சாராள் இல்லம்

அன்று குழந்தைகள் தினம்..! நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.

புதுக்கோட்டையில் இருக்கீங்களா?

ஆமாம்!

அப்ப மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமா? பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி வழங்கணும்!

சரி! பண்ணிட்டா போச்சு!

*************************************************

தினசரி அப்பா, அம்மாவுக்கிடையில் சண்டை! அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும்! ஒரு நாள் சண்டை முற்றி, இனிமேல் உன்னோடு வாழ்வதில்லை என்று முடிவெடுத்து அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்பாவிடம் மூன்று குழந்தைகள், அம்மாவிடம் இரண்டு குழந்தைகள் என குழந்தைகள் பிரிக்கப்பட...

அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று தன்னிடம் இருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு கண்காணாமல் சென்றுவிட்டார். அந்த இருவரில் மூத்தவனுக்கு வயது நான்கு, இளையவனுக்கு வயது ஒன்று! தன்னுடன் இருக்கும் ஒரே சொந்தம் தம்பிதானென்று இவனுக்குத்தெரியும். ஆனால் தம்பிக்கு அதுவும் தெரியாது. அந்தச்சிறு பிள்ளையை எப்படித்தூக்குவது என்றுகூடத்தெரியாமல், எல்லா சொந்தங்களும் இருந்தும், அனாதை வாழ்வை ஏற்கத்தொடங்கியிருக்கிறார்கள் அந்தச்சிறுவர்கள்.

எப்படியோ பாடுபட்டு வளர்ந்து, ஒரு நிலையில் தான் தம்பியை நன்கு வளர்க்க வேண்டுமென்று நினைத்து வேலைக்குச்செல்கிறான் மூத்தவன். அது ஒரு எடுபிடி வேலை! ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வர, அங்கிருந்த போலீஸ்காரர்களும், தியேட்டர் முதலாளியும் 'அனாதைதானே செத்தாலும் குற்றமில்லை' என்று வெடிகுண்டு இருப்பதைக்கண்டுபிடிக்க இவனைப்பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் 'தீ' என்று எழுதியிருக்கும் வாளியில் வெடிகுண்டு உண்மையிலேயே இருந்திருக்கிறது. அதை இவன் கண்டுபிடித்துத் தூக்கிப்போடும்போது வெடித்து, வீசப்பட்டு நினைவிழந்து போயிருக்கிறான்.

இவன் நிலை பார்த்த ஒரு பாட்டி இவனைத்தூக்கிச்சென்று சிகிச்சை அளித்து, இவன் எழும்போது மூன்று மாதங்கள் ஓடிப்போய்விட்டன. தான் வளர்த்த தம்பி எங்கிருக்கிறான் என்பதும் தெரியாமல், சூனியமான வாழ்க்கையில் சிரமப்பட்டு வேலைகள் பார்த்து, பல ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தினர் அப்பா, அம்மா, அண்ணன்கள், தம்பி என ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்திருக்கிறான். அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் அன்றாடங்காய்ச்சியாய் ஆகிப்போனான். இவனைப்பார்த்த மகிழ்ச்சியில், குடும்பத்தினர் சேர்ந்து இருக்க வற்புறுத்தியபோது சொன்னான்!

'எல்லாம் இருந்த என்னையே அனாதையாக்கி அழகுபாத்தீங்களே! யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும்! நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க! இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி!' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

***************************************************************************

அன்று மாலை நாங்கள் சென்ற இடம் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு ஐடிஐ இருக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள ஒரு வாடகை வீடு! அதன் பெயர் 'சாராள் இல்லம்'.

அதனை நிர்வகிப்பவர் திரு.டைசன்! அவர்தான் மேலே சொன்ன வாழ்க்கைக்கு உரியவர்!

மொத்தம் ஐம்பத்திரண்டு குழந்தைகள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை! நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் எண்ணவைத்த கொடுமையான வாழ்க்கைகள்!

டைசனும், அவர் மனைவி -அவரைப்போலவே வாழ்வில் சிரமப்பட்ட ஈழத்துப்பெண் - வளர்மதியும் சேர்ந்து இந்த இல்லத்தை நடத்துகிறார்கள். குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில், பல்வேறு அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே வளர்க்கிறார்கள் இந்தத்தம்பதியினர்! பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிப்போய் இருக்கிறார்கள். வருமானம் எதுவும் கிடையாது. நன்கொடைகள் திரட்டவும் வழியில்லை. தினம் தினம் யாராவது தரும் சிறு தொகைகளை வைத்து மிகமிகச்சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனாக்கள் வாங்கக்கூட கடன் சொல்லித்தான் ஓட்டவேண்டியிருக்கிறது என்று கண்ணீர் உகுக்கிறார். முகூர்த்த நாட்களில் பல இடங்களிலிருந்து உணவுகள் அளவுக்கு மிஞ்சி வந்துவிடுகின்றன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று மறுகுகிறார். அவருக்கு என்னால் இயன்ற உதவிகளைச்செய்துவருகிறேன்.
நான் சொன்னவுடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப்பொறுப்பாளர் திரு.நடராஜன் (சுப்ரா என அறியப்பட்டவர்) அவர்கள் உதவிகள் செய்திருக்கிறார்.

நம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம்...நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு , உடை உதவிகளைச்செய்யவேண்டும். இது நம் நிலைக்கும் மிகச்சிறு தொகையாகத்தான் இருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம். இரண்டு,மூன்று பதிவர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவை கொடுத்துவிட்டால், ஒரு குழந்தை தன் வாழ்வை உங்கள் பெயரால் வாழும். வாருங்கள் வடம் பிடிப்போம்.!

மற்ற விபரங்களுக்கு...

97894 97531 - சுரேகா

Comments

  1. அம்மா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற காவல்துறையில் வேலைபார்க்கும் பெண் நான் வரும்போது பழைய துணிகளை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல அம்மா போன் செஞ்சாங்க.

    அநாதைகளாக தெருவில் விடப்படும் குழந்தைகளை ஒரு காப்பகத்தில் வைத்து நடத்துகிறார்களாம்.

    அம்ருதா, ஆஷிஷின் துணிகள் கொண்டு போய் கொடுத்தேன். எங்கள் திருமண நாள் அன்று ஷ்பெஷல் சாப்பாடு போடச் சொல்லி பணம் கொடுத்திருந்தோம்.

    கண்டிப்பா செய்யலாம். நீங்க சொல்லியிருப்பதும் மைண்ட்ல வெச்சுக்கறேன்.

    ReplyDelete
  2. i too join with this when time permits!
    sau.

    ReplyDelete
  3. star weeka innum koncham extend
    panna sollunga tamilmanathil.
    sau.

    ReplyDelete
  4. முகூர்த்த நாட்களில்தான் உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல், வேறொரு நாளில் வழங்க முன்வந்தால் ஒரே நாளில் விருந்தும் அடுத்த நாளில் பட்டினி என்ற நிலையும் வராது.

    ReplyDelete
  5. வாங்க புதுகைத்தென்றல்..!

    ஆமா..நீங்க செஞ்சதுதான் சரி!

    நம்மைச்சுற்றி இதுபோல் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்! அவர்களுக்காக ஏதாவது துரும்பைக் கிள்ளிப்போட்டால் கூட மகிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete
  6. வாங்க திருவாரூரிலிருந்து சரவணன்.

    ஆமாம் ! நீங்க சொல்வது உண்மைதான்.!
    வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. குறைந்த பட்சம் தொகை கொடுப்பது குறித்து சொன்னால் முயற்சி பண்ணலாம் சார்! விசாரித்து சொல்லுங்கள் கொஞ்சம்.

    ReplyDelete
  8. சுரேகா, why you restrict this only to the writers why not the readers like us... As க.நா.சாந்தி லெட்சுமணன். said, try to get the minimum amount required per child per annum... Let me also try to contribute from my side & try to pass on this msg to my friends too.

    BTW, convey my hearty congrats & wishes to 'சாராள் இல்லம்' திரு.டைசன்.

    ReplyDelete
  9. முடிந்தவரை நானும் வீட்டருகே இருக்கும் அனாதை இல்லங்களுக்கு உதவி வருகிறேன் உங்கள் முயற்சிகளுக்கும் திரு டைசனுக்கும் வாழ்த்துக்கள் சுரேகா

    ReplyDelete
  10. வாங்க சாந்தி லெட்சுமணன்...

    உங்கள் மனதுக்கு மிக்க நன்றி!
    நீங்கள் உங்களுக்குத்தோன்றும் எந்தத்தொகைவேண்டுமானாலும் கொடுங்கள்.

    ஏதாவது ஒரு சிறு செலவுக்கு கட்டாயம் பயன்படும்.

    ReplyDelete
  11. நன்றி வெங்கடேசன்!
    உங்கள் உரிமைக்கு மீண்டும் நன்றி!

    நீங்கள் வாசகர் என்று யார் சொன்னது..?
    எங்கள் மனதில் பதிகிறீர்களே! பதிவர்தானே!? :)
    படிக்கும் யாராக இருந்தாலும் உங்களைப்போல், உதவும் மனநிலை இருந்தால் போதும்!

    மிக்க நன்றி! விபரங்களுக்கு மின் மடல் முகவரி:
    rsundartronics@gmail.com

    ReplyDelete
  12. வாங்க தேனம்மை லெக்ஷ்மணன்.

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  13. அருமை.ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மனம் மின்னுகிறது.கண்டிப்பாக என்னையும் இணைத்துக் கொள்வேன்.

    ReplyDelete
  14. அன்பின் சுரேகா

    மனம் நெகிழ்கிறது - அழுகிறது

    என்னையும் இணைத்துக் கொள்க - தொடர்பு கொள்க - என்ன செய்யலாம் - ஆலோசிப்போம்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  15. சுரேகா,

    தங்களுடைய ஈ-மெயில் முகவரி தர முடியுமா? தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  16. அவர்களுக்கு பணம் அனுப்பவேண்டுமானால் என்ன பெயருக்கு அனுப்பவேண்டும் போன்ற விவரங்களை வெளியிடுங்கள்.

    ReplyDelete
  17. வாங்க அன்புடன் அருணா..
    உங்கள் உளம் நிறை பாராட்டுக்கு நன்றிங்க!
    எல்லாம்..உங்களைப்போன்ற நண்பர்களும், நண்பர்கள் போன்ற நூல்களும் தந்த மனம்தான்!

    ReplyDelete
  18. வாங்க சீனா சார்!
    உங்கள் அன்பு இருந்தால்..என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

    மீண்டும் ஒரு பதிவிட்டு மற்ற விபரங்களைத்தருகிறேன்.

    ReplyDelete
  19. வாங்க அப்துல்லா..!

    இந்த நான்கெழுத்து வார்த்தைக்குப்பின்னால், ஒரு பிரம்மாண்டம் ஒளிந்திருப்பதாய்ப்படுகிறது..

    நன்றிப்பா!

    ReplyDelete
  20. வாங்க அமரபாரதி சார்!
    உங்கள் அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

    அந்தக்குழந்தைகளுக்காக நீங்கள் பேசிய அந்த இரவு அழைப்பு, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    எனது மின்மடல் முகவரி :
    rsundartronics@gmail.com

    ReplyDelete
  21. வாங்க சின்ன அம்மிணி! உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
    கண்டிப்பாக இன்னும் ஒரு பதிவாகவே வெளியிடுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !