொழி ரீதியான மாநிலம், இன ரீதியான மாநிலம் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்களிடம் இருந்து அப்படியே வாங்கிக்கொண்டு செயல்படும் இவர்களின் செயலில் அன்பையும் ஒற்றுமையையும் எதிர்பார்ப்பது நமது மடைமை தவிர வேறொன்றுமில்லை!

தினம் தினம் வேற்றுமாநிலத்தின்மேல் ஒருவிதமான வெறுப்பையே உமிழ வைத்து அதை உரமாகக்கொண்டு வேர் பிடித்துவளரும் இத்தகைய கேவலமான அரசியலைவிட தீவிரவாதம் எதுவாக இருக்கமுடியும். ?

இவர்களெல்லாம் மொத்தமாக கொத்துக் கொத்தாக கொல்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூக அமைப்பையே சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயக்கொலைகள், நில ஆக்கிரமிப்புக்கொலைகள், பிடிக்காத ரௌடி 
என்கௌண்ட்டர்கள், கடத்தல் கொலைகள், ஜாதிக்கலவர துப்பாக்கிச்சூடுகள், என எண்ணிலடங்கா காரணங்களுடன் நாள்தோறும் தேசம் முழுவதும் வெளியாகும் பத்திரிக்கைகளின் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்கும் இவற்றின் எண்ணிக்கை 
தீவிரவாதத்தாக்குதல்களின் பாதிப்பைவிட அதிகம் என்பதை அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நம் தேசத்தின் சாபக்கேடாக, தனிமனித அரசியல் வளர்ச்சிக்காக தூண்டப்படும் அனைத்துத்தீவிரவாதங்களையும் தினம் தினம் செய்தித்தாள்களில் ,சர்வசாதாரணமாகப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டுத்தான் இத்தகைய பெரிய கொலைகளை  எதிர்க்க முற்படுகிறோம் என்பது மிகவும் அவமானகரமானது !

எல்லா மாநிலங்களின் பிரச்னைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு பஞ்சாயத்தும் செய்யத்தெரியாமல், அவர்களில் ஒருவரைக்கூட பகைத்துக்கொள்ளவும் முடியாமல், 'நீயும் நல்லவன் - அவனும் நல்லவன் - பிரச்னையை அப்படியே தொடருங்க - என்று ஒரு வளும்பல்தனமான பதிலாகவோ, ' நீங்க சொல்றதுதான் சரி ' என்ற ஒரே பதிலை பிரச்னைக்குரிய இருமாநிலங்களிடமும் சொல்லிக்கொண்டிருக்கும் கயமைத்தனம் நிறைந்த, ஒற்றுமையில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாத மத்திய அரசின் கீழ் இருந்துகொண்டுதான் -அது எந்தக்கட்சியின் ஆட்சியின்கீழ் இருந்தாலும் சரி - கடந்த ஒரு தலைமுறையாக தீவிரவாதத்தை அழிப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது சுளீரென்று அடிக்கும் உண்மை!


இனி அரசின் தீவிரவாதத்தை பார்ப்போம்.... 


(அட..இது என் 100 வது பதிவு... 101 - ல் தொடருவோம் !)


Comments

  1. ஆஹா நான் தான் மொதவா? :))

    100 க்கு வாழ்த்துக்கள் அண்ணே :)

    ReplyDelete
  2. //பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று தலைமுறைகளாக போராடியது போக//

    இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நான் ஆதரிக்கிறேன். இனியும் பக்கத்து மாநிலத்தை குறை சொல்ல நமக்கு அருகதையே கிடையாது அண்ணே. ஏன்னா.. திருப்பூர் மாவட்டத்துடன் உடுமலையை சேர்ர்க்கக் கூடாது என உடுமமலை மக்கள் மிகக் கடுமையாக போராடினார்கள். அதற்கு அவர்கள் சொன்னக் காரணம் : அமராவதி மற்றும் திருமூர்த்தி அணை தண்ணீரை திருப்பூர் மக்கள் பயன்படுத்தி விடுவார்கள் என்பது தான். இரண்டு தரப்பும் ஒரே மாநிலம், ஒரே மொழி அதிலும் கீழிறங்கி சொல்ல வேண்டுமானால் முக்கால்வாசிப் பேர் ஒரே ஜாதி. அதில் பாதிப் பேர் உறவுக்காரங்க. ஒரு உறவுக்காரனுக்கே தண்ணீர் தர மறுக்கும் நாம் அண்டை மாநிலத்தை குறை சொல்ல என்ன தகுதி இருக்கு?

    ReplyDelete
  3. //
    இவர்களெல்லாம் மொத்தமாக கொத்துக் கொத்தாக கொல்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூக அமைப்பையே சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள்//

    முழுவதும் ஒப்புக்கொள்ளக் கூடிய கருத்து!

    நல்ல ஆழ்ந்த அலசல்!

    ReplyDelete
  4. /கடந்த ஒரு தலைமுறையாக தீவிரவாதத்தை அழிப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது சுளீரென்று அடிக்கும் உண்மை!//

    !!!

    100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. 100க்கு வாழ்த்துக்கள் தலைவரே.

    ReplyDelete
  6. அடுத்தவங்க வந்து அடிக்கத் தேவையில்லை, நம்க்குள்ளேயே நாம அடிச்சிக்கிணு கிடக்கும்போது ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு இளசு மாதிரி நம்ம நாட்டோட நிலைமை இருக்கறதை அழகா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  7. மிக்க நன்றி சஞ்சய் ஜி!

    ReplyDelete
  8. //இனியும் பக்கத்து மாநிலத்தை குறை சொல்ல நமக்கு அருகதையே கிடையாது அண்ணே.//

    அடடே...அடுத்த பாக மேட்டரை இப்பவே போட்டு உடைச்சிட்டீங்களே! நானும் அடுத்த கட்டமா இதைத்தான் சொல்ல வந்தேன்..இதுக்கு என்னிடம் நிறைய எடுத்துக்காட்டு இருக்கு!

    ReplyDelete
  9. வாங்க சந்தனமுல்லை..!
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  10. புதுகைத்தென்றல்...

    நீங்க எப்பவோ முடிச்ச 100ஐ இப்பதான் நான் தொட்டிருக்கேன். பாத்துக்குங்க..!
    என் வேகத்தை!

    :)

    உங்கள் வாழ்த்துக்களுடன் இன்னும் மொக்கைபோட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  11. தீவிரவாதத்தின் ஆணி வேரை பிடித்து நச்சுன்னு நகர்த்த ஆரம்பிச்சிருக்கே தொடரை. நீ கூறிய எதனையுமே மறுப்பதற்கில்லை.

    பொடியன் கூறிய திருப்பூர் தண்ணீர் பிரச்சினை கொஞ்சம் வேறு கோணத்தில் உடுமலைப் பேட்டையிலருந்து பார்க்கணும். திருப்பூரில் ஏற்கெனவே சாயப்பட்டறைகள் தனது கட்டுப்பாடற்ற சுற்றுப்புறச் சூழல் அணுகுமுறையின் பொருட்டு நீர் நிலைகளை மாசுப் படுத்திக் கொண்ட ஒரு ஷோன், அப்படி இருக்கையில் உடுமலை பேட்டை மக்கள் யோசிப்பதில் என்ன தவறு இருக்கக் கூடும்.

    இதனையும் அண்டைய மாநிலத்தின் நதி நீர் பங்கீட்டிற்கும் தொடர்பு படுத்த முடியுமா? திருப்பூரில் மாசுக் கட்டுப்பாடும், நீர் பயன்பாட்டின் அளவும் நிர்ணயிக்கப் பட்டுவிட்டால் அமராவதி மற்றும் திருமூர்த்தி தண்ணீரை அரசங்கம் பெற்றுத் தருவதில் பிரச்சினை இருக்க வாய்பிருக்காதென்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    வேகத்தைப்பத்தி எல்லாம் ஏன்கவலைப்படறீங்க சுரேகா..அழுத்தமான பல பதிவுகளை தந்திருக்கீங்க.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. உங்க 100க்கு வாழ்த்துக் கொடுக்க நினைச்சப்ப.... வாசலில் யாரோ வந்துருந்தாங்க. பேச்சுலே இதை மறந்துட்டேன்.

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  14. //பொடியன் கூறிய திருப்பூர் தண்ணீர் பிரச்சினை கொஞ்சம் வேறு கோணத்தில் உடுமலைப் பேட்டையிலருந்து பார்க்கணும். திருப்பூரில் ஏற்கெனவே சாயப்பட்டறைகள் தனது கட்டுப்பாடற்ற சுற்றுப்புறச் சூழல் அணுகுமுறையின் பொருட்டு நீர் நிலைகளை மாசுப் படுத்திக் கொண்ட ஒரு ஷோன், அப்படி இருக்கையில் உடுமலை பேட்டை மக்கள் யோசிப்பதில் என்ன தவறு இருக்கக் கூடும்.//

    அவர்கள் குடிநீருக்கு பயன்படுத்தினால் உடுமலை மக்களின் விவசாயத் தேவைக்கு தண்னீர் கிடைக்காமல் போய்விடும் என்பது தான் உடுமலை மக்களின் அச்சம். இதை தானே கர்நாடகமும் சொல்கிறது. நான் கர்நாடகத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் முதலில் நாம் திருந்தவேண்டும் என சொல்கிறேன்.

    ReplyDelete
  15. வாங்க முத்துலட்சுமி-கயல்விழி!

    நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு
    நன்றிங்க!

    ReplyDelete
  16. வந்து வாழ்த்தியமைக்கு
    மிக்க நன்றி துளசி டீச்சர்!

    ReplyDelete
  17. 100 க்கு வாழ்த்துக்கள் அண்ணே :)

    பதிவு சூப்பர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !