ஓமப்பொடி # 4


               
         மின்வெட்டின் தாக்கம் காரணமாக, ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 


         எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :

        சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.

        அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

        முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.

        போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !

        எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெனரேட்டர் விற்றால் என்ன? செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் ஆச்சு! வியாபரத்தில் லாபமும் ஆச்சு!

        கடவுளை நினைத்துப் பார்த்தேன் : சென்னைக்கு மேலே அனந்த சயனத்தில் இருப்பவருக்கு.. திடீரென்று ஒரு பகுதியில் இருந்து, இரண்டு மணிநேரம் ’வ்ர்ர்ரூம்’ என்று இரைச்சல் வரும். அடுத்த வினாடியே.. இன்னொரு பகுதியிலிருந்து இரைச்சல்… எங்களைப் படைச்சு, இப்படியா இம்சிக்கிற.. நீ தூங்கவே கூடாது…! என்று நாம் கடவுளுக்குக் கொடுக்கும் பதிலடிதான்..ஜெனரேட்டர் சத்தம்.!!

        உண்மையில் இதனால் ஏற்படும் ஒலி மாசு நம்மை எவ்வளவு பாதிக்கும் என்று யாருக்குத் தெரியப்போகிறது.?
       ************************************************************************************************************

        புவனேஸ்வருக்கு,  ஒரு தமிழக நிறுவனத்தின் மேலாளர்களுக்கான மேலாண்மைப் பயிற்சியாளராகச் சென்றேன். அந்த நிறுவனத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அங்கு சென்றபின் தான் , எவ்வளவு சிறப்பான மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


        அந்த நிறுவனத்தின் சேர்மன், தன்னிடம் சிறப்பாக வேலை பார்த்த இளைஞர்கள் இருவரை நிறுவன இயக்குநர்களாக்கி இருக்கிறார். வாரிசுகளை விட , திறமையுள்ளவர்களை முன்னேற்றியிருக்கிறார்.

        இங்கிருந்து 2005 ல் 30 ஊழியர்களுடன் புவனேஸ்வர் சென்று இறங்கிய அந்த நிறுவனத்தில் இன்று 3000 ஊழியர்கள்.

        அங்கு வேலைபார்க்கும் அனைவரும் , நிறுவனத்தின்மீது ஒரு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

        நிறுவனத்தின் இயக்குநருடன் அனைவரும் மிகுந்த அக்கறையும், அன்பும் வைத்திருக்கிறார்கள்.

        கனவு நிறுவனமாக அது வளர்ந்து நிற்கிறது. அவர்களை உற்சாகப் படுத்தச் சென்ற நான், உற்சாகமடைந்து வந்திருக்கிறேன்.


        அந்த நிறுவனம் Chennai Radha Engineering Works . www.crewpl.com இணைய தளத்தில் DAY CON என்ற ஒரு இதழ் வெளியிடுகிறார்கள். தினசரி அதனை புதுப்பிக்கிறார்கள்.

இதுபோன்ற உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் ,பணிவு நிறைந்தவர்களால்தான் ஒரு தேசத்தை முன்னேற்ற முடியும்.


************************************************************************************************************
        சென்ற வார ஆனந்த விகடனின் (21.03.2012) என் விகடன் சென்னைப் பதிப்பில் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் அழைத்து வாழ்த்தினார்கள். அனைவருக்கும் நன்றி..!!ஒருவரை ஒரே நாளில் இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று நிரூபித்த விகடனுக்கும், வலையோசை குழுவுக்கும் உளமார்ந்த நன்றிகள்!






        என் பள்ளி நண்பன் ஒருவன் தேடிக் கண்டுபிடித்து, வாழ்த்தினான்.அது இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பெயர் ஞானவடிவேல்.அவன் என்னைவிட நன்றாகப் படிப்பான். எழுத்து மிகவும் அழகாக இருக்கும். நல்ல சிந்தனாவாதி. அவனது தந்தை தீவிர மார்க்ஸிஸ்ட். இப்போது அவன் ஒரு மருந்து நிறுவனத்தில் பெரிய பதவியிலிருக்கிறான். அவன் இவ்வளவு அழகாகக் கவிதை எழுதுவான் என்று தெரியாது. அவனது கவிதை ஒன்றை இங்கே தருவதில் பெருமிதம் கொள்கிறேன்.

எதிர்கால  இந்தியா

என்னாகும்  இந்தியா எதிர்காலத்தில் ?-எதில்
முன்னேறும்   இந்நாடு  வருங்காலத்தில்?

அதிகாலைத் தேநீரும் அந்திக்குப்பின் மதுநீரும்
பொதுவான பானமாகிப் போகும்-இனி
இளைஞரினம் கிழவரினம் ஆகும்.

கானல்வரிக் காவியங்கள் கோணல்வரி ஓவியங்கள்
நாணல்இணை  நாட்டியங்கள் சாகும்.-நம்
நுண்கலைகள் முன்கலைகள் ஆகும்.

தண்பரிதிமுன் எழுந்து செம்புழுதிமண் உழுது
தரணிக்கே உணவளித்த தேசம்-இனித்
தன்பசிக்கே தள்ளாடி மாயும்.

கடல்முகத்தைக் காண்பதற்கே  கடுகிவரும் ஆறனைத்தும்
அணை அடுக்கில் அடைபட்டுப் போகும்.-அதை
விடுவிக்க மாநிலப்போர் மூளும்.

கற்றவர்கள் கூட்டமிகும் .வேலையின்மை ஏற்றம்பெறும்
விற்கும் பொருள் ஏற்றுமதி ஒழியும் -இங்கு
விற்பன்னர்  ஏற்றுமதி நிகழும்.

ஊழலெனும்  நஞ்சுநன்றாய்   ஊறியுள்ள   நெஞ்சுமட்டும்
வாழையடி வாழையென வாழும். -இங்கு
ஏழைநிலை மென்மேலும் தாழும்.

ஆதிமுதல் நாம்வளர்த்த அன்பழிந்து அறிவொழிந்து
சாதிகளால்  இந்தியர்கள் பிரிந்து-ஒரு
தேதியினில் தானழிவார் விரைந்து.

நாளும்நிகழ் காரியங்கள்  நடுக்கம்தரும் சூழலிலே
நாளைஎன்ன ஆகும் இந்த நாடு?
என்ற வினா கண்டகனா இஃது.

அத்தனையும் பொய்த்திடலாம் சொர்க்கமென வைத்திடலாம்
சத்தனைத்தும் நமக்குண்டு பாரீர்!- இங்கு
சகலருக்கும் சமஉரிமை தாரீர்!  

சொத்தனைய பண்பாடு வித்தைதொழில்  விருத்தி செய்து 
வித்துக்களே   விழிமலர்த்தி வாரீர்!-இந்த
வையகத்தை  வழிநடத்தி வாழ்வீர்!


***********************************************************************************************************

Comments

  1. சுரேகாஜி,

    ஓமப்பொடியா ,என்னது பல்லு இல்லாத பெருசுங்க ஐடெமா போடுறிங்க எங்களைப்போல யூத்துகள் நச்சுனு கடிக்கிறாப்போல சிக்கன் பகோடா ,சில்லிசிக்கன்னு காரசாரமா போடுங்க :-))

    நல்லப்பகிர்வு! :-))

    தலைகீழ் மின்மாற்றி சேமகலனுக்கும் (இன்வெர்டர்)தட்டுப்பாடாம் , இப்போ ஜெனரேட்டருக்குமா, டீசல்,கெரோசின் கிடைக்குமா ,அதுக்கும் தட்டுப்பாடு தான், பேசாம சைக்கிளில் கொஞ்சம் பெரிய டைனமோ மாட்டிவிட்டு வீட்டில் ஆளுக்கு ஒரு மணிநேரம்ம்னு பெடல் அடிக்கலாம் :-))

    உடம்புக்கும் பயிற்சி, காசும் மிச்சம் ஆகும்!

    தலைகீழ் மின்மாற்றி சேமகலன் பற்றி ஒரு பதிவுப்போட்டு இருக்கேன் பாருங்க
    இன்வெர்ட்டர்
    ----

    நல்ல நிறுவனம் பற்றி சொல்லி இருக்கிங்க ஆமாம் அவங்க ஏன் ஒரிசாவுக்கு போனான்ங்க, இங்கே பவர்கட் வரும்னு முன்னாடியே கண்டுப்பிடிச்சுட்டாங்களா?

    -----
    உங்கள் பதிவைப்பற்றிய அறிமுகத்தால் விகடனுக்கு தான் பெருமை, விகடனில் தோன்றியதற்கு வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகள்!(அரசியல்வியாதிகள் போஸ்டர்களை படித்த பக்க விளைவு)
    ---

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்..

      வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்.. எப்ப தோணுதோ அப்பதான் எழுத முடியுது..!! :)

      ஒரிசாவுக்கு இவங்க போனது , முன்னரே இருக்கும் அனல் மின் நிலையங்களின் பராமரிப்புக்குத்தான்..

      அன்புக்கு மிக்க நன்றி தலைவரே!

      Delete
  2. Dear Sureka

    Whatever you mentioned it is 100% correct. Due to powercut, Inverters and Generators sales got increased. Due to increase in Generators there is a big line in petrol bunks to purchase Diesel and Kerosene market also going hot.

    About your Bhuvaneshwar Trip : Yes, there are so many enterpreneurs available outside their states. But they are not coming in limelight. But surely they will be highlighted in due course, with your help.

    En Vikadan has added one more feather in their crown by publishing about you.

    Wish you all the best

    With warm regards

    S. Bhaskar

    ReplyDelete
    Replies
    1. Dear Anns...

      Thanks for your love and compliments.!

      How was ur journey to surat?

      Delete
  3. அன்பின் சுரேகா - புவனேஷ்வர் சென்று வந்தீர்களே ! கஜூராஹோ / பூரி ஜெகனாதர் மற்ற எல்லா இடங்களூம் பார்த்தீர்களா ? இன்கிருந்து அங்கு சென்ற நிறுவனம் குறுகிய காலத்தில் பணியாளர்களின் எண்னிக்கையினை 100 மடங்கு பெருக்கி இருப்பது பாராட்டுக்குரியது. கவிதையும் அருமை. வலையோசையில் அறிமுகப் படுத்தப்பட்டது நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.

    Day con ல் - "சிந்தனைக்கு" பகுதி அருமையான அறிவுரை. பிறந்த நாள் வாழ்த்துகள் பணீயாளர்களுக்கு நிர்வாகம் கூறுவது நல்ல செயல்.

    தமிழக மேலாளர்களுக்கு மேலான்மைப் பயிற்சி கொடுக்க அங்கு சென்றது தங்களின் திறமையினைக் காட்டுகிறது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீனா சார்.. மிக்க மகிழ்ச்சி.. ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியா கவனித்து எழுதும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

      பூரி ஜெகன்னாதர்...கொனார்க் கோவில்பார்த்தேன்.. ஆனால்.கஜூரோஹா ம.பியில் அல்லவா இருக்கிறது??

      Delete
  4. // அந்த நிறுவனத்தின் சேர்மன், தன்னிடம் சிறப்பாக வேலை பார்த்த இளைஞர்கள் இருவரை நிறுவன இயக்குநர்களாக்கி இருக்கிறார்

    //

    நானும் உட்கணக்கீடு தணிக்கையாளராக சாதாரண பணியில் சேர்ந்து இன்று இயக்குனராய் இருப்பவன்தான். என் முதலாளியும் கிரேட்தான் :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக..

      இதில் முதலாளியும் கிரேட்...!! என் வேலை இது மட்டுமே என்று நினைக்காமல்...பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால் உயர்பதவி அடைந்த நீங்களும் கிரேட்..!!

      Delete
  5. அன்பு சுரேகா,

    இந்தப்பெயர் நன்றாக இருக்கிறது.
    நானும் அவ்வாறே இனி அழைக்கப் பழகுகிறேன்.

    "புதுசா ஒன்னும் கண்டுபிடிக்கலீங்க" என்று அடக்கத்தோடு தொடங்கி, தொடர்ந்து நடத்திவரும் உனது வலைப்பதிவை வாசித்தேன். மகிழ்ந்தேன்.பிரமித்துப்போனேன்.

    வற்றாத ஆற்றோட்டம்போல் உனது நடை.
    வாசிக்க வாசிக்க அலுப்புத் தட்டவேயில்லை.

    நிறையப் படைத்திருக்கிறாய். நிறைவாகப் படைத்திருக்கிறாய்.
    கொஞ்சம் கொஞ்சமாய்ப் படித்து உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன்.

    "நினைவில் காடுள்ள மிருகம் அதனைப் பழக்க முடியாது"-உனது வரிகள் குறள் மாதிரி இருக்கிறது.
    சிலிர்க்க வைக்கிறது.உன் உள்ளக்கிடக்கையையும்,உழைப்பையும் ஒரே வரியில் சொல்ல வாய்த்த இந்த வரிகளின் பின்னால உனது திறமையும், ஆளுமையும் தெரிகிறது.

    அருகிலேயே இருந்தும்-
    அறிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோம்.
    உன்னைக் கண்டுபிடித்து உரையாடிய அந்த நிமிடங்கள்... உள்ளத்துக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்த கணங்கள்.

    இனி விகடனை "ஆனந்த விகடன் " என்று அழைப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

    என்னைக்குறித்தும் எனது கவிதைகுறித்துமான உனது பதிவு உன் உயர்ந்த உள்ளத்தையும் பெருந்தன்மையையும் பறைசாற்றி நிற்கிறது.

    நன்றி.

    உனது முயற்சிகள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    மா.உ.ஞானவடிவேல்.
    9444905059

    ReplyDelete
    Replies
    1. நண்பா..!

      அந்தச் சிறுவயது அன்பும், பாசமும் வெண்மையானது, உண்மையானது என்பதை உன் உள்ளம் காட்டுகிறது.

      உன் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் தலைவணங்குகிறேன். நம் நட்பின் ஆழம் எண்ணி பெருமையடைகிறேன்.

      நீ உண்மையிலேயே திறமைசாலி! உனது திறமை இன்னும் மிளிரவேண்டும் என்பதே எனது ஆவல்!

      தொடர்ந்து தொடர்பில் இருப்போம்..

      Delete
  6. என் விகடனில் உங்க ப்ளாக் அறிமுகம் பார்த்தேன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !