பொட்டண வட்டி




'எப்புடி இருந்தாலும் ரெண்டு லெச்சம் இல்லாம ஒண்ணும் செய்யமுடியாது.''

           நேற்று இளங்கோ அண்ணன் சொன்னது மீண்டும் மீண்டும் வந்துபோனது. அப்பா காலத்திலிருந்த டெடில் மிஷினை வைத்து அச்சகம் நடத்தி ,இன்றைய தேதிக்கு பிழைப்பது என்பது , பேப்பர் வெட்டும் இயந்திரத்தில் தலையைக்கொடுப்பதற்குச் சமம் என்று தெரிந்து போனது. சரி..இருக்கும் பொருட்களை விற்கலாம் என்றால், அதுவும் முடியாது, வேண்டுமானால் அச்சு எழுத்துக்களின் ஈயத்தையும் இரும்பையும் எடைக்கும், படக்கட்டைகளை குப்பைக்கும். எழுத்துக்களை வைத்திருந்த சிறு அறைகளாகப்பிரிக்கப்பட்ட பெட்டிகளை உடைப்பதற்கும்,அந்த பிரம்மாண்டமான லண்டனில் செய்யப்பட்ட , ராயல் சிம்பல் பொறித்த அச்சடிக்கும் எந்திரத்தை பழைய இரும்பு விற்கும் சுரேஷ் அண்ணனிடமும் கொடுக்கலாம்.

            அதில் ஒரே மிச்சம், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் , பெடலால் மிதித்து ஓட்ட முடியவில்லை என்பதற்காக பொருத்திய மோட்டார்.! அதையும் ஆயிரம்கூடப்பெறாது அண்ணே என்று எலக்ட்ரீஷியன் பாலு சொல்லிவிட்டான். நானும் பல்லைக்கடித்து இத்தனை ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். யாராவது ஒருவர் சிக்கினாலும் அவர்கள் கடன் சொல்லுவார்கள். அல்லது ஆப்செட்டில் ரேட் படியாமல் என்னை சிக்கவைப்பார்கள். அதிகபட்சமாக தனியார் பஸ் டிக்கெட் ஆர்டர் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதற்கும் மிஷின் வந்துவிட்டது. மாதாந்திரச் செலவுக்கு வாங்கிய கடனே ஒரு லட்சத்தைத்தாண்டிய பிறகுதான் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

               எனக்கு முன்னரே முழித்துக்கொண்டு, இன்று நகரின் முன்னணி ஆப்செட் பிரிண்டர்ஸ் என்று பெயரெடுத்த இளங்கோ அண்ணன் கடைக்கு சென்றேன். ஊரிலேயே பிரபலமாக அச்சுத்தொழில் நடத்திய காலத்தில் எங்களிடம் வேலை பார்த்தவர். ஒரு காலத்தில் அவர் என்னை முதலாளி மகன் என்ற அன்பில் பல இடங்களுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். என் பெயரை மட்டும் கம்போஸ் செய்து, கட்டை அடித்து, பேப்பர்களில் ஓட்டிக்கொடுத்திருக்கிறார். அதை என் புத்தகங்களில் ஒட்டி பள்ளியில் நான் பெருமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணே...! ஆப்செட் மிஷின் போடலாம்னு இருக்கேண்ணே!

ரொம்ப சந்தோசம்...! ஆனா இதுக்கு நீ இவ்ளோ காலமாக்கியிருக்கவேணாம்.!

எப்படியாவது ஓட்டிரலாம்னு நினைச்சேண்ணே!

            இங்க பாரு முகுந்தா! இப்பெல்லாம் தெருவுக்குத்தெரு ஆப்செட் பிரிண்ட்டர் வந்துருச்சு! போட்டியும் அதிகம்.. நான் உங்கப்பாக்கிட்ட வேலை பாக்கும்போது டெடில் மிஷின்ல பத்திரிக்கை அடிக்க கொறைஞ்சது மூணு நாளாகும். இப்பெல்லாம் பத்திரிகை மாதிரியை கொண்டாராய்ங்க! பேருகளைச்சொல்றாய்ங்க! கம்பியூட்டர்ல அடிச்சு ப்ரூப் பாக்குறாய்ங்க! ஓக்கேங்கிறாய்ங்க இருவது நிமிசத்துல ரெண்டு கலர் ஓட்டி ஐநூறு பத்திரிக்கையை வாங்கிட்டுப்போயிர்றாய்ங்க! ஒலகம் அவ்ளோ ஸ்பீடா போய்க்கிட்டிருக்கு.! நீ இதுக்கே இவ்ளோ நாளாக்கிட்ட! சரி ! பரவால்ல! மிசின்  மட்டும் போடணுமா? கம்ப்யூட்டருமா?

ரெண்டுந்தாண்ணே போடணும்.. நம்பக்கிட்டயே கம்பியூட்டர் இருந்தாத்தானே நல்லது.!

அதுவும் சரிதான்! எவ்ளோ பணம் வச்சிருக்க?

ஒரு லச்ச ரூவா கடன்!

சுத்தம்...அப்ப மினிமம் மூணு லெச்சம் வேணும்..!

ஏண்ணே!

பின்ன...ஆப்செட் மிஷின், கம்ப்யூட்டர், லேசர் ப்ரிண்டர்ன்னு ரெண்டு லெச்சம், முன்ன வாங்கின கடனை அடைக்க ஒரு லெச்சம்!

இப்ப என்னண்ணே பண்றது? ஒரு அம்பதாயிரத்துல முடிக்கிறமாதிரி ஏதாவது செய்யமுடியுமா? எங்க மாமனார்க்கிட்ட கேட்டுப்பாக்குறேன்....! பழைய சாமான்லாம் வித்தா பத்தாயிரமாவது தேறும். கடன்காரனுக்கு தேதி சொல்லிக்கலாம்.!

அதற்கு பதிலாகத்தான் முதல் வரியைச்சொன்னார் இளங்கோ அண்ணன்..!


           திரும்பத்திரும்ப யோசித்ததில், என்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த சதாசிவம் வட்டிக்கடை வைத்திருப்பது ஞாபகம் வந்தது. ரொம்ப அடாவடி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இன்ன விதமாத்தான் வட்டி கேட்பான் என்றில்லாமல் அநியாயமாக வட்டி வாங்குவான் என்று பலர் திட்டியிருக்கிறார்கள். ஆனால் , அவன் முன்னால் யாராலும் சொல்லமுடியாது. ஏனெனில் கிட்டத்தட்ட எல்லோருமே அவனிடம் சிக்கியவர்கள்தான். எனக்கு ஒரு நப்பாசை ஏற்பட்டது. அவனிடம் கேட்டாலென்ன?

மீண்டும் இளங்கோ அண்ணன்.!

யேய்! ஒனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சுப்போச்சா? அவன்கிட்ட போய் கடன் வாங்குறேங்குற? அதுக்கு நீ வேற எங்கயாவது வேலைக்குப்போய் பொழச்சுக்கலாம்.! லேட்டானாலும் பரவால்ல! பேங்க்ல லோன் ட்ரை பண்ணு!

இல்லண்ணே! அவன் என் க்ளாஸ்மேட்!

அதெல்லாம் அவன் பாக்கமாட்டான்ப்பா!

இதை வந்து நான் வத்சலாவிடம் புலம்ப....அவள்

’உங்களுக்கு ஒலகமே தெரியலைங்க! இளங்கோ அண்ணனே தனக்கு உங்களை போட்டியா உருவாக வுடுவாரா? அதான் நீங்க உங்க க்ளாஸ்மேட்டுக்கிட்ட கடன் வாங்குறதை தடுக்கப்பாக்குறாரு! மேலும் பேங்க்குல எப்ப அப்ளை பண்றது? எப்ப அவுங்க லோன் குடுக்குறது? அதெல்லாம் ஆவாத வேலை!! மொதல்ல எத எடுத்தாலும் இளங்கோ அண்ணன்கிட்ட போறதை நிறுத்துங்க! உங்க நண்பர் சதாசிவத்துக்கிட்டயே கேட்டுப்பாருங்க! கண்டிப்பா குடுப்பாரு!.’

அவளது தலைகோதல் வேலை செய்தது.

          காலை 9 மணிக்கு சதாசிவம் வீட்டுத்திண்ணையில் சென்றமர்ந்தேன். எனக்கு முன்னால் இரண்டுபேர் காத்திருந்தார்கள். பளீரென்ற வெள்ளைச்சட்டையும், கருப்பு ஜீன்ஸும் அணிந்து கையில் இரண்டு செல்போன்களுடன், வாயில் எதையோ மென்றுகொண்டே சதாசிவம் வாசலுக்கு வந்தான். எங்களை மையமாகப் பார்த்தான். எதிர் திண்ணையில் இருந்த கண்ணாடி அறைக்குள் சென்றுவிட்டான். ஒரு மணிநேரம் கழித்து நான் அழைக்கப்பட்டேன்.

சதாசிவம்! நல்லாருக்கியா?

ம்..நீ முகுந்தந்தானே!

ஆமாம்ப்பா! எங்க மறந்திருப்பியோன்னு நினைச்சேன்..!

அதெல்லாமில்ல! சொல்லு!

என் பிரச்னையையும், அதற்கான தீர்வு அவனிடம் இருப்பதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உருக்கமாகச்சொன்னேன். அவ்வப்போது எங்கள் பால்யத்தையும் ஊறுகாயாக்கினேன்.

நான் அவசரமா வெளியூர் போய்க்கிட்டிருக்கேன். நாளைக்கு வா!

        அன்று முழுவதும் சந்தோஷம் கரைபுரண்டது. கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி யார் யாரிடம் என்னன்ன ஆர்டர் கொடுக்கவேண்டும் என்று கனவெல்லாம் வந்தது. பில்கேட்ஸ் என் கடைக்கு கம்ப்யூட்டரை ஹீரோஹோண்டாவில் வந்து வைத்துவிட்டுப்போனார்.

அடுத்தநாள்.காலை 9 மணி..சதாசிவம் வீடு!

        நான் அன்று முழுவதும் அழைக்கப்படவே இல்லை. தொண்டரடிப்பொடிகளிடம் பல முறை என் அறிமுகம் சொல்லி, அவர்கள் அடிக்காமல் விட்டது அதிர்ஷ்டம்தான்!

       ‘பாவம்! அவருக்கு பலவேலை இருந்திருக்கும். அதான் மறந்திருப்பாரு! நாளைக்குபோங்களேன். கண்டிப்பா குடுப்பாரு!’ - வத்சலா சப்போர்ட்டினாள்.

         மீண்டும் அடுத்தநாள் 9 மணி! சதாசிவம் அன்று அதிகாலையே கிளம்பி வெளியில் சென்றுவிட்டு இரண்டுமணிக்குத்தான் வந்தான். நான் சரியாக வணக்கம் வைத்தேன். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

          எனக்கு அழுகையே வந்தாலும், வத்சலா , அவளே சதாசிவமாக மாறி பல்வேறு சமாதானங்கள் சொன்னாள்!

          இப்படியே எந்த ஒரு கவனிப்பும் இன்றி 10 நாட்கள் கடந்தது. இவன் வீட்டிலேயே தவம் கிடப்பதால், வரும் ஒன்றிரண்டு ஆர்டரும் போச்சு.! மேலும் வரவேண்டிய சின்னச்சின்ன வசூலும் இல்லை! வத்சலாவிடம் சொல்லாமல், மீண்டும் இளங்கோ அண்ணனைப்பார்க்கப்போனேன். அரைகுறையாக நடப்பைச்சொன்னேன்.

’இவ்ளோ நாள் கண்டுக்கலைன்னா அவன் உனக்கு பணம் தர பிரியப்படலைன்னு உனக்குத்தெரியலையா? அது கூடப்புரியாம புருசனும் , பொண்டாட்டியும் நம்பி திரியிறீங்க! சரி! இப்ப அடுத்தது என்ன?

நானே கொஞ்சம் கொஞ்சமா நம்ப நண்பர்கள்கிட்ட கேட்டு வாங்கலாம்ணு இருக்கேண்ணே..!

’முதல்ல அதைச்செய்! நீ இப்பவரைக்கும் என்கிட்ட யோசனைதான் கேட்ட! காசு கேக்கலை! அதாண்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது! என் மொதலாளி மவன் நல்லா வந்தா எனக்குத்தாண்டா பெருமை.. ! என்னால பெரிசா உதவ முடியாது. என் கிட்ட ஒரு பழைய ரிப்பேரான கம்பியூட்டர் இருக்கு! அதை எடுத்திக்கிட்டு போய் சீர் பண்ணிக்க! இந்தா ஐயாயிரம்! எப்ப வேணும்னாலும் திருப்பிக்குடு...!’

         கண்ணீர்மல்க நன்றி சொல்லிவிட்டு, நண்பர்களைச்சந்தித்தேன். என் நிலை புரிந்து அனைவரும் உதவி செய்ய , ஒரே மாதத்தில் ஆப்செட் ப்ரஸ் ஆரம்பித்துவிட்டேன்.

          கடை ஆரம்பித்து பதினைந்து நாட்கள் ஆகியிருக்கும். அன்று மதியம் மூன்று மணி அளவில், சதாசிவம் வீட்டில் பார்த்த குறுந்தாடி வைத்த ஒருவனும், கொஞ்சம் குண்டான ஒருவனும் வாசலில் வந்து இறங்கினார்கள்.

முகுந்தன் யாருங்க?

நாந்தான்!

’ஒரு மாசத்துக்கு மேலாகிப்போச்சு! இன்னும் வட்டி தராம இருக்கீங்களாம். அண்ணன் பாத்துட்டு வரச்சொன்னாரு!’

’என்னது? வட்டியா? சதாசிவத்தோட கூடப் படிச்சவம்ப்பா நானு! நான் பணம் வாங்கலை! குடுத்ததா நினைச்சுக்கிட்டிருக்கப்போறாரு!’

’அதெல்லாம் தெரியாது. எதுவா இருந்தாலும் அண்ணனை வந்து பாத்து சொல்லிருங்க!’

         இது என்னடா சோதனை? என்று ஒருபக்கம் நினைத்தாலும், ஏதோ தவறு நடந்திருக்கிறது, இவர்கள் ஆள் தெரியாமல் வந்து கேட்டிருக்கவேண்டும். அல்லது நம் பெயரைச்சொல்லி வேறு யாரோ வாங்கியிருக்கவேண்டும். என்ன இருந்தாலும் சதாசிவம் என் க்ளாஸ்மேட்..சொன்னால் கேட்டுக்கொள்வான். என்ற எண்ணத்தில் உடனே கிளம்பினேன்.

காத்திருக்கவேண்டிய அவசியமே இல்லாமல், சதாசிவத்தின் அறைக்குள் அழைக்கப்பட்டேன். தூக்கக் கலக்கமா?, போதையா? என்று தெரியாத ஒரு மத்திம நிலையில் சதாசிவம் அமர்ந்திருந்தான்.

’என்ன சதாசிவம்? நம்ப பசங்க வெவரம் தெரியாம என்கிட்ட வந்து வட்டி கேக்குறாங்க?’ வலியச் சிரித்துக்கொண்டே சொன்னேன்.

’நீ என்கிட்ட வந்து பணம் கேட்டீல்ல?’

’ஆமா!’

’’நான் குடுக்கமாட்டேன்னு சொன்னேனா?’

’இல்லை!’

’இங்கபாரு!’ என்று சொல்லிவிட்டு சதாசிவம் மேசையின் இடப்பக்க ட்ராயரைத்திறந்தான்.

            இரண்டு ஆயிரம் ரூபாய்க்கட்டுகள்! அது ஒரு வெள்ளைக்காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தது. அந்த வெள்ளைக்காகிதத்தில் கொட்டை எழுத்தில் ' முகுந்தன் ' என்று எழுதப்பட்டு , தேதி போட்டிருந்தது.

’பாத்தியா? நீ வந்துட்டுப்போன பத்து நாள்லயே எடுத்துவச்சுட்டேன். அப்படியே இருக்கு! நீ வந்து வாங்கிக்கலைன்னா நான் பொறுப்பில்லை! அப்படி பணம் வேணாம்கிறவன். என்கிட்ட வந்து சொல்லிட்டுப்போயிருக்கணுமா இல்லையா?  உனக்கு பணம் எடுத்து வச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு நான் கிறுக்கனா.? நீ அன்னிக்கே வேணாம்னுருந்தீன்னா வேற யாருக்காவது குடுத்திருப்பேன்ல! நீ வேற ஏதோ வேலைல இருக்க, வந்து வாங்கிக்குவன்னு நானும் வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா வெவரமா வேற எடத்துல அரேஞ்ச் பண்ணி கடை நடத்துற! சரி..சரி.. எதுக்கு வீண் பேச்சு? முப்பத்தஞ்சு நாளாச்சு... அஞ்சு நாளை பழகினத்துக்கு கழிச்சுக்குறேன். ஒரு மாச வட்டியை கட்டிட்டு நடையைக்கட்டு! அசல் திரும்பிட்டதா நெனைச்சுக்குறேன்.

எனக்கு கிறுகிறுத்தது. சதாசிவம் என்னை கவனிக்காததுபோல், என் பெயர் போட்ட பொட்டலத்தை எடுத்துவைத்துவிட்டு இன்னொரு பொட்டலத்தை எடுத்து அடுத்த ஆட்டுக்கான அரிவாள்போல் , மேசைமேல் வைத்துக்கொண்டிருந்தான். பயத்தில் வயிறும், கண்களும் கலங்கியதில் அதிலிருந்த பெயர் சரியாகத்தெரியவில்லை. பாவம்! எவன் மாட்டினானோ?

தள்ளாடிக்கொண்டே வெளியில் வந்தேன். குண்டன் அருகில் வந்து சிரித்துக்கொண்டே சொன்னான். ' பொட்டண வட்டியை எப்பண்ணே வந்து வாங்கிக்கட்டும்? '




Comments

  1. அன்பின் சுரேகா - இயல்பான கதை - நடை நன்று - பொட்டண வட்டி இப்பத்தான் கேள்விப்படறேன். இப்படியும் அநியாயம் நடக்குதா ? வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ஏற்கனவே வாசிச்ச நினைவு...

    ReplyDelete
  3. வாங்க சீனா சார்!

    கதைதான்! :))

    ReplyDelete
  4. வாஙக துளசி டீச்சர்!

    நடந்தாலும் நடக்கலாம்..!! :))

    ReplyDelete
  5. வாங்க ராஜு!

    ஆமா..பழசுதான்!! :)

    ReplyDelete
  6. வாங்க சசிகலா..

    நன்றிங்க!

    ReplyDelete
  7. Dear Suresh

    You have already posted this story in mail. But it is interesting to read the same again.

    God bless you Suresh.

    ReplyDelete
  8. அருமையான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. /
    ஏற்கனவே வாசிச்ச நினைவு...
    /
    yessu

    but very nice

    ReplyDelete
  10. சுரேகா, கதை சூப்பர். இப்படியெல்லாம் உலகத்துல நடக்குதா?
    (மீள் பதிவுக்கு மீள் பின்னூட்டம்) ;-)

    ReplyDelete
  11. வாங்க பாஸ்கர் அண்ணா!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  12. வாங்க தனசேகரன்

    மிக்க நன்றி!

    ReplyDelete
  13. வாங்க மங்களூர் தம்பீ!

    நலமா?

    ReplyDelete
  14. வாங்க அமர பாரதி

    ReplyDelete
  15. நல்லாருக்குண்ணே. என்ன தான் கோபம் இருந்தாலும் "அம்மா" செஞ்ச ஒரு நல்ல காரியம் கந்துவட்டி தடை. இதைவிடக் கொடுமையா "ஸ்கூட்" வட்டி போடுவாய்ங்க எங்கூர்ல. பாவம் பிளாட்பாரத்துல கடை போடுற ஜனங்களும் வேற வழியில்லாம போயி வாங்கும்...

    ReplyDelete
  16. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    இது நெசத்துல நடந்தாலும் நடக்கும்.

    ReplyDelete
  17. வாங்க அக்கப்போரு! நன்றி..!

    ஆம்..வட்டியோட உச்சகட்டத்தை யோசிச்சதுதான் இது! :))

    ReplyDelete
  18. வாங்க புதுகைத் தென்றல்..!

    ஆமாமா.!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !